35. 6.1 திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் /முதல் பகுதி (1899 - 2598)
6.1.1
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்
6.1.1
6.1.2
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம்
மன்னிய சைவத் துறையின் வழி வந்த குடி வளவர்
பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால்
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர்
6.1.2
6.1.3
அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே
செப்பும் ஒலி வளர் பூகச் செழும் சோலை புறம் சூழ
ஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள் அன்றியே
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால்
6.1.3
6.1.4
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள்
விரி சுடர் மா மணிப் பதணம் மீது எறிந்த திரை வரைகள்
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில்
வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்குமால்
6.1.4
6.1.5
வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த
தளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித தட மலரால்
களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதி
இளம் பரிதி பல மலர்ந்தாற் போல்ப உள இலஞ்சி பல
6.1.5
6.1.6
உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும்
கிளர்ந்த திரு நீற்று ஒளியில் கெழுமிய நண் பகலும் அலர்ந்து
அளந்து அறியாப் பலூழி ஆற்றுதலால் அகல் இடத்து
விளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை
6.1.6
6.1.7
பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில்
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய்
நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்வூர்
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளதால்
6.1.7
6.1.8
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம்
சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப்
பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி
மாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியுமால்
6.1.8
6.1.9
காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும்
தாமரையும் புல்லிதமும் தயங்கிய நூலும் தாங்கித்
தூமரு நுண் துகள் அணிந்து துளி வருகண்ணீர் ததும்பித்
தேமரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால்
6.1.9
6.1.10
புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும்
கனை வானமுகில் கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின்
மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள்
6.1.10
6.1.11
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும்
பூழியுற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்ப
ஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும்
வாழி வளர் மறைச் சிறார் நெருங்கியுள மணி மறுகு
6.1.11
6.1.12
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம்
தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல்
உடுஎனு நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால்
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கியுள மருங்கு எல்லாம்
6.1.12
6.1.13
மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம்
புடை எங்கும் மலர்ப் பிறங்கல் புறம் எங்கும் மகப் பொலிவு
கிடை எங்கும் கலைச் சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள்
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி
6.1.13
6.1.14
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெம் குரு நீர்ப்
பொருவில் திருத் தோணிபுரம் பூம்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம்
பரவு திருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்
6.1.14
6.1.15
அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறை
கைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்
செப்பும் நெறி வழிவந்தார் சீவபாத இருதயர் என்று
இப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார்
6.1.15
6.1.16
மற்றவர் தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு
பெற்றியினார் எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார்
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார்
6.1.16
6.1.17
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார்
அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய்
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள்
6.1.17
6.1.18
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுந்த
ஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால்
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டு
ஏதமில் சீர் சிவ பாத இருதயர் தாம் இடர் உழந்தார்
6.1.18
6.1.19
. மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலை நின்றே ஆய சேவடிக் கமலம்
நினைவுற முன் பர சமயம் நிராகரித்து நீர் ஆக்கும்
புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார்
6.1.19
6.1.20
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித்
திருத்தோணி வீற்று இருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக்
கருத்து முடிந்திடம் பரவும் காதலியார் மணி வயிற்றில்
உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளதாக
6.1.20
6.1.21
ஆள் உடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல் முறைச் சடங்கு
நாள் உடைய ஈரைந்து திங்களினும் நலம் சிறப்பக்
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வ்வுறுநாள்
6.1.21
6.1.22
அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத்
திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க
6.1.22
6.1.23
தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி
எண் திசையும் தனி நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்க
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக
வண் தமிழ் செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப
6.1.23
6.1.24
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற
மிசை உலகும் பிறவுலகும் மேதினியே தனி வெல்ல
அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக
6.1.24
6.1.25
தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற
நாளுடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க
வாளுடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக
6.1.25
6.1.26
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப்
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும்
தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்கள் எலாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார்
6.1.26
6.1.27
அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்
எப்பெயரினோரும் அயல் எய்தும் இடையின்றி
மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே
ஓப்பில் களி கூர்வதோர் உவப்புற உரைப்பார்
6.1.27
6.1.28
சிவன் அருள் எனப் பெருகும் சித்தம் மகிழ் தன்மை
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார்
கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான்
அவன் வருநிமித்தம் இது என்று அதிசயித்தார்
6.1.28
6.1.29
பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும்
தே மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம்
தூ மருவு சோதி விரியத் துகள் அடக்கி
மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே
6.1.29
6.1.30
மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பில்
சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே
ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும்
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார்
6.1.30
6.1.31
பூத கண நாதர் புவி வாழ அருள் செய்த
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார்
ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும்
6.1.31
6.1.32
பயன் தருவ ப·றருவும் வல்லிகளும் மல்கித்
தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும்
வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம்
6.1.32
6.1.33
அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச்
சங்கம் படகம் கருவி தாரை முதலான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம்
6.1.33
6.1.34
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத்
தரும் குல மறைத் தலைவர் தம் பவன முன்றில்
பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே
அரும் திரு மகப் பெற அணைந்த அணி செய்வார்
6.1.34
6.1.35
காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார்
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார்
சூத நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச்
சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார்
6.1.35
6.1.36
மா மறை விழுக்குல மடந்தையர்கள் தமில்
தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்னத்
தூ மணி விளக்கொடு சுடர்க் குழைகள் மின்னக்
காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார்
6.1.36
6.1.37
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி
உண்ணிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார்
வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார்
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார்
6.1.37
6.1.38
செம் பொன் முதலான பல தான வினை செய்வார்
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார்
வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர்
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார்
6.1.38
6.1.39
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும்
நெய் அகில் நறுங்குறை நிறைத்த புகையாலும்
வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும்
தெய்வ மணம் நாறவரு செய் தொழில் விளைப்பார்
6.1.39
6.1.40
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர்
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின்
மேய விதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்
6.1.40
6.1.41
நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச்
சேம உதயப் பரிதியில் திகழ் பிரானைத்
தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத்
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார்
6.1.41
6.1.42
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால்
அரு மறை குழைத்த அமுது செய்து அருளுவாரைத்
தருமிறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே
திருமுலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார்
6.1.42
6.1.43
ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலே
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு
வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார்
நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்
6.1.43
6.1.44
தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும்
தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும்
சேய பொருள் திருமறையும் தீம் தமிழும் சிறக்க வரு
நாயகனைத் தாலாட்டும் நலம் பல பாராட்டினார்
6.1.44
6.1.45
வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார்
அரு மறைகள் தலை எடுப்ப ஆண்ட திருமுடி எடுத்துப்
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல்
திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார்
6.1.45
6.1.46
நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாது
போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால்
காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல்
தாமரைச் செங்கை களினால் சப்பாணி கொட்டினார்
6.1.46
6.1.47
விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார்
மதி தவழ் மாளிகை முன்றின் மருங்கு தவழ்ந்து அருளினார்
6.1.47
6.1.48
சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் தோகையரும் தாதியரும்
காழியர் தம் சீர் ஆட்டே கவுணியர் கற்பகமே என்று
ஏழ் இசையும் எவ் உலகும் தனித் தனியே
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப
6.1.48
6.1.49
திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும்
வருமகிழ்வு தலை சிறப்ப மற்றவர் மேல் செலவுகைத்தும்
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன்
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலிப் பிள்ளையார்
6.1.49
6.1.50
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு
உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலையச் செந்நின்று
கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள்
தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு அருளினார்
6.1.50
6.1.51
தாதியர் தங்கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்து
சோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்த
பாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின்
மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார்
6.1.51
6.1.52
சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழை
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும்
குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும்பொடி ஆடிய கோல
மறுகு இடைப் பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார்
6.1.52
6.1.53
மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்த
திங்கள் சேர் சடையார் தம் திரு அருட்குச் செய் தவத்தின்
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு மறையோடு உலகு உய்ய
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்து தலும்
6.1.53
6.1.54
நாவாண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப்
பூவாண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த
சேவாண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்கு
மூவாண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன்
6.1.54
6.1.55
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்
மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத்
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால்
கொண்டு எழலும் வெருக் கொண்டாற் போல் அழுவார் குறிப்பு அயலாய்
6.1.55
6.1.56
மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதி
நீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத்
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச்
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார்
6.1.56
6.1.57
பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர்
முன்செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும்
மின் செய் பொலங் கிண் கிணிக் கால் கொட்டி அவர் மீளாமை
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார்
6.1.57
6.1.58
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல்
இடை அறாப் பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய்
விடை உயர்த்தார் திருத் தோணிப் பற்று விடா மேன்மை அதாம்
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார்
6.1.58
6.1.59
பிள்ளையார்தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித்
தெள்ளு நீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவி
உள்ளிழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப் பெற்றார்
6.1.59
6.1.60
நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள் பல செய்வார்
நீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன்பின்
ஆராத விருப்பினால் அகமர் உடம்படிய நீர்
பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய்
6.1.60
6.1.61
மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மைக் காணாது
இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல்
முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார்
நிறை புனல் வாவிக் கரையில் நின்று அருளும் பிள்ளையார்
6.1.61
6.1.62
கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து
வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப
எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப
புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார்
6.1.62
6.1.63
மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார்
தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளை மைதானோ
செம் மேனி வெண் நீற்றார் திருத் தோணி சிகரம் பார்த்து
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள
6.1.63
6.1.64
அந்நிலையில் திருத்தோணி வீற்று இருந்தார் அருள் நோக்கால்
முன் நிலைமைத் திருத் தொண்டு முன்னி அவர்க்கு அருள் புரிவான்
பொன் மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்து அருளிச்
சென்னி இளம் பிறை திகழச் செழும் பொய்கை மருங்கு அணைந்தார்
6.1.64
6.1.65
திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும்
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த
அரு மறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார்
6.1.65
6.1.66
அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணை
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும்
தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள்
பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன
6.1.66
6.1.67
ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவான
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து
வார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி
6.1.67
6.1.68
எண்ணரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும்
கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள் புரிந்தார்
6.1.68
6.1.69
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார்
ஆவதனால் ஆளுடையப் பிள்ளையாராய் அகில
தேவருக்கும் முனிவர்க்கும் தெரிஅரிய பொருளாகும்
தாவில் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார்
6.1.69
6.1.70
சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்
6.1.70
6.1.71
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும்
அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும்
இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும்
துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்து எழுந்தார்
6.1.71
6.1.72
சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில்
நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்தமை நோக்கி
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா
6.1.72
6.1.73
எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்று
கைச் சிறியது ஒருமாறு கொண்டோச்சக் கால் எடுத்தே
அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண் துளி பெய்து
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி
6.1.73
6.1.74
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேல்
பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன்
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழியால்
6.1.74
6.1.75
எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை
மல்லல் நெடும் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்ப
பல் உயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால்
செல்லு முறை பெறுவதற்குத் திருசெவியைச் சிறப்பித்து
6.1.75
6.1.76
செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும்
மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்
தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார்
6.1.76
6.1.77
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட
அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார்
6.1.77
6.1.78
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும்
இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்
6.1.78
6.1.79
வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை
நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும்
போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும்
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்
6.1.79
6.1.80
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி
இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்று அருள
அருள் கருணைத் திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார்
6.1.80
6.1.81
வந்து எழும் மங்கலமான வான் அகத் துந்துபி முழக்கும்
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும்
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசைமுழக்கும்
அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க
6.1.81
6.1.82
மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர் தம்
நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவாமெய்ப்
பொறை பெருகும் தவமுனிவர் எனும் கடல் புடை சூழ
6.1.82
6.1.83
அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார் பால்
இணை இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின்
புணை அருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் பாகத்து
துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி
6.1.83
6.1.84
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும்
கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏகப்
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார்
6.1.84
6.1.85
ஈறில் பெரும் தவம் முன் செய்து தாதை எனப் பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடி
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும்
கூறும் அரும் தமிழின் பொருளான குறிப் போவார்
6.1.85
6.1.86
தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல்
காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார்
தோணி புரத்திறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம்
பேணும் மனத்தொடு முன்புகு காதலர் பின் சென்றார்
6.1.86
6.1.87
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டவர் அல்லாதார்
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி
இப்படி ஒப்பதோர் அற்புதம் எங்கு உளது என்று என்றே
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ
6.1.87
6.1.88
பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி
தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே
இங்கு எனை ஆளும் உடையான் உமையோடும் இருந்தான் என்று
அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்
6.1.88
6.1.89
இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே
சொன்முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும்
பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும்
பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார்
6.1.89
6.1.90
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே
நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும்
தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார்
6.1.90
6.1.91
காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து
ஆழிய கடலே அதன் இடை அமுதே அடியார் முன்
வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன்
ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்று அனை என்பார்
6.1.91
6.1.92
மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப்
பொறை அணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித்
துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார்
6.1.92
6.1.93
புண்ணிய முதலே புனை மணி அரை ஞாணொடு போதும்
கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும்
பண் இயல் கதியே பருவமது ஒரு மூவருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார்
6.1.93
6.1.94
என்று இனைய பல கூறி இருக்கு
மொழி அந்தணரும் ஏனையோரும்
நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண்
மேல் ஏந்தி நிரந்த போது
சென்று அணைந்த தாதையர் சிவபாத
இருதயர் தாம் தெய்வ ஞானக்
கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் மேல்
கொண்டு களி கூர்ந்து செல்ல
6.1.94
6.1.95
மா மறையோர் குழத்தின் உடன் மல்கு
திருத் தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில்
எறிந்து ஆர்க்கும் தன்மையாலே
பூ மறுகு சிவானந்தப் பெருக்காறு போத
அதன் மீது பொங்கும்
காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல்
விளங்கும் பெரும் காட்சித்தாக
6.1.95
6.1.96
நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர்
மாளிகை மேல் நெருங்கி அங்கண்
மாடு நிறை மடவார்கள் மங்கலமாம்
மொழிகளால் வாழ்த்தி வாசத்
தோடு மலி நறுமலரும் சுண்ணமும் வெண்
பொரியினொடும் தூவிநிற்பர்
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள்
புடை பெயரும் கொள்கைத்தாக
6.1.96
6.1.97
மங்கல தூர் இயந்து வைப்பர்
மறைச் சாமம் பாடுவார் மருங்கு வேதிப்
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண கும்பமும்
நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும்
பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்கு திரு மலி வீதிச் சண்பை நகர் வலம்
செய்து சாரும் காலை
6.1.97
6.1.98
தம் திரு மாளிகையின் கண் எழுந்து
அருளிப் புகும் பொழுது சங்க நாதம்
அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு
ஒலி தழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன்
அமர்ந்த துணைவி ஆகும்
பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா
மதுர மொழிப் பவள வாயார்
6.1.98
6.1.99
தூ மணி மாளிகையின் கண்
அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத
மா மறைகள் திரண்ட பெரும் திருத்
தோணி மன்னி வீற்று இருந்தார் செய்ய
கா மரு சேவடிக் கமலம் கருத்திலுற
இடையறாக் காதல் கொண்டு
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார்
திருத் தோணி நம்பர் கோயில்
6.1.99
6.1.100
காதல் உடன் அணைந்து திருக்
கழுமலத்துக் கலந்து வீற்று இருந்த தங்கள்
தாதை யாரையும் வெளியே தாங்க அரிய
மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து
போதம் முலை சுரந்து அளித்த புண்ணியத்
தாயாரையும் முன் வணங்கிப் போற்றி
மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக் கா
இறைஞ்ச விருப்பில் சென்றார்
6.1.100
6.1.101
பெருக் கோல் இட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த
வரிக் கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி
திருக் கோலக்கா எய்திதித் தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று
இருக்கோல் இட்டு அறிவு அரிய திருப்பாதம் ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார்
6.1.101
6.1.102
மெய்ந் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழுப் பொருளை வேணி மீது
பைந் நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள் பரித்து அருளுவானை
மைந் நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால்
கைந் நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப் பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை
6.1.102
6.1.103
கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த
செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம்
ஐயர் அவர் திரு அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த
வையம் எல்லாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே
6.1.103
6.1.104
காழி வரும் பெரும் தகையார் கையில் வரும் திருத் தாளக் கருவி கண்டு
வாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயில்
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித்
தாழும் மணிக் குழையார் முன் தக்க திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார்
6.1.104
6.1.105
உம்பர் உலகம் அதிசயிப்ப
ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கித்
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத் துறை
உள்ளோர் துதித்து மண் மேல்
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை
வாழ வந்து அருளும் மதலையாரும்
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளிச்
சண்பை நகர் சாரச் செல்வார்
6.1.105
6.1.106
செங்கமல மலர்க் கரத்துத் திருத்
தாளத்துடன் நடந்து செல்லும் போது
தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின்
மேல் தரித்துக் கொள்ள
அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து அருளி
அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும்
திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி புரத்
தோணிச் சிகரக் கோயில்
6.1.106
6.1.107
திருப் பெருகு பெரும் கோயில் சூழ
வலம் கொண்டு அருளித் திருமுன் நின்றே
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை
ஆக்கி அவற்றுள் ஒன்று
விருப்புறு பொன் திருத்தோணி வீற்று இருந்தார்
தமைப் பாட மேவும் காதல்
பொருத்தமுற அருள் பெற்றுப் போற்றி எடுத்து
அருளினார் பூவார் கொன்றை
6.1.107
6.1.108
எடுத்த திருப் பதிகத்தின் இசை
திருத் தாளத்தினால் இசைய ஒத்தி
அடுத்த நடை பெறப் பாடி ஆர்வமுற வணங்கிப்
போந்து அலைநீர்ப் பொன்னி
மடுத்த வயல் பூந் தராய் அவர் வாழ மழ
விளங் கோலத்துக் காட்சி
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை
ஞானக் கொண்டலார் தாம்
6.1.108
6.1.109
அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார்
தமை முன்னம் அளித்த தாயார்
முன் உதிக்க முயன்ற தவத் திரு நன்னி பள்ளி
முதல் மறையோர் எல்லாம்
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம்
துவைப்ப மறைகள் ஓதிக்
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து
கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார்
6.1.109
6.1.110
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண்
களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே
எங்கணும் நீள் பதி மருங்கில் இரு பிறப்பாளரும்
அல்லா ஏனையோரும்
பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக்
குழாங் கொண்டு புகலியார் தம்
சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து கழல்
பணியும் சிறப்பின் மிக்கார்
6.1.110
6.1.111
வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு
மறையவர்க்கும் மற்று உளோர்க்கும்
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன
சிறப்பின் செய்கை
தம் தம் அளவினில் விரும்பும் தகைமையினால்
கடன் ஆற்றும் சண்பை மூதூர்
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எவ் உலகும்
ஏத்தும் நாளில்
6.1.111
6.1.112
செழும் தரளப் பொன்னி சூழ் திரு
நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்து அணியும் சடையாரை எங்கள்
பதியினில் கும்பிட்டு அருள அங்கே
எழுந்து அருள வேண்டும் என இசைந்து
அருளித் தோணி வீற்று இருந்தார்
பாதம் தொழும் தகைமையால் இறைஞ்சி அருள்
பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார்
6.1.112
6.1.113
தாது அவிழ் செந்தாமரையின் அக
இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும்
பொறா அன்பு புரிந்த சிந்தை
மாதவம் செய் தாதையார் வந்து எடுத்துத்
தோளின்மேல் வைத்துக் கொள்ள
நாதர் கழல் தம் முடிமேல் கொண்ட கருத்து
உடன் போந்தார் ஞானம் உண்டார்
6.1.113
6.1.114
தேன் அலரும் கொண்றையினார்
திரு நன்னி பள்ளியினைச் சாரச் செல்வார்
வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது
எப் பதி என்ன மகிழ்ச்சி எய்திப்
பானல் வயல் திரு நன்னி பள்ளி எனத்
தாதையர் பணிப்பக் கேட்டு
ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் சொல்
தொடை மாலை நவிலல் உற்றார்
6.1.114
6.1.115
காரைகள் கூகை முல்லை
என நிகழ் கலை சேர் வாய்மைச்
சீர் இயல் பதிகம் பாடித் திருக்
கடைக் காப்புத்தன்னில்
நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி
உள்குவார் தம்
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது
எனும் பெருமை வைத்தார்
6.1.115
6.1.116
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம்
6.1.116
6.1.117
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட
நம் பெரும் தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத் தொண்டரோடு
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம்
6.1.117
6.1.118
காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டி
பூவணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்தி
ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார்
6.1.118
6.1.119
திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்
பெரு மறை ஓசை மல்கப் பெரும் திருக் கோயில் எய்தி
அரு மறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணிநல் சங்கத்தின்
தரு முறை நெறி அக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார்
6.1.119
6.1.120
கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி போந்து
மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏந்தி
நிறைபுனல் திருச் சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார்
6.1.120
6.1.121
பன்னகப் பூணினாரைப் பல்லவ னீச்சரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்து இசைப்பதிகம் பாடி
பொன்னி சூழ் புகாரில் நீடு புனிர்தம் திருச்சாய்க் காட்டு
மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார்
6.1.121
6.1.122
. வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம் கொண்டு புக்குத்
தேன் அலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண்புகார் என்று
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை
6.1.122
6.1.123
சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப்
பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும்
ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடு
ஆரு மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே
6.1.123
6.1.124
பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு
சென்னியர் திருவெண் காட்டுத் திருத் தொண்டர் எதிரே சென்று
இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க
மன்னுசீர் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார்
6.1.124
6.1.125
முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச்
சித்த நீடு உவகை யோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்குப்
பத்தராம் அடியார் சூழப் பரமர் கோயிலைச் சூழ் வந்து
நித்தனார் தம் முன்பு எய்தி நிலம் உறத் தொழுது வீழ்ந்தார்
6.1.125
6.1.126
மெய்ப் பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச்
செப்பரும்பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி
ஒப்பரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்
6.1.126
6.1.127
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார்
6.1.127
6.1.128
தோணி வீற்று இருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூரச்
சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய
வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்
6.1.128
6.1.129
வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திரப் பள்ளி வாசம்
செய் பொழில் குருகா வூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டு
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை
6.1.129
6.1.130
அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள்
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவிப் போற்றி
உய் வகை மண் உளோருக்கு உதவிய பதிகம் பாடி
எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில்
6.1.130
6.1.131
திரு நீல கண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின்
வருநீர்மை இசைப்பாட்டு மதங்க சூளா மணியார்
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத்
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார்
6.1.131
6.1.132
பெரும் பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர் கொள்ளச்
சுரும்பு ஆர் கமல மலர்த் துணைப் பாதம் தொழுது எழுந்து
விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய்ம் மொழிகளால் துதித்து
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார்
6.1.132
6.1.133
அளவு இலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயா நீர்
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே
இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு
கள நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும் கவுணியனார்
6.1.133
6.1.134
கோயிலினில் புற முன்றில் கொடு புக்குக் கும்பிடுவித்து
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என
ஆய புகழ்ப் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி
மேய தொடைத் தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார்
6.1.134
6.1.135
தான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால்
ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை
மான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்க
ஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார்
6.1.135
6.1.136
யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி
வாழி திருத் தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத்
தாழும் இரு சிறைப் பறவை படிந்த தனி விசும்பு இடை நின்று
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார்
6.1.136
6.1.137
எண்ணரும் சீர் திருத்தோணி எம் பெருமான் கழல் பரவிப்
பண் அமையாழ் இசை கூடப்பெரும் பாணர் பாடிய பின்
கண் நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப
6.1.137
6.1.138
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த
வெள்ள நீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப் பதிகம்
உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த்
தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்பு உறத் தொழுதார்
6.1.138
6.1.139
காழியர் தவப்பயனாம் கவுணியர் தம் தோன்றலார்
ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசை
யாழின் முறைமையின் இட்டே எவ் உயிரும் மகிழ்வித்தார்
ஏழ் இசையும் பணி கொண்ட நீல கண்ட யாழ்ப்பாணர்
6.1.139
6.1.140
சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக இசை யாழின்
நெறியில் இடும் பெரும் பாணர் பின்னும் நீர் அருள் செய்யும்
அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன்
பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார்
6.1.140
6.1.141
மற்றதற்குப் பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள
பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச்
சொல் தமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார்
6.1.141
6.1.142
சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞான சம்பந்தர்
பரவு திருத் தில்லை நடம் பயில்வாரைப் பணிந்து ஏத்த
விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில்
தர இசையும் குறிப்பு அறியத் தவ முனிவர்க்கு அருள் செய்தார்
6.1.142
6.1.143
பிள்ளையார் அருள் செய்யப் பெரும் தவத்தால் பெற்று எடுத்த
வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப
வெள்ளி மால் வரை என்னத் திருத் தோணி வீற்று இருந்த
புள்ளி மான் உரியாரைத் தொழுது அருளால் புறப்பட்டார்
6.1.143
6.1.144
தாழ்வில் யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும்
மேவிய சீர் அடியார்கன் புடை வர வெம் குரு வேந்தர்
பூவின் மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்து போய்த்
தேவர்கள் தம் பெரும் தேவர் திருத் தில்லை வழிச் செல்வார்
6.1.144
6.1.145
நள்ளிருட்கண் நின்று ஆடுவார்
உறை பதி நடுவு கண்டன போற்றி
முள்ளிடைப் புற வெள் இதழ்க் கோதை
முகிழ் விரி மணம் சூழப்
புள்ளிடைத் தடம் பழனமும் படு கரும்பு
உடை கழிந்திடப் போந்து
கொள்ளிடத் திரு நதிக்கரை அணைந்தார்
கவுணியர் குல தீபர்
6.1.145
6.1.146
வண்டிரைத்து எழு செழு மலர்ப்
பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித்
தண் தலைப் பல வளத்தொடும் வருபுனல்
தாழ்ந்து சேவடித்தாழ
தெண் திரைக் கடல் பவழமும் பணிலமும்
செழு மணித் திரள் முத்தும்
கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர்
கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி
6.1.146
6.1.147
பல்கு தொண்டர் தம் குழாத்
தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழச்
செல் கதிப் பயன் காண்பவர் போல் களி
சிந்தை கூர் தரக் கண்டு
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும்
வணங்க வேண்டின எல்லாம்
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர்
ஞான ஆரமுது உண்டார்
6.1.147
6.1.148
செங்கண் ஏற்றவர் தில்லையே
நோக்கி இத் திருந்து உலகினிற்கு எல்லாம்
மங்கலம் தரு மழவிளம் போதகம் வரும்
இரு மருங்கு எங்கும்
தங்கு புள்ளொலி வாழ்த்து உரை எடுத்து
முன் தாமரை மது வாசப்
பொங்கு செம்முகை கரம் குவித்து அலர்
முகம் காட்டின புனல் பொய்கை
6.1.148
6.1.149
கலவ மென் மயில் இனம் களித்து
தழைத்திடக் கடி மணக் குளிர் கால் வந்து
உலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து
எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப
இலகு செந்தளிர் ஒளி நிறம் திகழ் தர
இரு குழை புடை ஆட
மலர் முகம் பொலிந்து அசைய மென்
கொம்பர் நின்று ஆடுவ மலர்ச் சோலை
6.1.149
6.1.150
இழைத் தடம் கொங்கை
இமய மாமலைக் கொடி இன் அமுது என ஞானம்
குழைத்து அளித்திட அமுது செய்து
அருளிய குருளையார் வரக் கண்டு
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர்
வண்ண நுண் துகள் தூவித்
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து
வணங்கின தடம் பணை வயல் சாலி
6.1.150
6.1.151
ஞாலம் உய்ந்திட ஞானம்
உண்டவர் எழுந்து அருளும் அந் நலம் கண்டு
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து
அணை சீத மாருதம் வீசச்
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும்
தன்மையில் களி கூர்வ
போல் அசைந்து இரு புடைமிடைந்து
ஆடின புறம்பு அணை நறும் பூகம்
6.1.151
6.1.152
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ்
எல்லையில் மறையவர் பயில் வேள்விச்
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின்
செழும் புகை பரப்பாலே
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார்
தாம் அணைவுற முன்னே
நிவந்த நீல நுண் துகில் விதானத்தது
போன்றது நெடுவானம்
6.1.152
6.1.153
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அணைத்தின் ஆகரம் ஆன
மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி
நெருங்கு தில்லை சூழ் நெடுமதில் தென் திரு வாயில் நேர் அணித்தாக
6.1.153
6.1.154
பொங்கு கொங்கையில் கறந்த மெய் ஞானமாம் போனகம் பொன் குன்றம்
மங்கை செங்கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று
அங்கண் வாழ் பெரும் திருத்தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி
எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து எதிர் கொள அணைவார்கள்
6.1.154
6.1.155
வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பு இடை நிறைந்து ஓங்க
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆரச்
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லிக்
கோதிலாதவர் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு புக்கார்
6.1.155
6.1.156
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசைத் திருவாயில்
எல்லை நீங்கி உள் புகும் திருமருங்கு நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ
மல்லல் ஆவண மறுகிடைக் கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத் தொழுது அணைந்தனர் தூயோர்
6.1.156
6.1.157
மலர்ந்த பேர் ஒளி குளிர் தரச் சிவமணம் கமழ்ந்து வான் துகள் மாறிச்
சிலம்பு அலம்பு சேவடியவர் பயில் உறும் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ் திருவீதி கண் களி செய்யப்
பலன் கொள் மைந்தனார் எழுநிலைக் கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி
6.1.157
6.1.158
நீடுநீள் நிலைக் கோபுரத்துள் புக்கு நிலவிய திரு முன்றின்
மாடு செம் பொனின் மாளிகை வலம் கொண்டு வானுற வளர் திங்கள்
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அருமறை தொடர்ந்து ஏத்த
ஆடுகின்றவர் முன்புற அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்
6.1.158
6.1.159
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட
அந்தம் இல்லவர் அணுகி முன் தொழுதிரு அணுக்கனாம் திருவாயில்
சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் சிறிய செங்கை யேற
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார்
6.1.159
6.1.160
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமே ஆன அம்பல முந்தம்
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனிக் கூத்தும்
கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழிப்
புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு
6.1.160
6.1.161
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின் கண்
அணையும் ஐம் பொறி அளவினும் எளிவர அருளினை எனப் போற்றி
இணை இல் வண் பெருங் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில்
புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி
6.1.161
6.1.162
ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால்
வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும்
காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி
6.1.162
6.1.163
ண்ணார் பதிகத் திருக் கடை காப்புப் பரவி
உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும்
விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக்
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார்
6.1.163
6.1.164
முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று
சொல் மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி
பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற
பொன் மாளிகையை வலம் கொண்டு புறம் போந்தார்
6.1.164
6.1.165
செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம்
மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள்
நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண்
அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்டகையார்
6.1.165
6.1.166
செய்ய சடையார் திருவேட்களம் சென்று
கை தொழுது சொல் பதிகம் பாடிக் கழுமலக் கோன்
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்றாடும்
ஐயன் திருக் கூத்துக் கும்பிட்டு அணை உறும் நாள்
6.1.166
6.1.167
கைம் மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து
மெய்ம் மாலைச் சொல் பதிகம் பாடி விரைக் கொன்றைச்
செம்மாலை வேணித் திரு உச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்டு அரும் தமிழும் பாடினார்
6.1.167
6.1.168
பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி
நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார்
நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள்
ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார்
6.1.168
6.1.169
ஆங்கு அவர் தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே
ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார்
தேன் கமழும் சோலைத் திருவேட்களம் கடந்து
பூங்கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்கண்
6.1.169
6.1.170
அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை
முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும்
தொண்டத் தகைமைக் கண நாதராய்த் தோன்றக்
கண்ட அப் பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார்
6.1.170
6.1.171
செல்வம் பிரிவு அறியாத் தில்லை வாழ் அந்தணரும்
எல்லையில் சீர்ச் சண்பை இளவேறு எழுந்து அருளி
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள்
6.1.171
6.1.172
பொங்கி எழும் காதல் புலன் ஆகப் பூசுரர் தம்
சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த
பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும்
செங்கையொடும் சென்று திருவாயில் உட்புக்கார்
6.1.172
6.1.173
ஒன்றிய சிந்தை உருக உயர் மேருக்
குன்று அனைய பேர் அம்பலம் மருங்கு கும்பிட்டு
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்கக் கூத்தர் எதிர்
சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப் படிக் கீழ்
6.1.173
6.1.174
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால்
பாடினார் பின்னும் அப்பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில்
நீடு வாழ் தில்லை நான் மறையோர் தமைக் கண்ட அந் நிலை எல்லாம்
கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்துச் சிற்றம் பலம் எனக் கூறி
6.1.174
6.1.175
இன்ன தன்மையில் இன் இசைப்
பதிகமும் திருக்கடைக் காப்பு ஏத்தி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து
எதிர் வந்து முன் நின்று ஆடும்
பின்னுவார் சடைக் கூத்தர் பேர் அருள்
பெறப் பிரியாத விடைபெற்றுப்
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து
எழுந்து போந்து அணைந்தனர் புறமுன்றில்
6.1.175
6.1.176
அப் புறத்து இடை வணங்கி அங்கு
அருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்புறத் தொழுது எழுந்து உடன்
போதரப் போற்றிய புகழ்ப் பாணர்
நற்பதம் தொழுது அடியனேன் பதி
முதல் நதி நிவாக்கரை மேய
ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும்
என்று உரை செய அது நேர்வார்
6.1.176
6.1.177
பொங்கு தெண்திரைப் புனித நீர்
நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும்
தவ முனிவரும் செல்லச்
செங்கை யாழ்த் திரு நீலக் கண்டப்
பெரும் பாணருடன் சேர
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன்
வரவந்தார்
6.1.177
6.1.178
இரும் தடங்களும் பழனமும் கடந்து
போய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்றுற நீல கண்டப்
பெரும்பாணர் வணங்கிக் கார்
நெருங்கு சோலை சூழ் இப்பதி
அடியேன்பதி என நெடிது இன்புற்று
அருங்கலைச் சிறு மழ இளங்களிறனார்
அங்கணைந்து அருள் செய்வார்
6.1.178
6.1.179
ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு
செய்வாறு எனச் சிறப்பு உரைத்து அருளி அச் செழும்பதி இடம் கொண்ட
மை கொள் கண்டர் தம் கோயில் உட்புக்கு வலம் கொண்டு வணங்கி பார்
உய்ய வந்தவர் செழும் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்
6.1.179
6.1.180
அங்கு நின்று எழுந்து அருளி மற்றவருடன்
அம்பொன்மா மலை வல்லி
பங்கர் தாம் இனிது உறையும் நற் பதி பல
பரிவொடும் பணிந்து ஏத்தித்
துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப்
போய்த் தொல்லை வெங்குரு வேந்தர்
செங்கண் ஏற்றவர் திரு முது குன்றினைத்
தொழுது சென்று அணைகின்றார்
6.1.180
6.1.181
மொய் கொள் மா மணிக் கொழித்து
முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை
இசையொடும் புனைந்து ஏத்தி
செய் தவத் திரு முனிவரும் தேவரும்
திசையெலாம் நெருங்கப் புக்கு
ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில்
ஆதரவுடன் சென்றார்
6.1.181
6.1.182
வான நாயகர் திருமுது குன்றினை
வழிபட வலம் கொள்வார்
தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள்
துணை மலர் மொழிந்து ஏத்தி
ஞான போதகர் நம்பர் தம் கோயிலை
நண்ணி அங்கு உள்புக்கு
தேன் அலம்பு தண் கொன்றை யார் சேவடி
திளைத்த அன்பொடு தாழ்ந்தார்
6.1.182
6.1.183
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து
எழும் எனும் தண் தமிழ் தொடை சாத்தி
வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதன்
இடை வைகுவார் மணி வெற்புச்
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு
தொடுத்த சொல் தொடை மாலை
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே
மேவினார் சில நாள்கள்
6.1.183
6.1.184
ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம்
அணைந்து அருமறை ஓசை
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற
ஒரு தனிப் பரஞ்சோதிப்
பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு
பணிவுற்றுப் பரவு சொல் தமிழ் மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும்
இசைப் பதிகமும் தெரிவித்தார்
6.1.184
6.1.185
கருவரைப்பில் புகாதவர் கை தொழும்
ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப்
பெருவரத்தினில் பெற்றவர் தம் உடன்
திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார்
6.1.185
6.1.186
முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது
தந்தையார்பியல் மேல் இருப்பார் தவிர்ந்து
அந்தணாளர் அவர் அருகே செலச்
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர்
6.1.186
6.1.187
ஆதியார் தம் அரத்துறை நோக்கியே
காதலால் அணைவார் கடிது ஏகிட
தாதையாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய
6.1.187
6.1.188
மறை அனைத்தும் ஒரு வடிவாம் என
நிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத்
துறை அலைக் கங்கை சூடும் அரத்துறை
இறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார்
6.1.188
6.1.189
பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை
ஆசை சங்கரர்கு ஆயின தன்மையால்
தேசு மிக்க திருவுரு ஆனவர்
ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார்
6.1.189
6.1.190
இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி ஆனவர்
சிந்தை ஆரமுதாகிய செம் சடைத்
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார்
6.1.190
6.1.191
மாறன் பாடி எனும் பதி வந்துற
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய் துறப் பிள்ளையார்
ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட
6.1.191
6.1.192
உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக்
கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய்
வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன்
6.1.192
6.1.193
அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச்
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார்
வெற்றி மாதவத்தோருடன் மேவினார்
6.1.193
6.1.194
இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய்
மன்னனார் தம் வழி வருத்தத் தினை
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச்
சென்னியாற்றர் திருவுளம் செய்தனர்
6.1.194
6.1.195
ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்
6.1.195
6.1.196
நீடு வாழ் பதி யாகும் நெல் வயலின்
மாட மாமணை தோறும் மறையோர்க்குக்
கூடு கங்குல் கனவில் குலமறை
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின்
6.1.196
6.1.197
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முகத்தின் சிவிகை மணிக் குடை
ஆன சின்னம் நம் பால் கொண்டு அருங்கலைக்
கோன் அவன் பால் அணைந்து கொடும் என
6.1.197
6.1.198
அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும்
சிந்தையோடும் செழுநீர் அரத்துறை
இந்து சேகரர் கோயில் வந்து எய்தினர்
6.1.198
6.1.199
ஆங்கு மற்ற அருள் அடியாருடன்
ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார்
6.1.199
6.1.200
சால மிக்க வியப்புறு தன்மையின்
பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின்
காலம் எய்திடக் காதல் வழிப்படும்
சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார்
6.1.200
6.1.201
திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால்
துங்க வெண் குடை தூய சிவிகையும்
பொங்க ஊதும் பொருவரும் சின்னமும்
அங்கண் நாதர் அருளினால் கண்டனர்
6.1.201
6.1.202
கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து
எண்திசைக்கும் விளக்கி இவையாம் எனத்
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து
அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்
6.1.202
6.1.203
சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன்
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார்
6.1.203
6.1.204
மாசில் வாய்மை நெல் வாயின் மறையவர்
ஆசில் சீர்ச் சண்பை ஆண் தகையார்க்கு எதிர்
தேசுடைச் சிவிகை முதலாயின
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார்
6.1.204
6.1.205
இத்தலை இவர் இன்னணம் ஏகினார்
அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இரா
முத்த நற் சிவிகை முதல் ஆயின
உய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார்
6.1.205
6.1.206
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என
உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின்
6.1.206
6.1.207
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர்
தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம்
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும்
6.1.207
6.1.208
மாலை யாமம் புலர் உறும் வைகறை
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி
கோல மேனியர் ஆய்க் கைம் மலர் குவித்து
ஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர்
6.1.208
6.1.209
போத ஞானப் புகலிப் புனிதரைச்
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக்
காதல் செய்பவன் போலக் கருங்கடல்
மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்
6.1.209
6.1.210
ஆய போழ்தின் அரவு எனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார்
6.1.210
6.1.211
வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார் பொழில் காழி நல்ன்னாடர் முன்
அந்தமில் சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர்
6.1.211
6.1.212
என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன்
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்று உளரர் அருள் என்று வணங்கினார்
6.1.212
6.1.213
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர்
செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள்
எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே
6.1.213
6.1.214
எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள்
வந்தவாறு மற்று எவ் வணமோ என்று
சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை
புந்தியார் அப் புகன்று எதிர் போற்றுவார்
6.1.214
6.1.215
பொடி அணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம் அருளே இதுவாம் எனப்
படி இலாத சொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்
6.1.215
6.1.216
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார்
மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று
ஆதியார் அருள் ஆதலின் அஞ்செஎழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம்
6.1.216
6.1.217
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்தக்
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி
வண்டு அறாப் பொலி மலர் மழை ஆர்த்தது வானம்
6.1.217
6.1.218
விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின்
கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும்
களைகண் ஆர்த்ததொர் கருணையின் ஆர்த்தன முத்து
விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே
6.1.218
6.1.219
பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார்
அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரைத் தரங்கம்
மல்கு பால் கடல் வளர்மதி உதித்தது என வந்தார்
6.1.219
6.1.220
நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர்க்கை மேல் குவித்தே
ஆடு கின்றனர் அயர்ந்தனர் அளவில் ஆனந்தம்
கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார்
6.1.220
6.1.221
செய்ய பொன் புனை வெண்டரளத்து அணிசிறக்க
சைவ மா மறைத் தலைவர் பால் பெறும் தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும்
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத
6.1.221
6.1.222
சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவே
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச்சின்னம்
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட
பெற்ற பாலறா வாயன் வந்தான் எனப் பிடிக்க
6.1.222
6.1.223
புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலங்கிளர் தாரை
அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத
6.1.223
6.1.224
தெருளும் மெய்க்கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை
இருளும் நீங்கவும் எழுது சொன் மறை அளிப்பவர் தாம்
பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு
அருளும் அங்கணர் திரு அரத் துறையை வந்து அணைந்தார்
6.1.224
6.1.225
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆகச்
சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல
அந்தி நாண்மதி அணிந்தவர் கோயிலுள் அடைந்தார்
6.1.225
6.1.226
மன்னு கோயிலை வலம் கொண்டு திரு முன்பு வந்து
சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார்
என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும்
பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார்
6.1.226
6.1.227
சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர்
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி
நீடினார் திரு அருள் பெரும் கருணையே நிகழப்
பாடினார் திருப் பதிகம் ஏழ் இசையொடும் பயில
6.1.227
6.1.228
இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு
திசை விளங்கிடத் திரு அருள் பெற்றவர் சில நாள்
அசைவில் சீர்த் தொண்டர் தம் உடன் அப்பதி அமர்ந்தார்
6.1.228
6.1.229
தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சி
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத்
தாவில் அன்பர்கள் தம் உடன் தொழுது பின் சண்பைக்
காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார்
6.1.229
6.1.230
விளங்கு வேணு புரத்து திருத் தோணி வீற்று இருந்த
களம் கொள் கண்டர் தம் காதலியார் உடன் கூட
உளம் கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி
வளம் கொள் பூம் புனல் புகலிமேல் செல மனம் வைத்தார்
6.1.230
6.1.231
அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி
நண்ணு பேர் அருளால் விடை கொண்டு போய் நடம் கொண்டு
உள் நிறைந்த பூங்கழல் இணை உச்சி மேல் கொண்டே
வெள் நிலா மலர் நித்திலச் சிவிகை மேல் கொண்டார்
6.1.231
6.1.232
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்கப்
கவிகை வெண்மதிக் குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்பக்
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆடப்
புவிகை மாறு இன்றிப் போற்ற வந்து அருளினார் போந்தார்
6.1.232
6.1.233
மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்
குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்
முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்
6.1.233
6.1.234
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அப்பதியோர்
புடை இரண்டினும் கொடியொடு பூந்துகில் விதானம்
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி
மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார்
6.1.234
6.1.235
அனைய செய்கையால் எதிர் கொளும் பதிகள் ஆனவற்றின்
வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப்
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார்
பனை நெடும் கை மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர்
6.1.235
6.1.236
அங்கு அணைந்து இளம்பிறை அணிந்த சென்னியர்
பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின்
துங்க நீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்
6.1.236
6.1.237
மண்ணினில் பொலி குலமலையர் தாம் தொழுது
எண் இல் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில்
நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப்
பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்
6.1.237
6.1.238
பாவின இசை வழிபாடி அங்கு அகன்றி
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார்
மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார்
மேவிய பெரும் திரு விசய மங்கையில்
6.1.238
6.1.239
அந்தணர் விசய மங்கையினில் அங்கணர்
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன்
வந்தனை செய்து கோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்
6.1.239
6.1.240
விசய மங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள்
அசைவில் வைகாவினில் அணைந்து பாடிப் போந்து
இசை வளர் ஞான சம்பந்தர் எய்தினார்
திசை உடை ஆடையர் திருப்புறம் பயம்
6.1.240
6.1.241
புறம் பயத்து இறைவரை வணங்கிப் போற்றி செய்
திறம் புரி நீர்மையில் பதிகச் செம்தமிழ்
நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய
அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார்
6.1.241
6.1.242
அத் திருப்பதி பணிந்து அகன்று போய் அனல்
கைத் தலத்தவர் பதி பிறவும் கை தொழு
முத் தமிழ் விரபராம் முதல்வர் நண்ணினார்
செய்த் தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர்
6.1.242
6.1.243
திரு மலி புகலி மன் சேரச் சேய் ஞலூர்
அரு மறையவர் பதி அலங்கரித்து முன்
பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே
வருமுறை எதிர் கொள வந்து முந்தினார்
6.1.243
6.1.244
ஞான சம்பந்தரும் நாயனார் சடைத்
தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும் பதி என்று நித்தில
யானமுன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார்
6.1.244
6.1.245
மா மறையாளர் வண் புகலிப் பிள்ளையார்
தாம் எழுந்து அருளிடத் தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில் வந்து அருளக் கண்டனர்
ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர்
6.1.245
6.1.246
களித்தனர் புண்ணியக் கரக வாசநீர்
தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர்
துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம்
அளித்தவர் கோயிலுள் அவர் முன்பு எய்தினார்
6.1.246
6.1.247
வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்
பொங்கிய விருப்பினால் புடை வலம் கொடு
செங்கைகள் சென்னிமேல் குவித்துச் சென்று புக்கு
அங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்
6.1.247
6.1.248
வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல்
காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார்
பாதகப் பயன் பெறும் பரிசு பாடினார்
6.1.248
6.1.249
இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே
நன்னெடும் பதி உளோர் நயக்க வைகிய
பின்னர் வெண்பிறை அணி வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார்
6.1.249
6.1.250
ஆங்கணி சொன் மலர் மாலை சாத்தி அப்
பாங்கு பந்தணை நலூர் பணிந்து பாடிப் போய்த்
தீங்கு தீர் மா மறைச் செம்மை அந்தணர்
ஓங்கும் ஓமாம் புலியூர் வந்து உற்றனர்
6.1.250
6.1.251
மற்ற நல் பதி வட தளியின் மேவிய
அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்ச்
சொல் தொடைபாடி அங்கு அகன்று சூழ் மதில்
பொன் பதி வாழ் கொளி புத்தூர் புக்கனர்
6.1.251
6.1.252
சீர் வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர்
பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்
6.1.252
6.1.253
நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பலர் செந்தமிழ் மாலை பாடி நின்று
எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்
6.1.253
6.1.254
அப்பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன்
பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர்
பைப் பணியவர் கருப் பறியல் ஊரினில்
6.1.254
6.1.255
பரமர் தம் திருக் கருப் பறியல் ஊரினைச்
சிரபுரச் சிறுவர் கை தொழுது செந்தமிழ்
உரை இசை பாடி அம் மருங்கின் உள்ளவாம்
சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார்
6.1.255
6.1.256
மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள
வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி
எணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப
இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக்
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செம்சாலி
கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத்
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும்
திருப் பிரம புரம் சாரச் செல்லும்போது
6.1.256
6.1.257
பிள்ளையார் எழுந்து அருளக் கேட்ட செல்வப்
பிரமபுரத்து அருமறையோர் பெருகு காதல்
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்கத் தோணி மேவும்
உமைப் பாகர் கழல் வணங்கி உவகை கூர
வெள்ள மறை ஒலிபெருகு மறுகு தோறும் மிடை
மகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளுபுனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும்
கொடிகள் நிரைத்து எதிர் கொள் சிறப்பில் செய்வார்
6.1.257
6.1.258
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க
அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப்
பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப் புது
மலரும் நறும் துகளும் பொரியும் தூவி
வாரணங்கு முலை உமையாள் குழைத்த
செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச்
