Books / Periya Puranam

1. 1.0 பாயிரம்

1.0.1

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

1.0.1

1.0.2

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாருமால்;
தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்
மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ.

1.0.2

1.0.3

எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம்.

1.0.3

1.0.4

மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.

1.0.4

1.0.5

அளவிலாத பெருமையராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
அளவிலாசை துரைப்ப அறைகுவேன்.

1.0.5

1.0.6

தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்
பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்
பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்.

1.0.6

1.0.7

செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
அப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்
இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்.

1.0.7

1.0.8

மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
சேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய
தூய பொன்னணி சோழன் நீடூழிபார்
ஆய சீர் அநபாயன் அரசவை.

1.0.8

1.0.9

அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்
தெருளில் நீரிது செப்புதற்காம் எனின்
வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே.

1.0.9

1.0.10

இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.

1.0.10

1.0 பாயிரம் — note

1. திருமலைச் சருக்கம்