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது
செழுந்தரளக் குடை நிழல் கீழ் சென்று கண்டார்
6.1.258
6.1.259
கண்ட பொழுதே கைகள் தலைமேல் கொண்டு
கண் களிப்ப மனம் களிப்பக் காதல் பொங்கித்
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து
சொல் இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி
இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்டமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று
வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார்
6.1.259
6.1.260
திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி
சென்று அணைந்து தெய்வ மறைக் கற்பின் மாதர்
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு
மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து
துங்க நிலைக் கோபுரத்தை இறைஞ்சி
புக்குச் சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள்
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று
தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார்
6.1.260
6.1.261
பரவு திருப்பதிக இசை பாடி நீடும்
பரன் கருணைத் திருவருளின் பரிசு போற்றி
விரவு மலர்க் கண் பனிப்பப் கைகள் கூப்பி
விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மைச்
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது
திரு நீல கண்ட யாழ்ப்பாணர் பின்னே
வர அவரை வளம் பெருகு மனையில் போக
அருள் செய்து தம் திரு மாளிகையின் வந்தார்
6.1.261
6.1.262
மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும்
மருங்கு அணைய மாளிகையில் அணையும்போதில்
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள
நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்த
இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று
ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமை அவர்க்கு அருள் செய்து மடத்தில்
புக்கார் முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார்
6.1.262
6.1.263
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து
நாளும் திருத் தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்கு திருப் பதிகங்கள் பலவும் பாடி மனம்
மகிழ்ந்து போற்றி இசைத்து வைகுநாளில்
ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த உலகு
இறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லை மறை விதிச் சடங்கு மறையோர் செய்யத்
தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற
6.1.263
6.1.264
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்தம்மை
உலகு இயல்பின் உபநயன முறைமையாகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று
மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார்
எண்ணிறந்த புனித வேதம்
6.1.264
6.1.265
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல்
கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப்
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்னப் பரஞ்சோதி
அருள் பெற்ற பான்மை மேன்மை
கருதி ஆதரவோடும் வியப்பு உற்று ஏத்தும் கலை
மறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்
வரும் தியானப் பொருள் என்று இறைஞ்சி தாம்
முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார்
6.1.265
6.1.266
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளிச் செய்து
மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு
மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால்
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும்
முதல் ஆகும் முதல்வனார் எழுத்தஞ்சு என்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே என்று
அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளிச்செய்தார்
6.1.266
6.1.267
அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய
அந்தணர்கள் அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்து
சித்தம்மகிழ்வொடு சிறப்பத் தாமும் தெய்வத்
திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
விரை மலர்த்தாள் மனம் கொண்டு மீண்டு போந்து
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூடப் பரமர்
தாள் பணிந்து ஏத்திப் பயிலும் நாளில்
6.1.267
6.1.268
பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பில் ஞானத்து அமுது உண்ட
செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சு தற்காக
அந்தணர் பூந்தராய் தன்னில் அணைந்தனர் நாவுக் கரையர்
6.1.268
6.1.269
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து அணைந்தார் எனக் கேட்டு
பூக்கமழ் வாசத் தடம் சூழ் புகலிப் பெரும் தகையாரும்
ஆக்கிய நல் வினைப் பேறு என்று அன்பர் குழாத் தொடும் எய்தி
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர் கொள எய்தும் பொழுதில்
6.1.269
6.1.270
சிந்தை இடை அறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்
கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திரு நீறும்
அந்தம் இலாத் திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய
6.1.270
6.1.271
கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில் பரவு மெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள் செய்தார்
6.1.271
6.1.272
பேர் இசை நாவுக்கு அரசைப் பிள்ளையார் கொண்டு உடன் போந்து
போர் விடையார் திருத்தோணிப் பொன் கோயில் உட்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால்
சீர்வளர் தொண்டரைக் கொண்டு திருமாளிகையினில் சேர்ந்தார்
6.1.272
6.1.273
அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால்
இணையில் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்துப்
புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு
உணரும் சொல் மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார்
6.1.273
6.1.274
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கு அரசர்
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவிடம் கும்பிட வேண்டி
பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலிப் பிரான் இசைவோடும்
பின்னாக எய்த இறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்
6.1.274
6.1.275
வாக்கின் தனி மன்னர் ஏக மாறாத் திரு உளத்தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து
தேக்கிய மாமறை வெள்ளத் திருத்தோணி வீற்று இருந்தாரைத்
தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது அங்கு உறைகின்ற நாளில்
6.1.275
6.1.276
செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களான் மொழி மாற்றும்
வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்குச்
சந்த வியமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக் குறள் சாத்தி
எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு
6.1.276
6.1.277
நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
மூல இலக்கியமாக எல்லாப் பொருள்களும் முற்ற
ஞாலத்து உயர் காழியாரைப் பாடினார் ஞான சம்பந்தர்
6.1.277
6.1.278
இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப் பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசை வடிவான மதங்க சூளா மணியாரும்
பன்னிய ஏழ் இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார்
6.1.278
6.1.279
அங்கண் அமர் கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும்
திங்கள் சடை அண்ணலார்தம் திருப்பதி யாவையும் கும்பிட்டு
எங்கும் தமிழ் மாலை பாடி இங்கு எய்துவன் என்று
தம் குலத் தாதையா ரோடும் தவ முனிவர்க்கு அருள் செய்தார்
6.1.279
6.1.280
பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும்
அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவு ஆற்றேன்
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும்
ஒருமையால் இன்னம் சிலநாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்
6.1.280
6.1.281
ஆண்டகையாரும் இசைந்து அங்கு அம்பொன் திருத்தேணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே
ஈண்டு புகழ்த் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும்
காண் தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார்
6.1.281
6.1.282
அத்திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன்போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை கொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளித் தாமம் நிரத்த
நித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற
6.1.282
6.1.283
சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார்
என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க
6.1.283
6.1.284
சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்
6.1.284
6.1.285
திருமறைச் சபையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ் மாலை கொண்டு ஏத்தி
வரு புனல் பொன்னி வடபால் குட திசை நோக்கி வருவார்
6.1.285
6.1.286
போற்றிய காதல் பெருக புள்ளிருக்கும் திருவேளூர்
நால் தடம் தோளுடை மூன்று நயனப் பிரான் கோயில் நண்ணி
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொற் பதிகம் அணிந்தார்
6.1.286
6.1.287
நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக் கும்பிட்டு வண் தமிழ் கூறி
நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார்
6.1.287
6.1.288
அங்கு நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன
எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறை பழ மண்ணிப் படிக்கரைக் கோயில் வணங்கித்
தங்கு தமிழ் மாலை சாத்தித் திருக்குறுக்கைப் பதி சார்ந்தார்
6.1.288
6.1.289
திருக்குறுக்கைப் பதி மன்னித் திரு வீரட்டானத்து அமர்ந்த
பொருப்புவில்லாளரை ஏத்திப் போந்து அன்னியூர் சென்று போற்றிப்
பருக்கை வரை உரித்தார் தம் பந்தண நல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார்
6.1.289
6.1.290
அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணம் சேரி
செப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி
எப்பொருளும் தரும் ஈசர் எதிர் கொள் பாடிப் பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்விக் குடி உற்றார்
6.1.290
6.1.291
செழுந்திரு வேள்விக் குடியில் திகழ் மணவாள நற்கோலம்
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்னைமையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக்
கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிக் காவிற் சென்றடைந்தார்
6.1.291
6.1.292
திருக்கோடி காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னை
எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள்ளேனப்
பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கை தொழச் சென்றார்
6.1.292
6.1.293
கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண் உற்று இறைஞ்சி முன் போந்து
மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார்
6.1.293
6.1.294
வெங் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி
அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்டத் தொழுது
செங்கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன் குடி சேர்ந்தார்
6.1.294
6.1.295
திருந்து தேவன் குடி மன்னும் சிவ பெருமான் கோயில் எய்திப்
பொருந்திய காதலில் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று
அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் ஞானத்து அமுது உண்டார்
6.1.295
6.1.296
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அந் நெறி செல்வார்
செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்து இடை போய்
மை திகழ் கண்டர் தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்தம் கோயில்
6.1.296
6.1.297
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கான
பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவி
பொன்னங் கழல் இணை போற்றிப் புறம் போந்து அணைந்து புகுந்தார்
மன்னும் தடம் கரைப் பொன்னி வட குரங்காடுதுறையில்
6.1.297
6.1.298
வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட
அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளிப்
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி
படை கொண்ட மூவிலை வேலர் பழனம் திருப்பதி சார்ந்தார்
6.1.298
6.1.299
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில்
உழைபுக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார்
அழனக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்
6.1.299
6.1.300
மாட நிரை மணி வீதித் திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர்
நாடு உய்யப் புகலிவரு ஞான போனகர் வந்து நண்ணினார் என்று
ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து
நீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள நித்தில யானத்து நீங்கி
6.1.300
6.1.301
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்பால்
நந்தி திரு அருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர்
6.1.301
6.1.302
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில்
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவில் காதல்
தணியாத கருத்தின் ஓடும் தம்பெருமான் கோயில் வலம் கொண்டு தாழ்ந்து
பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார்
6.1.302
6.1.303
கோடல் கோங்கம் குளி கூவிளம் என்னும் திருப்பதிகக் குலவு மாலை
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய
6.1.303
6.1.304
பல முறையும் பணிந்து எழுந்து புறம்
போந்து பரவு திருத் தொண்டரோடு
நிலவு திருப்பதி அதன் கண் நிகழும்
நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கை
அலையும் மதி முடியார் தம் பெரும்புலியூர்
முதலான அணைந்து போற்றிக்
குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு
அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில்
6.1.304
6.1.305
குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு
அங்கு அருள் பெற்றுக் குறிப்பின் ஓடும்
படரும் நெறி மேல் அணைவார் பரமர்
திருநெய்த்தானப் பதியில் நண்ணி
அடையும் மனம் உற வணங்கி அரும் தமிழ்
மாலைகள் பாடி அங்கு நின்றும்
புடைவளர் மென் கரும்பினொடு பூகம்
இடை மழபாடி போற்றச் சென்றார்
6.1.305
6.1.306
செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப்
புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம்
எடுத்து அருளி அணைந்த போழ்தில்
மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால்
வணங்குவார்கள்
பொங்கு மா தவம் உடையார் எனத் தொழுது
போற்றி இசைத்தே கோயில் புக்கார்
6.1.306
6.1.307
மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து மகிழ்
கோயில் வலம் கொண்டு எய்தி
செழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச் சென்று
தாழ்ந்து எழுந்து நின்று
தொழுது ஆடிப் பாடி நறும் சொல் மாலைத்
தொடை அணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசம் உடன் உடையவரைக் கும்பிட்டு
அங்கு உறைந்தார் சின்னாள்
6.1.307
6.1.308
அதன் மருங்கு கடந்து அருளால்
திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ
முதன் மறையோர் அன்பிலாந் துறையின்
முன்னவனைத் தொழுது போற்றிப்
பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார்
பயில் பதியும் பணிந்து பாடி
மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை
அணைந்தார் மணி நூல் மார்பர்
6.1.308
6.1.309
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து
உறையும் துறை நதி வாழ் சென்னியார் தம்
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை
வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள்
தொழுது வழிபாடு செய்ய
நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில்
சொல் மாலை நிகழப் பாடி
6.1.309
6.1.310
அங்கண் அகன்று அம் மருங்கில்
அங்கணர் தம் பதி பிறவும் அணைந்து போற்றிச்
செங்கமலப் பொதி அவிழச் சேல் பாயும்
வயல் மதுவால் சேறு மாறாப்
பொங்கு ஒலி நீர் மழ நாட்டுப் பொன்னி வட
கரை மிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள் பிரான் திருப்பாச்சிலாச்சிரமம்
பணிய நண்ணும் போதில்
6.1.310
6.1.311
அந் நகரில் கொல்லி மழவன் பயந்த
அரும் பெறல் ஆர் அமுத மென் சொல்
கன்னி இள மடப்பிணையாம் காமரு
கோமளக் கொழுந்தின் கதிர் செய் மேனி
மன்னு பெரும் பிணியாகும் முயலகன்
வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தித்
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்தத்
தானும் மனம் தளர்வு கொள்வான்
6.1.311
6.1.312
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை
மறி வளரும் கையார் பாதம்
பற்றியே வரும் குலத்துப் பான்மையினான்
ஆதலினால் பரிவு தீரப்
பொன் தொடியைக் கொடு வந்து போர்
கோலச் சேவகராய் புரங்கள் மூன்றும்
செற்றவர் தம் கோயில் உட் கொடு புகுந்து
திரு முன்பே இட்டு வைத்தான்
6.1.312
6.1.313
அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்
எழுந்து அருளி அணுக எய்தச்
செவ்விய மெய்ஞ் ஞானம் உணர் திருஞான
சம்பந்தன் வந்தான் என்றே
எவ் உலகும் துயர் நீங்கப் பணி மாறும்
தனிக் காளத்து எழுந்த ஓசை
எவ் உயிர்க்கும் அவன் கேளா மெல்
இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான்
6.1.313
6.1.314
மா நகரம் அலங்கரிமின் மகர
தோரணம் நாட்டும் மணி நீர் வாசத்
தூ நறும் பூரண கும்பம் சோதி மணி
விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக
இயற்றும் என ஏவித் தானும்
வானவர் நாயகர் மகனார் வருமுன்பு
தொழுது அணைந்தான் மழவர் கோமான்
6.1.314
6.1.315
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன்
என்று ஆனந்தம் பெருகு காதல்
வெள்ளம் நீர் கண் பொழியத் திருமுத்தின்
சிவிகையின் முன் வீழ்ந்த போது
வள்ளலார் எழுக என மலர்வித்த
திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குலப்பதியின்
மணிவீதி கொண்டு புக்கான்
6.1.315
6.1.316
மங்க தூரியம் முழங்கும் மணி வீதி
கடந்து மதிச் சடையார் கோயில்
பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்து
ஆக புனை முத்தின் சிவிகை நின்றும்
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து
அருளி அணிவாயில் பணிந்து புக்கு
தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு
திருமுன் வணங்கச் சாரும் காலை
6.1.316
6.1.317
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து
நிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கி
என் இது என்று அருள் செய்ய மழவன்தான்
எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன் இவளை முயலகனாம் பொருவில்
அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில்
முன் அணையக் கொணர்வித்தேன் இது
புகுந்தபடி என்று மொழிந்து நின்றான்
6.1.317
6.1.318
அணிகிளர் தார் அவன் சொன்ன
மாற்றம் அருளொடும் கேட்டு அந் நிலையின் நின்றே
பணி வளர் செஞ்சடைப் பாச்சின் மேய
பரம் பொருள் ஆயினாரைப் பணிந்து
மணி வளர் கண்டரோ மங்கையை வாட
மயல் செய்வதோ இவர் மாண்பது என்று
தணிவில் பிணி தவிர்க்கும் பதிகத்
தண்தமிழ் பாடினார் சண்பை நாதர்
6.1.318
6.1.319
பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி
திருக்கடைக் காப்புச் சாத்தி
மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன்
பயந்த மழலை மென் சொல்
கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதும் எனப்
பார் மிசை நின்று எழுந்து
பொன்னின் கொடி என ஒல்கிவந்து
பெருவலித் தாதை புடை அணைந்தாள்
6.1.319
6.1.320
வன்பிணி நீங்கு மகளைக் கண்ட
மழவன் பெரு மகிழ்ச்சி பொங்கக்
தன்தனிப் பாவையும் தானும் கூடச்
சண்பையர் காவலர் தாளில் வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீர்
அணிவேணி நிமலர் பாதம்
ஒன்றிய சிந்தை உடன் பணிந்தார் உம்பர்
பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார்
6.1.320
6.1.321
நீடு திரு வாச்சிரமம் மன்னும் நேரிழை
பாகத்தர் தாள் வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும்
கொள்கை மேற்கொண்டு போந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து
பணிந்து அடிபோற்றி ஏகிச்
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச்
சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்
6.1.321
6.1.322
பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப்
பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து
மண் பரவும் தமிழ் மாலை பாடி வைகி
வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெரும் தெய்வக் கயிலையில் வாழ் சிவனார்
பதி பல சென்று இறைஞ்சிச்
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம்
திரு ஈகோய் மலையைச் சார்ந்தார்
6.1.322
6.1.323
செங்கண் குறவரைத் தேவர் போற்றும்
திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும்
கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த
இசைப் பதிகம் புனைந்து
பொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும்
புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக்
கொங்கில் குட புலம் சென்று அணைந்தார்
கோதில் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார்
6.1.323
6.1.324
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து
தெண்திரை நீர்த் தடம் பொன்னித் தென் கரையாம் கொங்கின் இடை
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார்
கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாடச் செங்குன்றூர்
6.1.324
6.1.325
அந் நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து
பன்னெடுந்தோரணமுதலாப் பயில் அணிகள் பல அமைத்து
முன் உறவந்து எதிர் கொண்டு பணிந்து ஏத்திமொய் கரங்கள்
சென்னியுறக் கொண்டு அணைந்தார் சினவிடையார் செழுங்கோயில்
6.1.325
6.1.326
தம் பெருமான் கோயிலினுள் எழுந்து அருளித் தமிழ் விரகர்
நம்பரவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க
இம்பரும் உம்பரும் ஏத்த இன்னிசை வண் தமிழ் பாடிக்
கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ நகரில் இனிது அமர்ந்தார்
6.1.326
6.1.327
அப்பாலைக் குட புலத்தில் ஆறணிந்தார் அமர் கோயில்
எப்பாலும் சென்று ஏத்தித் திரு நணாவினை இறைஞ்சிப்
பைப் பாந்தள் புணைந்த வரைப் பரவிப் பண்டு அமர்கின்ற
வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார்
6.1.327
6.1.328
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்கண்
தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழிகாலை
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வரப்
பாங்கர் வரையும் குளிரும் பனிப் பருவம் எய்தியதால்
6.1.328
6.1.329
அளிக்குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலரப்
பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை எனத்
துளித் தலைமேல் அறுகு பனி தொடுத்து அசையச் சூழ் பனியால்
குளிர்க் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும்
6.1.329
6.1.330
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய்க்
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி
வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பின் இடை
ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகுமால்.
6.1.330
6.1.331
நீடிய அப் பதிகள் எலாம் நிறை மாடத் திறைகள் தொறும்
பேடையுடன் பவளக்கால் புறவு ஒடுங்கப் பித்திகையின்
தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள்
ஆடவர் தம் பணைத்தோளும் மணி மார்பும் அடங்குவன
6.1.331
6.1.332
அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம்
பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம்
எரி உமிழ் பேழ் வாய்த் தோணி இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம்
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம்
6.1.332
6.1.333
அந்நாளில் கொடி மாடச் செங் குன்றூர் அமர்ந்து இருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள்
பன்னாளும் அந்நாட்டில் பயின்ற அதனால் பனித்த குளிர்
முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும்
6.1.333
6.1.334
அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம்
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே
இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறு என்று
சென்னி மதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்
6.1.334
6.1.335
அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த
வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே
செய்வினைத் தீண்டா திரு நீல கண்டம் எனச் செப்பினார்
6.1.335
6.1.336
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச் செய்து
தூய பதிகத் திருக் கடைக் காப்புத் தொடுத்து அணிய
மேய அப்பொன்பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள்
தீய பனிப் பிணி அந்நாட்டு அடங்கவும் தீர்ந்தது அன்றே
6.1.336
6.1.337
அப்பதியின் கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று
துப்புறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி
முப்புரி நூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும்
செப்பரும் சீர்த் திருப்பாண்டிக் கொடுமுடி சென்று அணைந்தார்
6.1.337
6.1.338
பருவம் அருப் பொன்னிப் பாண்டிக் கொடு முடியார் தம்பாதம்
மருவி வணங்கி வளத் தமிழ் மாலை மகிழ்ந்து சாத்தி
விரி சுடர் மாளிகை வெஞ்ச மாக் கூடல் விடையவர் தம்
பெருவில் தானம் பல போற்றிக் குணதிசைப் போதுகின்றார்
6.1.338
6.1.339
செல்வக் கருவூர்த் திருவானிலைக் கோயில் சென்று இறைஞ்சி
நல் இசை வண் தமிழ்ச் சொல் தொடை பாடி அந்நாடு அகன்று
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து
மல்கு திரைப் பொன்னித் தென் கரைத் தானம் பல பணிவார்
6.1.339
6.1.340
பன்னெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும்
அந் நிலைத் தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார்
பொன் இயல் வேணிப் புனிதர் பராய்த் துறையுள் புகுந்தார்
6.1.340
6.1.341
நீடும் பராயத் துறை நெற்றித் தனிக் கண்ணர் கோயில் நண்ணிக்
கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் தமிழ்ச் சொல் மாலை
பாடும் கவுணியர் கண்பனி மாரி பரந்து இழியச்
சூடும் கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது நின்றார்
6.1.341
6.1.342
தொழுது புறம்பு அணைந்து அங்கு நின்று ஏகிச் சுரர் பணிவு உற்று
எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா
வழுவில் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார்
செழு மலர்ச் சோலைத் திருக் கற்குடி மலை சேர வந்தார்
6.1.342
6.1.343
கற்குடி மாமலை மேல் எழுந்த கனகக்
கொழுந்தினைக் கால் வளையப்
பொன் திரள் மேருச் சிலை வளைத்த
போர் விடையாளியைப் போற்றி இசைத்து
நற்றமிழ் மாலை புனைந்து அருளி ஞான
சம்பந்தர் புலன்கள் ஐந்தும்
செற்றமிழ் மூக்கீச்சரம் பணிந்து
திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார்
6.1.343
6.1.344
செம்மணி வாரி அருவி தூங்கும்
சிராப் பள்ளி மேய செழும் சுடரை
கைம் மலை ஈருரி போர்வை சாத்தும் கண்
நுதலாரைக் கழல் பணிந்து
மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய
சொல் தமிழ் மாலை வேய்ந்து
மைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை
வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார்
6.1.344
6.1.345
விண்ணவர் போற்றி செய் ஆனைக்
காவில் வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து
நால் கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த
அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப்
பண் உறு செந்தமிழ் மாலைப் பாடி பரவி
நின்று ஏத்தினர் பான்மையினால்
6.1.345
6.1.346
நாரணன் நான்முகன் காணா உண்மை
வெண் நாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை செல்வத்
திருவாரூர் மேய பண்பும்
ஆரணத்து உட் பொருள் ஆயினாரை
ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை
ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார்
6.1.346
6.1.347
கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து
காமர் பதி அதன் கண் சில நாள்
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார்
மன்னும் தவத்துறை வானவர் தாள்
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன்
தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து
வைதிக மாமணி அம்மருங்கு மற்று உள்ள
தானம் வழுத்திச் செல்வார்
6.1.347
6.1.348
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும்
எறும்பியூர் மாமலையே முதலா
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும்
திருத்தொண்டர் வந்து சூழ
ஈறில் புகழ்ச் சண்பை ஆளியார் தாம் எண்
திசையோரும் தொழுது இறைஞ்ச
நீறணி செம்பவளப் பொருப்பின் நெடுங்கள
மா நகர் சென்று சேர்ந்தார்
6.1.348
6.1.349
நெடுங்களத்து ஆதியை அன்பால்
நின்பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்
இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்றும்
இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி
அடும் பணிச் செஞ்சடையார் பதிகள்
அணைந்து பணிந்து நியமம் போற்றிக்
கடும் கைவரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்
பள்ளிப்பதி கை தொழுவார்
6.1.349
6.1.350
சென்று திகழ் திருக்காட்டு பள்ளிச்
செம் சடை நம்பர் தம் கோயில் எய்தி
முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்து
மொய் கழல் சேவடி கை தொழுவார்
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக் கண்
நுதலாரை முன் போற்றி செய்து
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார்
வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார்
6.1.350
6.1.351
அங்கு அப்பதி நின்று எழுந்தருளி
அணிந்திரு வாலம் பொழில் வணங்கி
பொங்கு புனல் பொன்னிப் பூந்துருத்தி பொய்
இலியாரைப் பணிந்து போற்றி
எங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம் எதிர்
கொள்ள எப்பதியும் தொழுது
செங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திருக்
கண்டியூர் தொழச் சென்று அணைந்தார்
6.1.351
6.1.352
கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக் கலந்து
அடியாருடன் காதல் பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சிக் குலவு
மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த
இசைத்தமிழ் மாலை தன்னில்
அண்டர் பிரான் தன் அருளின் வண்ணம் அடியார்
பெருமையில் கேட்டு அருளி
6.1.352
6.1.353
வினவி எடுத்த திருப் பதிகம் மேவு
திருக்கடைக் காப்பு தன்னில்
அனைய நினைவு அரியேன் செயலை
அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை
புனைவுறு பாடலில் போற்றி செய்து
போந்து புகலிக் கவுணியனார்
துனை புனல் பொன்னித் திரை வலம் கொள்
சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார்
6.1.353
6.1.354
. அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்று
ஒப்பில் வண் தமிழ் மாலை ஒருமையால்
செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்
6.1.354
6.1.355
தொல்லை நீள் திருச் சோற்றுத் துறை உறை
செல்வர் கோயில் வலம் கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்க நஞ்சு உண்ட பிரான் அடி
எல்லையில் அன்பு கூர இறைஞ்சினார்
6.1.355
6.1.356
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார்
சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில்
6.1.356
6.1.357
வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலம் திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்து
ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை
6.1.357
6.1.358
எழுது மா மறையாம் பதிகத்து இசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றி முன்
தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்
6.1.358
6.1.359
வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலின் நாண் மதிக்
கண்ணியார் தம் கழல் இணை போற்றியே
பண்ணில் நீடும் பதிக முன் பாடினார்
6.1.359
6.1.360
பாடி நின்று பரவிப் பணிந்து போய்
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறை புகழ் வேதியர்
6.1.360
6.1.361
மொய் தரும் சோலை சூழ் முளரி முள்ளடவி போய்
மெய் தரும் பரிவிலான் வேள்வியைப் பாழபடச்
செய்த சங்கரர் திருச்சக்கரப் பள்ளி முன்
பெய்தவம் அருளினார் இயல் இசைத் தலைவனார்
6.1.361
6.1.362
சக்கரப் பள்ளியார் தம் திருக் கோயில் உள்
புக்கு அருத்தியின் உடன் புனை மலர்த் தாள் பணிந்து
அக்கரைப் பரமர்பால் அன்பு உறும் பரிவு கூர்
மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார்
6.1.362
6.1.363
தலைவர் தம் சக்கரப் பள்ளி தன் இடை அகன்று
அலைபுனல் பணைகளின் அருகு போய் அருமறைப்
புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கைப் பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்
6.1.363
6.1.364
மன்னும் அக் கோயில் சேர் மான் மறிக் கையர்தம்
பொன் அடித்தலம் உறப் புரிவொடும் தொழுது எழுந்து
இன் இசைத் தமிழ் புனைந்து இறைவர் சேல் ஊருடன்
பன்னு பாலைத் துறைப் பதி பணிந்து ஏகினார்
6.1.364
6.1.365
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய்
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும்
பூவின் மேல் விழை உறும் புகலியார் தலைவனார்
சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்
6.1.365
6.1.366
மன்றலங் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர்
துன்று மங்கல வினைத் துழனியால் எதிர் கொளப்
பொன் தயங்கு ஒளி மணிச் சிவிகையில் பொலிவு உறச்
சென்று அணைந்து அருளினார் சிரபுரச் செம்மலார்
6.1.366
6.1.367
நித்திலச் சிவிகை மேல் நின்று இழிந்து அருளியே
மொய்த்த அந்தணர் குழாம் முன் செலப் பின் செலும்
பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே
அத்தர் தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார்
6.1.367
6.1.368
வெள்ளி மால் வரையை நேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர்
வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர்
துள்ளுவார் சடையரைத் தொழுது முன் பரவுவார்
6.1.368
6.1.369
பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவுதான்
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து
அரவு உடைச் சடையர் பேர் அருள் பெறும் பெருமையால்
விரவும் அப்பதி அமர்ந்து அருளியே மேவினார்
6.1.369
6.1.370
அன்ன தன்மையில் அப்பதியினில் அமர்ந்து அருளி
மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும் பல முறை பாடி
நல் நெடும் குல நான் மறையவர் தொழ நயந்தார்
6.1.370
6.1.371
நீடும் அப்பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர்
ஆடுவார் திரு அருள் பெற அகன்று போந்து அங்கண்
மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார்
தேடும் மால் அயற்கு அரியவர் திருக்கருகாவூர்
6.1.371
6.1.372
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்ச்
சந்த மாமறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே
அந்தம் இல்லவர் வண்ணமார் அழல் வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம்
6.1.372
6.1.373
பதிக இன் இசை பாடிப் போய்ப் பிறப்பதி பலவும்
நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்
அதிர் சிலம்பு அடியார் மகிழ் அவள் இவள் நல்லூர்
6.1.373
6.1.374
. மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த
தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசு உடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப் பதி பலவும் அப்பால் சென்று பணிவார்
6.1.374
6.1.375
பழுது இல் சீர்த் திருப் பரிதி நல் நியமும் பணிந்து அங்கு
எழுது மாமறையாம் பதிகத்து இசை போற்றி
முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை
வழுவு இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து
6.1.375
6.1.376
பொங்கு காதலில் போற்றி அங்கர் அருளுடன் போந்து
பங்கயத் தடம் பணைப் பதி பலவும் முன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார்
அங்கணர்க்கு இடம் ஆகிய பழம்பதி ஆவூர்
6.1.376
6.1.377
பணியும் அப்பதிப் பசுபதி ஈச்சரத்தின் இனிது இருந்த
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித்
தணிவு இல் காதலினால் தண் தமிழ் மாலைகள் சாத்தி
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார்
6.1.377
6.1.378
மறை விளங்கும் அப்பதியினில் மணிகண்டர் பொன் தாள்
நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும்
பிறை அணிந்தவர் அருள் பெறப் பிரச மென் மலர் வண்டு
அறை நறும் பொழில் திரு வலம் சுழியில் வந்து அணைந்தார்
6.1.378
6.1.379
மதி புணைந்தவர் வலம் சுழி மருவு மாதவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் தம் முன் வந்து
எதிர் கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர் செல மதியைக்
கதிர் செய் வெண் முகில் குழாம் புடை சூழ்ந்தெனக் கலந்தார்
6.1.379
6.1.380
கலந்த அன்பர்கள் தொழுது எழக் கவுணிய தலைவர்
அலர்ந்த செம் கமலக் கரம் குவித்து உடன் அணைவார்
வலம் சுழிப் பெருமான் மகிழ் கோயில் வந்து எய்திப்
பொலம் கொள் நீள் சுடர்க் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார்
6.1.380
6.1.381
மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம் கொண்டு
உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்த்
திருவலம் சுழி உடையவர் சேவடித் தலத்தில்
பெருகும் ஆதரவு உடன் பணிந்து எழுந்தனர் பெரியோர்
6.1.381
6.1.382
ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால்
ஆன காதலில் அங்கணவர் தமை வினவும்
ஊனமில் இசையுடன் விளங்கிய திருப்பதிகம்
பான் அலார் மணிகண்டரைப் பாடினார் பரவி
6.1.382
6.1.383
புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப் பொன்னி சூழ் திருப்பதியினில் இருந்து
நலம் கொள் காதலின் நாதர்தாள் நாள்தொறும் பரவி
வலம் சுழிப் பெருமான் தொண்டர் தம் உடன் மகிழ்ந்தார்
6.1.383
6.1.384
மகிழ்ந்த தன்தலை வாழும் அந் நாள் இடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப் புணர் ஓரை உள் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற
வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில்
6.1.384
6.1.385
தண் புனல் குளிர் கால் நறும் சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர்
நண்புடைத் துணை நகை மணி முத்தணி நாளும்
உண்ப மாதுரியச் சுவை உலகு உளோர் விரும்ப
6.1.385
6.1.386
அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையுமான்
பெறல் அரிய புனல் என்று பேத்தேரின் பின் தொடரும்
உறை உணவு கொள்ளும் புள் தேம்பிஅயல் இரை தேரும்
பறவை சிறை விரித்து ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால்
6.1.386
6.1.387
நீண் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும்
வாண் நிழல் நல் சோலையிலும் மலர் வாவிக் கரை மாடும்
பூண் நிலவு முத்து அணிந்த பூங்குழலார் முலைத் தடத்தும்
காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவாரால்
6.1.387
6.1.388
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க் கமல முகை விரிய
குயில் ஒடுங்காச் சோலையின் மென் தளிர் கோதிக் கூவி எழத்
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயிலச் சுடர் வானில்
வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில்
6.1.388
6.1.389
சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலம் சுழியை
எண் பெருகத் தொழுது ஏத்திப் பழையாறை எய்துதற்கு
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார்
6.1.389
6.1.390
திருவாறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செந்தீயின்
உருவாளன் அடிவணங்கி உருகிய அன்பொடு போற்றி
மருவாரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள்
தருவார் தம் திரு சத்தி முற்றத்தின் புறம் சேர்ந்தார்
6.1.390
6.1.391
திருச் சத்தி முற்றத்தில் சென்று எய்தித் திருமலையாள்
அருச்சித்த சேவடிகள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்திக்
கருச் சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி
விருப்பு உற்றுத் திருப் பட்டீச்சரம் பணிய மேவும் கால்
6.1.391
6.1.392
வெம்மை தரு வேனில் இடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு
மும்மை நிலைத் தமிழ் விரகர் முடிமீதே சிவபூதம்
தம்மை அறியாதபடி தண் தரளப் பந்தர் எடுத்து
எம்மை விடுத்து அருள் புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப
6.1.392
6.1.393
அவ்வுரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழச்
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்துப் பிள்ளையார்
இவ் வினைதான் ஈசர் திரு அருளால் ஆகில் இசைவது என
மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசைத் தாழ்ந்தார்
6.1.393
6.1.394
அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்கக்
கதிர் ஒளிய மணிக் காம்பு பரிசனங்கள் கைக் கொண்டார்
மதுர மொழி மறைத் தலைவர் மருங்கு இமையோர் பொழிவாசப்
புது மலரால் அப்பந்தர் பூம் பந்தரும் போலும்
6.1.394
6.1.395
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி
எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்து அருளும் பிள்ளையார்
வெண் தரளப் பந்தர் நிழல் மீது அணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார்
6.1.395
6.1.396
பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின்
ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணைத் திறம் போற்றி
ஈர மனம் களி தழைப்ப எதிர் கொள்ள முகம் மலர்ந்து
சேர வரும் தொண்டர் உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார்
6.1.396
6.1.397
சென்று அணைந்து திருவாயில் புறத்து இறைஞ்சி உள்புக்கு
வென்றி விடையவர் கோயில் வலம் கொண்டு வெண் கோட்டுப்
பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார்
6.1.397
6.1.398
அருள் வெள்ளத் திறம் பரவி அளப்பரய ஆனந்தப்
பெரு வெள்ளத்து இடை மூழ்கிப் பேராத பெருங்காதல்
திரு உள்ளப் பரிவுடனே செம்பொன் மலை வல்லியார்
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார்
6.1.398
6.1.399
அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார்
செப்பரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி
ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு
எப்பொருளுமாய் நின்றார் இரும் பூளை எய்தினார்
6.1.399
6.1.400
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும் பூளை சென்று எய்தக்
காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்பப்
பூவண மாலைகள் நாற்றிப் பூரண பொன் குடம் நிரைத்து அங்கு
யாவர்களும் போற்றி இசைப்பத் திருத் தொண்டர் எதிர் கொண்டார்
6.1.400
6.1.401
வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழத் தாமும் தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று
பண்டு அரும் இன் இசைப் பதிகம் பரம் பொருளைப் பாடுவார்
6.1.401
6.1.402
நிகர் இலா மேருவரை அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானை
தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர்
பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார்
6.1.402
6.1.403
பாடும் அரதைப் பெரும் பாழியே முதலாகச்
சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குட வாயில்
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி
நீடு தமிழ் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்
6.1.403
6.1.404
அங்கண் இனிது அமரு நாள் அடல் வெள் ஏனத்து உருவாய்
செங்கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்று அடைந்து
கங்கைச் சடை கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார்
6.1.404
6.1.405
போற்றி இசைத்துப் புனிதர் அருள் பெற்றுப் போந்து எவ் உயிரும்
தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அண்ணனார்
ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர் தமை ஏத்துதற்கு
நாற்றிசை யோர் பரவும் திருக் குடமூக்கு நண்ணினார்
6.1.405
6.1.406
தேமருவு மலர்ச் சோலைத்திரு குடமூக்கினில் செல்வ
மாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருளத்
தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்க
கோ முறைமை எதிர் கொண்டு தம்பதி உள் கொடு புக்கார்
6.1.406
6.1.407
திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேர
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம்
உருகா நின்று உளம் மகிழ்க் குட மூக்கை உவந்து இருந்த
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார்
6.1.407
6.1.408
வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த வான் பொருளை
சிந்தை மகிழ்வுற வணங்கித் திருத்தொண்டருடன் செல்வார்
அந்தணர்கள் புடை சூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும்
கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார்
6.1.408
6.1.409
பூ மருவும் கங்கை முதல் புனிதமாம் பெரும் தீர்த்தம்
மா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்
தூ மருவும் மலர்க் கையால் தொழுது வலம் கொண்டு அணைந்து
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்
6.1.409
6.1.410
கண்ணாரும் அருமணியைக் காரோணத்து ஆர் அமுதை
நண்ணாதார் புரம் எரித்த நான் மறையின் பொருளானைப்
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்திப் பிறபதியும்
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்து அருளி
6.1.410
6.1.411
. திரு நாசேச் சரத்து அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றை
கரு நாகத்து உரி புணைந்த கண் நுதலைச் சென்று இறைஞ்சி
அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்து
பெரு ஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்தின் புற்றார்
6.1.411
6.1.412
மா நாகம் அர்ச்சித்த மலர் கமலத் தாள் வணங்கி
நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி
பால் நாறும் மணி வாயார் பரமர் திருவிடை மருதில்
பூ நாறும் புனல் பொன்னித் தடங்கரை போய் புகுகின்றார்
6.1.412
6.1.413
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளித்
தாங்க அரிய பெருமகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால்
ஈங்கு எனை ஆளுடைய பிரான் இடை மருது ஈதோ என்று
பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்து அருளினார்
6.1.413
6.1.414
அடியவர்கள் எதிர் கொள்ள எழுந்து அருளி அங்கு அணைந்து
முடிவில் பரம் பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சிப்
படியில் வலம் கொண்டு திரு முன்பு எய்திப் பார் மீது
நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய
6.1.414
6.1.415
பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்த அப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் பதியோடு
அரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால்
உரவு திருத் தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள்
6.1.415
6.1.416
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதிக்கரை போய்க்
குரங்கு ஆடு துறை அணைந்து குழகனார் குரை கழல்கள்
பெரும் காதலினால் பணிந்து பேணிய இன்னிசை பெருக
அரும் கலை நூல் திருப்பதிகம் அருள் செய்து
6.1.416
6.1.417
அம் மலர்த் தடம் பதிபணிந்து அகன்று போந்து அருகு
கைம்மலர்க் களத்து இறைவர் தம் கோயில்கள் வணங்கி
நம் மலத்துயர் தீர்க்க வந்து அருளிய ஞானச்
செம்மலார் திரு ஆவடு துறையினைச் சேர்ந்தார்
6.1.417
6.1.418
மூவர்க்கு அறிவரும் பொருள் ஆகிய மூலத்
தேவர் தம் திரு ஆவடு துறைத் திருத் தொண்டர்
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணைப் புகலிக்
காவலர்க்கு எதிர் கொள்ளும் ஆதரவு உடன் கலந்தார்
6.1.418
6.1.419
வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ்ச் சண்பை
அந்தணர்க்கு எலாம் அருமறைப் பொருள் என வந்தார்
சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர் தம் கோயில் முன் சென்றார்
6.1.419
6.1.420
நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான்
மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடு துறையுள் ஆர் அமுதை
நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார்
6.1.420
6.1.421
அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால்
முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர்
துன்பு போம் மனத் திருத்தொண்டர் தம்முடன் தொழுதே
இன்பம் மேவி அப்பதியினில் இனிது அமர்ந்து இருந்தார்
6.1.421
6.1.422
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு
ஆவது ஆகிய காலம் வந்து அணை உற அணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும்
போவதற்கு அரும் பொருள் பெற எதிர் நின்று புகன்றார்
6.1.422
6.1.423
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி
அந்தமில் பொருள் ஆவன ஆவடு துறையுள்
எந்தையார் அடித் தலங்கள் அன்றோ என எழுந்தார்
6.1.423
6.1.424
சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி
நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது
ஒன்றும் மற்றிலேன் உன்னடி அல்லது ஒன்று அறியேன்
என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்
6.1.424
6.1.425
எடுத்த வண் தமிழ்ப் பதிக நால் அடியின் மேல் இரு சீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார்
6.1.425
6.1.426
நச்சி இன் தமிழ் பாடிய ஞான சம்பந்தர்
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால்
அச் சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து
உச்சி வைத்தது பசும் பொன் ஆயிரக் கிழி ஒன்று
6.1.426
6.1.427
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால்
உய்ந்த இக்கிழி பொன் உலவாக் கிழி உமக்கு
நித்தனார் அருள் செய்தது என்று உரைக்க நேர் தொழுதே
அத்தனார் திரு அருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார்
6.1.427
6.1.428
பணிந்து எழுந்து கை தொழுது முன் பனி மலர்ப் பீடத்து
அணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டு அருமறைகள்
துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால்
தணிந்த சிந்தை அத் தாதையார்க்கு அளித்து உரைசெய்வார்
6.1.428
6.1.429
ஆதி மாமறை விதியினால் ஆறு சூழ் வேணி
நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி
தீது நீங்க நீர் செய்யவும் திருக் கழுமலத்து
வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்
6.1.429
6.1.430
என்று கூறி அங்கு அவர்தமை விடுத்த பின் அவரும்
நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண
வென்றி ஞான சம்பந்தரும் விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடு துறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார்
6.1.430
6.1.431
அண்ணலார் திரு ஆவடுதுறை அமர்ந்தாரை
உள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்து
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடைமேல்
தெள் நிலா அணிவார் திருக் கோழம்பம் சேர்ந்தார்
6.1.431
6.1.432
கொன்றைவார் சடைமுடியரைக் கோழம்பத்து இறைஞ்சி
என்றும் நீடிய இன் இசைப் பதிகம் முன் இயம்பி
மன்று உளார் மகிழ் வைகல் மாடக் கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுரச் செல்வர்
6.1.432
6.1.433
வைகல் நீடு மாடக் கோயில் மன்னிய மருந்தைக்
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி
செய்ய இன் இசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து
நையும் உள்ளத்தர் ஆய்த்திரு நல்லத்தில் நண்ணி
6.1.433
6.1.434
நிலவு மாளிகைத் திரு நல்லம் நீடு மாமணியை
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப்
பலவும் ஈசர் தம் திருப்பதி பணிந்து செல்பவர் தாம்
அலை புனல் திருவழுந்தூர் மாடக் கோயில் அடைந்தார்
6.1.434
6.1.435
மன்னுமாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கிப்
பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவிப்
பொன்னி மா நதிக் கரையினில் மீண்டு போந்து அணைந்து
சொன்னவாறு அறிவார் தமைத் துருத்தியில் தொழுதார்
6.1.435
6.1.436
திரைத் தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில்
வரைத்தலைப் பசும் பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம்
உரைத்து மெய் உறப் பணிந்து போந்து உலவும் அந்நதியின்
கரைக் கண் மூவலூர்க் கண் நுதலார் கழல் பணிந்தார்
6.1.436
6.1.437
. மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து
பூ அலம்பு தண் புனல் பணைப் புகலியார் தலைவர்
வாவி சூழ் திரு மயிலாடு துறையினில் வந்தார்
6.1.437
6.1.438
மல்கு தண் தலை மயிலாடு துறையினில் மருவும்
செல்வ வேதியர் தொண்டரொடு எதிர் கொளச் சென்று
கொல்லை மான்மறிக் கையரைக் கோயில் புக்கு இறைஞ்சி
எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார்
6.1.438
6.1.439
உள்ளம் இன்புற உணர் உறும் பரிவு கொண்டு உருகி
வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிகத்
தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி
வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார்
6.1.439
6.1.440
அத்திருப்பதி அன்று போய் அணிகிளர் சூலங்
கைத்தலப் படை வீரர் செம் பொன் பள்ளி கருதி
மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம்
பத்தர் தம் உடன் பணிந்து இசைப் பதிகம் முன் பகர்ந்தார்
6.1.440
6.1.441
பாடும் அப்பதி பணிந்து போய்ப் பறியலூர் மேவும்
தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும்
காடு கொண்ட செம் சடைமுடிக் கடவுளர் கருது
நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர்
6.1.441
6.1.42
பரமர் தம் திருப் பறியலூர் வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின் கரையினை மேவி
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கிச்
சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர் கொளச் செல்வார்
6.1.42
6.1.443
அடியவர்கள் களி சிறப்பத் திருவேட்டக்குடி
பணிந்து அங்கு அலைவாய்ப் போகிக்
கடி கமழும் மலர் பழனக் கழிநாடு அகன்
பதிகள் கலந்து நீங்கிக்
கொடி மதில் சூழ் தரும புரம் குறுகினார்
குண்டர் சாக்கியர் தம் கொள்கை
படி அறியப் பழுது என்றே மொழிந்து உய்யும்
நெறி காட்டும் பவள வாயர்
6.1.443
6.1.444
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்
பிறப்பு இடம் ஆம் அதனால் சார
வரும் அவர் தம் சுற்றத்தார் வந்து எதிர் கொண்டு
அடி வணங்கி வாழ்த்தக் கண்டு
பெருமை உடைப் பெரும்பாணர் அவர்க்கு
உரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்த
அருமை உடைப் பதிகம் தாம் யாழினால்
பயிற்றும் பேறு அருளிச் செய்தார்
6.1.444
6.1.445
கிளைஞரும் மற்று அது கேட்டுக் கெழுவு
திரு பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை
அளவு பெறக் கருவியில் நீர் அமைத்து இயற்றும்
அதனாலே அகிலம் எல்லாம்
வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம்
புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்து திருநீல கண்டப்
பெரும்பாணர் உணர்த்து கின்றார்
6.1.445
6.1.446
அலகில் திருப்பதிக இசை அளவு படா
வகை இவர்கள் அன்றி ஏயும்
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை
அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால்
பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப்
பெற்றால் பண்பு நீடி
இலகும் இசை யாழின்கண் அடங்காமையான்
காட்டப் பெறுவன் என்றார்
6.1.446
6.1.447
வேத நெறி வளர்பவரும் விடையவர் முன்
தொழுது திருப்பதிகத்து உண்மை
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும்
நிலத்த நூல் புகன்ற பேத
நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை
காட்ட நாட்டுகின்றார்
மாதர் மடப்பிடி பாடி வணங்கினார் வானவரும்
வணங்கி ஏத்த
6.1.447
6.1.448
வண் புகலி வேதியனார் மாதர் மடப்பிடி
எடுத்து வனப்பில் பாடிப்
பண் பயிலும் திருக்கடைக் காப்பு சாத்த அணைந்து
பெரும் பாணர் தாம்
நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு போல்
கைக்கொண்டு நடத்தப்புக்கு
எண் பெருகும் அப் பதிகத்து இசை நரம்பில்
இட அடங்கிற்று இல்லை அன்றே
6.1.448
6.1.449
அப்பொழுது திருநீல கண்ட இசைப்
பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப் பயமும் பரிவும் உறப் பிள்ளையார் கழல்
இணை வீழ்ந்து நோக்கி
இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து
இசை யாழில் ஏற்பன் என்னச்
செப்பியது இக் கருவியை நான் தொடுதலின்
நன்றோ என்று தெளிந்து செய்வார்
6.1.449
6.1.450
வீக்கு நரம்பு உடையாழினால் விளைந்தது
இது என்று அங்கு அதனைப் போக்க
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற
இசை அளவினால் நீர்
ஆக்கிய இக்கருவியினைத் தாரும் என வாங்கிக்
கொண்டு அவனி செய்த
பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர்
பணித்து அருளுகின்றார்
6.1.450
6.1.451
- ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அதென்
ஆள் உடையாள் உடனே கூடச்
செய்ய சடையார் அளித்த திருவருளின்
பெருமை எலாம் தெரிய நம்பால்
எய்திய இக் கருவியினில் அளவு படுமோ
நம் தம் இயல்புக்கு ஏற்ப
வையகத்தோர் அறிவு உற இக்கருவி அளவையின்
இயற்றல் வழக்கே என்றார்
6.1.451
6.1.452
சிந்தையால் அளவு படா இசைப்
பெருமை செயல் அளவில் எய்துமோ நீர்
இந்த யாழினைக் கொண்டே இறைவர் திருப்
பதிக இசை இதனில் எய்த
வந்தவாறே பாடி வாசிப்பீர் எனக் கொடுப்பப்
புகலி மன்னர்
தந்த யாழினைத் தொழுது கைக் கொண்டு
பெரும் பாணர் தலை மேல் கொண்டார்
6.1.452
6.1.453
அணைவுறும் அக் கிளைஞர் உடன் பெரும்
பாணர் ஆள் உடைய பிள்ளையார் தம்
துணை மலர்ச் சேவடி பணிந்து துதித்து அருளத்
தோணிபுரத் தோன்றலாரும்
இணையில் பெரும் சிறப்பு அருளித் தொண்டருடன்
அப்பதியில் இனிது மேவிப்
பணை நெடும் கை மதயானை உரித்தவர் தம் பதி
பிறவும் பணியச் செல்வார்
6.1.453
6.1.454
பங்கய பாசடைத் தடம் சூழ் பழன நட்டு
அகன் பதிகள் பலவும் நண்ணி
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனைப்
பலவும் வணங்கிப் போற்றித்
தங்கி இசை யாழ்ப் பெரும் பாணர் உடன் மறையோர்
தலைவனார் சென்று சார்ந்தார்
செங்கை மான் மழு ஏந்தும் சின விடையார்
அமர்ந்து அருளும் திரு நள்ளாறு
6.1.454
6.1.455
நள்ளாற்றில் எழுந்து அருள நம்பர்
திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று
கொள்ளாற்றில் எதிர் கொண்டு குலவி
உடன் சூழ்ந்து அணையக் குறுகிக் கங்கைத்
தெள்ளாற்று வேணியர் தம் திருவளர்
கோபுரம் இறைஞ்சிச் செல்வக் கோயில்
உள்ளாற்ற வலம் கொண்டு திருமுன்பு
தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார்
6.1.455
6.1.456
உருகிய அன்புறு காதல் உள் உருகி
நனை ஈரம் பெற்றால் போல
மருவு திருமேனி எலாம் முகிழ்த்து எழுந்த
மயிர்ப் புளகம் வளர்க்கும் நீராய்
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த
வெள்ளம் இழிந்து அலைய நின்று
பொருவில் பதிகம் போகம் ஆர்த்த பூண்
முலையாள் என்று எடுத்துப் போற்றி
6.1.456
6.1.457
யாழ்நரம்பில் ஆர இயல் இசை
கூடப் பாடியே எண்ணில் கற்பச்
சேணளவு பட ஓங்கும் திருக் கடைக்
காப்பு சாத்திச் செங்கண் நாகப்
பூண் அகலத்தவர் பாதம் போற்றி
இசைத்துப் புறத்து அணைந்து புவனம் ஏத்தும்
பாணனார் யாழில் இடப் பால் அறா
வாயர் அருள் பணித்த போது
6.1.457
6.1.458
பிள்ளையார் திருத்தாளம் கொடு
பாடப் பின்பு பெரும் பாணனார் தாம்
தெள் அமுத இன் இசையின் தேம்
பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கிக்
கொள்ள இடும் பொழுதின் கண்
குவலத்தோர் களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து
திருத் தொண்டர் உடன் மருவும் காலை
6.1.458
6.1.459
மன்னு திரு நள்ளாற்று மருந்தை
வணங்கிப் போந்து வாச நன்னீர்ப்
பொன்னி வளம் தரு நாட்டுப் புறம்பு
அணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந் நெல் வயல் செங்கமல முகம்
மலரும் திருச் சாத்த மங்கை மூதூர்
தன்னில் எழுந்து அருளினார் சைவ சிகா
மணியார் மெய்த் தவத்தோர் சூழ
6.1.459
6.1.460
நிறை செல்வத் திருச்சாத்த
மங்கையினில் நீல நக்கர் தாமும் சைவ
மறையவனார் எழுந்து அருளும் படி கேட்டு
வாழ்ந்து வழி விளக்கி எங்கும்
துறை மலி தோரணம் கதலி கமுகு
நிறை குடம் தூப தீபம் ஆக்கி
முறைமையில் வந்து எதிர் கொள்ள உடன்
அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார்
6.1.460
6.1.461
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம்
கோயில் மருங்கு அணைந்து வானோர்
உயவந்தித்து எழு முன்றில் புடை வலம் கொண்டு
உள்புக்கு ஆறு ஒழுகும் செக்கர்
மய வந்தி மதிச் சடையார் முன் தாழ்ந்து மாதவம்
இவ் வையம் எல்லாம்
செய வந்த அந்தணனார் செங்கைமேல்
குவித்து எழுந்து திருமுன் நின்றார்
6.1.461
6.1.462
போற்றி இசைக்கும் பாடலினால்
பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம
ஏற்றின் மிசை இருப்பவர் தம் எதிர் நின்று
துதித்துப் போந்து எல்லை இல்லா
நீற்று நெறி மறையவனார் நீல நக்கர்
மனையில் எழுந்து அருளி அன்பால்
ஆற்றும் விருந்தவர் அமைப்ப அன்பருடன்
இன்புற்று அங்கு அமுது செய்தார்
6.1.462
6.1.463
நீடு திரு நீல நக்கர் நெடு மனையில்
விருந்து அமுது செய்து நீர்மைப்
பாடும் யாழ்ப் பெரும் பாணரும் தங்க அங்கு
இரவு பள்ளி மேவி
ஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு
அன்பருடன் அணைந்து சென்று
நாடிய நண்புடை நீல நக்க அடிகளுடன்
நாதர் கழலில் தாழ்ந்து
6.1.463
6.1.464
கோது இலா ஆர் அமுதைக் கோமளக்
கொம்புடன் கூடக் கும்பிட்டு ஏத்தி
ஆதி ஆம் மறைப் பொருளால் அரும் தமிழின்
திருப்பதிகம் அருளிச் செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீல நக்கர் தம் பெரும்
சீர் நிகழ வைத்துப்
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசைப்
பதிகம் போற்றி செய்தார்
6.1.464
6.1.465
பரவிய காதலில் பணிந்து பால் அறா
வாயர் புறத்து அணைந்து பண்பு
விரவிய நண்பு உடை அடிகள் விருப்பு உறு
காதலில் தங்கி மேவும் நாளில்
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும்
ஆதரவால் அணைந்து செல்வார்
உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு
விடை உவந்து நல்கி
6.1.465
6.1.466
மற்றவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு
மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம்
பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரமர்
திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர் வாழ் கடல் நாகைக் காரோணத்துக் கண்
நுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்
சொல் தமிழ் மாலைகள் பாடிச் சில நாள் வைகித்
தொழுது அகன்றார் தோணி புரத் தோன்றலாம் தாம்
6.1.466
6.1.467
கழிக் கானல் மருங்கு அணையும் கடல்
நாகை அது நீங்கிக் கங்கையாற்றுச்
சுழிக் கானல் வேணியர் தம் பதிபலவும் பரவிப்
போய்த் தோகைமார் தம்
விழிக் காவி மலர் பழனக் கீழ் வேளூர் விமலர்
கழல் வணங்கி ஏத்தி
மொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி
அங்கு அகன்றார் மூதூர் நின்றும்
6.1.467
6.1.468
அருகு அணையும் திருப்பதிகள் ஆனவெலாம்
அங்கணரைப் பணிந்து போற்றிப்
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்து
அருளும் பெருமை கேட்டுத்
திரு மருவு செங் காட்டங் குடி நின்றும் சிறுத்
தொண்டரோடிச் சென்று அங்கு
குருகு மனம் களி சிறப்ப எதிர் கொண்டு தம்
பதியுள் கொண்டு புக்கார்
6.1.468
6.1.469
சிறுத் தொண்டர் உடன் கூடச் செங்காட்டங்
குடியில் எழுந்து அருளிச் சீர்த்தி
நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்
அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம்
பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச்
சரத்தின் கண் போகம் எல்லாம்
வெறுத்து உண்டிப் பிச்சை நுகர் மெய்த்
தொண்டருடன் அணைந்தார் வேதகீதர்
6.1.469
6.1.470
அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டு
அருளி அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து
செங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு
பணிந்து எழுந்து செங்கை கூப்பித்
தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர்
தொழ இருந்த தன்மை போற்றிப்
பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்து
அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார்
6.1.470
6.1.471
போந்து மா மாத்திரர் தம் போர் ஏற்றின்
திருமனையில் புகுந்து சிந்தை
வாய்ந்த மாதவர் அவர் தாம் மகிழ்ந்து
அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும்
காய்ந்த மால் விடையார் தம் கணபதீச்
சரம் பரவு காதல் கூர
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு
அன்பருடன் இருந்த நாளில்
6.1.471
6.1.472
திருமருகல் நகரின் கண் எழுந்து அருளித்
திங்களுடன் செங்கண் பாம்பு
மருவு நெடும் சடைமவுலி மாணிக்க வண்ணார்
கழல் வணங்கிப் போற்றி
உருகிய அன்புறு காதல் உள் அலைப்பத்
தெள்ளும் இசையுடனே கூடப்
பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு இருந்தார்
பெரும் புகலிப் பிள்ளையார்தாம்
6.1.472
6.1.473
அந் நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி
அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு
பொன்னார் மேருச் சிலையார் கோயில் மாடு
புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது
மினார் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த
விட வேகம் கடிது தலை மீக் கொண்டு ஏறத்
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல்
இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வான்
6.1.473
6.1.474
வாள் அரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள்
மறு மாற்றம் மற்று ஒருவர் கொடு பார் இன்றி
ஆளரியேறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த
மலர்க்கொடி போல்வாள் அரற்றும் போது
கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லாக்
கொள்கையினாலும் தீர்க்கக் குறையாதாக
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள்
நெடிது அயர்ந்து புலம்புகின்றாள்
6.1.474
6.1.475
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
அடைவாக உடன் போந்தேன் அரவால் வீடி
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன்
இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன்
என்று என்று அயர்வாள் மதியினாலே
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில்
திசை நோக்கித் தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள்
6.1.475
6.1.476
அடியாராம் இமையவர் தம் கூட்டம் உய்ய
அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனும் காணாக் கோல நீலவிட
அரவு அணிந்த நிமலா வெந்து
பொடியான காமன் உயிர் இரதி வேண்டப்
புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச் சோலை மருங்கு சூழும் கவின்
மருகற் பெருமானே காவாய் என்றும்
6.1.476
6.1.477
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர்
மேல் சீறி வரும் காலன் பெருங்கால வலயம் போலும்
செந்தறு கண் வெள் எயிற்றுக் கரிய கோலம்
சிதைந்து உருள உதைத்து அருளும் செய்யதாளா
இந்த விடக் கொடு வேகம் நீங்குமாறும் யான்
இடுக்கண் குழி நின்றும் ஏறு மாறும்
அந்தி மதிக் குழவி வளர் செய்ய வேணி அணி
மருகற் பெருமானே அருளாய் என்றும்
6.1.477
6.1.478
இத் தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும்
இளங்கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும்
அத் தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை
ஆண்டகையார் கும்பிட வந்து அணைகின்றார் தம்
மெய்த் தன்மை விளங்கு திருச் செவியில் சார
மேவுதலும் திரு உள்ளக் கருணை மேல் மேல்
வைத் தன்னம் என அயர்வாள் மாடு நீடு மா
தவத்தோர் சூழ எழுந்து அருளி வந்தார்
6.1.478
6.1.479
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று
சிவபெருமான் அருள் போற்றிச் சிந்தை நைந்து
பரிவுறுவாள் தனை நோக்கிப் பயப்படேல் நீ
பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்னக்
கரமலர் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு
கண் அருவி சொரிந்து இழியக் காழி வேதப்
புரவலனார் சேவடிக் கீழ் வீழ்ந்து தாங்கள்
போந்ததுவும் புகுந்ததுவும் புகலல் உற்றாள்
6.1.479
6.1.480
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன்
எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர்நல்ல
இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள்
இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்குக்
குளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த
பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான்
தளர்ந்து அழியும் இவனுக்காத் தகவு செய்து
அங்கு அவரை மறைத்து இவன் தனையே சார்ந்துபோந்தேன்
6.1.480
6.1.481
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான்
மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல்நின்றேன்
சுற்றத்தார் என வந்து தோன்றி என்பால் துயரம்
எலாம் நீங்க அருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர்
கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள் அரவு விடம் தீரு மாறு பணைமருகர்
பெருமானைப் பாடலுற்றார்
6.1.481
6.1.482
சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை
சங்கரனை சசி கண்ட மவுலியானை
விடையானை வேதியனை வெண் நீற்றானை
விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு
அணையில் துயின்றானும் பரவும் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
ஒள்ளிழையார் உள் மெலிவு என்று எடுத்துப் பாட
6.1.482
6.1.483
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான்
சூழ்ந்த பொருவில் திருத் தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை உச்சியின் மேல் குவித்துக்
கொண்டு அங்கு அருள் காழிப் பிள்ளையார் அடியில்வீழ்ந்த
நங்கை அவள் தணை நயந்த நம்பியோடு
நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர்
மணம் புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்
6.1.483
6.1.484
மற்றவர்க்கு விடை கொடுத்து அங்கு அமரும்
நாளில் மருகல் நகரினில் வந்து வலியபாசம்
சொற்ற புகழ்ச் சிறுத் தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியில் எழுந்து அருள வேண்டிப்
பற்றி எழும் காதல் மிக மேல் மேல் சென்று பரமனார்
திறத்து உன்னிப் பாங்கர் எங்கும்
சுற்றும் அருந்தவரோடும் கோயில் எய்திச் சுடர் மழு
ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார்
6.1.484
6.1.485
புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார்
பொங்கு திரை நதிப்புனலும் பிறையும்சேர்ந்த
செக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம்
திருமேனி ஒரு பாகம் பசுமை ஆக
மைக் குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு
நிலை மனம் கொண்டு வணங்குவார் முன்
கைக் கனலார் கணபதீச் சரத்தின் மேவும் காட்சி
கொடுத்து அருளுவான் காட்டக் கண்டார்
6.1.485
6.1.486
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு
செங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு உடைக்
கோலமே ஆகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க உலகர்
முன் கொள்ளும் உணர்வு நீட
அருவி கண் வார் உறப் பாடலுற்றார்
அங்கமும் வேதமும் என்று எடுத்து
6.1.486
6.1.487
கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக்
கணபதி ஈச்சரம் காதலித்த
அண்டர் பிரானை வணங்கி வைகும்
அப்பதியில் சில நாள் போற்றித்
தொண்டருடன் அருள் பெற்று மற்றத்
தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப்
புண்டரிகத் தடம் சூழ் பழனப் பூம்
புகலூர் தொழப் போதுகின்றார்
6.1.487
6.1.488
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்
தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை
அருளப் பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும்
பதிகன் பல பணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில்
புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார்
6.1.488
6.1.489
திருப்புகலூர் திருத் தொண்டரோடும்
செம்மை முருகனார் மெய்ம் மகிழ்ந்த
விருப்பொடு சென்று எதிர் கொள்ள வந்து
வேத முதல்வர் தம் கோயில் எய்திப்
பொருப்பு உறழ் கோபுரத்து உட் புகுந்து
பூமலி முன்றில் புடை வலம் கொண்டு
ஒருப் படு சிந்தையொடு உள் அணைந்தார்
ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார்
6.1.489
6.1.490
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து
பூம் புகலூர் மன்னு புண்ணியரை
நெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க
நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய
மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி
மேவிய ஏழ் இசை பாடிப் போந்து
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல
அவர் மடம் சென்று புக்கார்
6.1.490
6.1.491
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி
அப் பதி தன்னில் அமரு நாளில்
வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த வர்த்த
மானீச்சரம் தான் வணங்கி
ஓங்கிய அன்பின் முருகனார் தம் உயர்
திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும்
பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர்
தம் பாதம் பணிந்து இருந்தார்
6.1.491
6.1.492
மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின்
பெரு விறல் மன்னனார் தாம்
புற்றிடம் கொண்டாரை வந்து இறைஞ்சிப்
பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்
சிறு இடைப் பொன் தொடிப் பாங்கர்
தங்கும் திருப்புகலூர் தொழச் சிந்தை செய்து
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர்
குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார்
6.1.492
6.1.493
நாவுக்கு அரசர் எழுந்து அருளும்
நல்ல திருவார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞான
சம்பந்தர் சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிகப் பெருக விரைந்து எதிர்
கொள்ள மெய் அன்பர் ஓடும்
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு
அணை எல்லை கடந்து போந்தார்
6.1.493
6.1.494
அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த
அரசும் எதிர் வந்து அணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த பூசுரர்
சிங்கமும் பொற்பின் எய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே
தாழ்ந்து வணங்கித் தனித் தனியே
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை
வினவி மகிழும் போது
6.1.494
6.1.495
மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின்
வேந்தரை விருப்பினாலே
அப்பரை இங்கு அணையப் பெறும் பேர்
அருள் உடையோம் அந்தனர் ஆரூர்
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று
வினவிட ஈறில் பெரும் தவத்தோர்
செப்பிய வண் தமிழ் மாலையாலே திருவாதிரை
நிகழ் செல்வம் சொன்னார்
6.1.495
6.1.496
அரசர் அருளிச் செய்த வாய்மை
அப்பொழுதே அருள் ஞானம் உண்ட
சிரபுர வேந்தரும் சிந்தையின் கண்
தென் திருவாரூர் வணங்குதற்கு
விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும்
வந்து உம்முடன் மேவுவன் என்று
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து
உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார்
6.1.496
6.1.497
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர்
தோன்றல் பின் காதல் தொடத் தாமும்
பொன் புகலூர் தொழச் சென்று அணைந்தார்
புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர்
பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன்
நான் மறைப் பாடிப் போந்தார்
6.1.497
6.1.498
துணர் இணர்ச் சோலையும் சாலி
வேலித் துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின்
மண மலி கானமும் ஞானமும் உண்டார்
மருங்கு உற நோக்கி மகிழ்ந்து அருளி
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம்
என மொழிந்து அன்பு பொங்கப்
புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப்
பொன் மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார்
6.1.498
6.1.499
வான் உயர் செங்கதிர் மண்டலத்து
மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர்
தான் ஒரு பொன் உலகு என்னத் தோன்றும்
தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த
பால் நிற நீற்றர் பருக்கையானைப் பதிகத்
தமிழ் இசைபாடி ஆடித்
தேனொடு வண்டுமுரலும் சோலைத்
திருப்பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார்
6.1.499
6.1.500
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம்
பொழிந்து புவிமேல் பொலிவது என்ன
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு
சிவிகை இழிந்தருளிச்
செங்கை நிறை மலர் கொண்டு தூவித்
திரு இருக் குறள் பாடி ஏத்தித்
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்
தனைப் பணிவு உற்றார் தமிழ் விரகர்
6.1.500
6.1.501
படியில் ஞானம் உண்டு அருளிய பிள்ளையைப் பணிதற்கு
அடியர் சென்று எதிர் கொள எழுந்து அருளும் அஞ்ஞான்று
வடி கொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க்
கடி கொள் பேரணிப் பொலிவையார் முடிவுறக் காண்பார்
6.1.501
6.1.502
நான மான் மத நளிர் பெரும் சேற்று இடை நறும் பொன்
தூ நறுந்துகள் சொரிதலில் சுடர் ஒளிப் படலை
யான வீதிகள் அடி வலித்து அவை கரைந்தலைய
வான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி
6.1.502
6.1.503
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள்
தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்பு
காடு கொண்டன கதலி தோரணம் நிரைக் கமுகு
மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம்
6.1.503
6.1.504
மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின்
கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும்
நீல மா மணி நிழல் பொர நிறம்புகர் படுக்கும்
பால வாயின பவன வேதிகை மலர்ப் பந்தர்
6.1.504
6.1.505
தழை மலர்த்தடம் சாலைகள் தெற்கள் சதுக்கம்
குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும்
விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து
மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள்
6.1.505
6.1.506
விரவு பேர் அணி வேறு வேறு இன்னன விளங்கும்
பிரசமென்மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர்
அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும்
புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர் கொள்ளும் பொழுது
6.1.506
6.1.507
வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் தம் குழாத்து எதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர்
அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே
எந்தை தான் எனை என்று கொள்ளும் கொல் என்று இசைத்தார்
6.1.507
6.1.508
ஆன அத்திரு பதிகம் முன் பாடிவந்து அணையும்
ஞான வித்தகர் மெய்த்தவர் சூழ அந் நகரார்
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய்த் தொழுது ஏத்த
வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார்
6.1.508
6.1.509
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார்
தன் உள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம்
பன் நெடும் சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார்
6.1.509
6.1.510
. மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கிக்
கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்துத்
தேடு மால் அயர்க்கு அரியராய்ச் செழுமணிப் புற்றில்
நீடு வாழ் முன்பு நிலமுறப் பல முறை பணிந்தார்
6.1.510
6.1.511
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம்
அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப் பொருள் ஆனவர் தமைக் கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார்
6.1.511
6.1.512
செஞ் சொல் வண் தமிழ்த் திருப்பதிகத்து இசை எடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி
மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து
அஞ்சு எழுத்தின் மெய் உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார்
6.1.512
6.1.513
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த
செங்கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்துப்
பொங்கு பேர் ஒளிப் புற்று இடம் கொண்டவர் புனிதப்
பங்கயப் பதம் தொழுது காலம் தொறும் பணிந்தார்
6.1.513
6.1.514
புற்றிடம் கொளும் புனிதரைப் போற்றி இசை பெருக
பற்றும் அன்பொடு பணிந்து இசைப் பதிகங்கள் பாடி
நல்தவத் திருத்தொண்டர்கள் ஒடு நலம் சிறப்ப
மற்ற வண்பதி தன் இடை வைகும் அந் நாளில்
6.1.514
6.1.515
மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலாத்
தொல்லை நான் மறை முதல்வர் தம் பதி பல தொழுதே
எல்லை இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார்
6.1.515
6.1.516
ஊறு காதலில் ஒளி வளர் புற்றிடம் கொண்ட
ஆறு உலாவிய சடை முடி ஐயரைப் பணிந்து
நீறு வாழ் என நிகழ் திருத் தொண்டர் களோடும்
ஈறிலாத் திரு ஞான சம்பந்தர் அங்கு இருந்தார்
6.1.516
6.1.517
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல
நங்கள் தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து
பொங்கு சீர்ப் புகலூர் தொழ அருளினால் போவார்
தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்து அருள் செய்வார்
6.1.517
6.1.518
புவன ஆரூரினில் புறம் போந்து
அதனையே நோக்கி நின்றே
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ
உய்யும் ஆறு அறிதி அன்றே
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது
என்று செங்கை கூப்பி
பவனமாய்ச் சோடையாய் எனும்
திருப்பதிகம் முன் பாடினாரே
6.1.518
6.1.519
காழியார் வாழ வந்து அருள் செயும்
கவுணியப் பிள்ளையார் தாம்
ஆழியான் அறிஒணா அண்ணல்
ஆரூர் பணிந்து அரிது செல்வார்
பாழி மால் யானையின் உரி புணைந்தார்
பனையூர் பணிந்து
வாழி மாமறை இசைப் பதிகமும் பாடி
அப் பதியினில் வைகி
6.1.519
6.1.520
அங்கு நின்று அரிது எழுந்து அருளுவார் அகில காரணமும் ஆனார்
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே
எங்கும் மெய்த்தவர் குழாம் எதிர் கொளத் தொழுது எழுந்து அருளி வந்தார்
பொங்கு தண் பாசடைப் பங்கயப் புனல் வயல் புகலூர் சார
6.1.520
6.1.521
நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாமச்
சேவுகைத்தவர் திருத் தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீதப்
பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே
மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார்
6.1.521
6.1.522
தேவர் தம் தலைவனார் கோயில் புக்கு
அனைவரும் சீர் நிலத்து உற வணங்கி
பாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி முன்
பரவுவார் புறம்பு அணைந்தே
தாவில் சீர் முருகனார் திருமனைக்கு எய்தி
அத் தனி முதல் தொண்டர் தாமே
யாவையும் குறை அறுத்து இட அமர்ந்து
அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில்
6.1.522
6.1.523
நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத்
தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மைச்
சீலம் மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும்
செய்கை நேர் நின்று வாய்மை
சாலமிக்கு உயர் திருத் தொண்டின்
உண்மை திறம் தன்னையே தெளிய நாடிக்
காலம் உய்த்தவர்களோடு அளவளாவிக்
கலந்து அருளினார் காழி நாடார்
6.1.523
6.1.524
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து
இசை எனும் பதிக முன் ஆன பாடல்
தம் பெரும் தலைமையால் நிலைமை சால்
பதிய தன் பெருமை சால்புற விளம்பி
உம்பரும் பரவுதற்கு உரிய சொல்
பிள்ளையார் உள்ளம் மெய்க் காதல் கூர
நம்பர் தம் பதிகள் ஆயின ஏனைப் பலவும்
முன் நண்ணியே தொழ நயந்தார்
6.1.524
6.1.525
புள்ளல் அம்பு தண்புனல் புகலூர்
உறை புனிதனார் அருள் பெற்றுப்
பிள்ளையார் உடன் நாவினுக்கு
அரசரும் பிற பதி தொழச் செல்வார்
வள்ளலார் சிறுத் தொண்டரும் நீல
நக்கரும் வளம் பதிக்கு ஏக
உள்ளம் அன்புறும் முருகர் அங்கு
ஒழியவும் உடன்பட இசைவித்தார்
6.1.525
6.1.526
கண்ணகன் புகல் ஊரினைத் தொழுது
போம் பொழுதினில் கடல் காழி
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம்
அருகு விட்டு அகலாதே
வண்ண நித்திலச் சிவிகையும் பின் வர
வழிகொள உறும் காலை
எண்ணில் சீர்த்திரு நாவினுக்கு அரசரும்
மற்று அவர்க்கு இசைக்கின்றார்
6.1.526
6.1.527
நாயனார் உமக்கு அளித்து அருள்
செய்த இந் நலம் கிளர் ஒளி முத்தின்
தூய யானத்தின் மிசை எழுந்து அருளுவீர்
என்றலும் சுடர்த் திங்கள்
மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில்
விரும்பு தொண்டர்களோடும்
போய தெங்குநீர் அங்கு யான் பின் வரப்
போவது என் அருள் செய்தார்
6.1.527
6.1.528
என்று பிள்ளையார் மொழிந்து அருள் செய்திட
இரும் தவத்து இறையோரும்
நன்று நீர் அருள் செய்ததே செய்வன் என்று
அருள் செய்து நயப்பு உற்ற
அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள்
எலாம் அவ் இயல்பினில் செல்வார்
சென்று முன் உறத் திருவம்பர் அணைந்தனர்
செய்தவக் குழாத்தோடும்
6.1.528
6.1.529
சண்பை மன்னரும் தம்பிரான் அருள்
வழி நிற்பது தலைச் செல்வார்
பண்பு மேம் படு பனிக்கதிர் நித்திலச்
சிவிகையில் பணிந்து ஏறி
வண் பெரும் புகல் ஊரினைக் கடந்து
போய் வரும் பரிசனத்தோடும்
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு
என்று போய்த் திருவம்பர் நகர் புக்கார்
6.1.529
6.1.530
அம்பர்மா நகர் அணைந்து மா
காளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம் பொன் மாமதில் கோயிலை வலம் கொண்டு
திருமுன்பு பணிந்து ஏத்தி
வம்புலாம் மலர் தூவி முன் பரவியே வண்
தமிழ் இசை மாலை
உம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப்
பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார்
6.1.530
6.1.531
தாழ்ந்து நாவினுக்கு அரசுடன்
தம்பிரான் கோயில் முன்புறம் எய்திச்
சூழ்ந்த தொண்டரோடு அப்பதி
அமர்பவர் சுரநதி முடிமீது
வீழ்ந்த வேணியர் தமைப் பெரும் காலங்கள்
விரும்பினால் கும்பிட்டு
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ
வந்து அருளிய மறை வேந்தர்
6.1.531
6.1.532
பொருவு இலாத சொல் புல்கு பொன்
நிறம் முதல் பதிகங்களால் போற்றித்
திருவின் ஆர்ந்த கோச் செங்கணான்
அந்நகர் செய்த கோயிலைச் சேர்ந்து
மருவு வாய்மை வண் தமிழ் மாலை
அவ்வளவனைச் சிறப்பித்துப்
பெருகு காதலில் பணிந்து முன் பரவினார்
பேணிய உணர்வோடும்
6.1.532
6.1.533
இன்ன வாறு சொல் மாலைகளால்
துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில்
கன்னி மா மதில் திருக்கடவூர் தொழக்
காதல் செய்து அருளிப்போய்
மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே
வாக்கின் மன்னவ ரோடும்
அந்நெடும்பதி அணை உறக் அயலரோடு
அடியவர் எதிர்கொண்டார்
6.1.533
6.1.534
மற்ற வண் பதி அணைந்து வீர
அட்டத்து மழவிடையார் கோயில்
சுற்று மாளிகை வலம் கொண்டு காலனை
உதைத்து உருட்டிய செய்ய
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன்
போற்றி உய்ந்து எதிர் நின்று
பற்று அறுப்பவர் சடை உடையான்
எனும் பதிக இன் இசை பாடி
6.1.534
6.1.535
பரவி ஏத்தி அங்கு அரிதினில்
போந்து பார் பரவு சீர் அரசோடு
விரவு நண்பு உடை குங்கிலிய பெருங்
கலயர் தம் மனை மேவிக்
கரை இல் காதல் மற்று அவர் அமைத்து
அருளிய விருந்து இனிது அமர்ந்து
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து
இருந்தனர் சிறப்பு எய்தி
6.1.535
6.1.535
சிறப்பு உடைத் திருப்பதி அதன்
இடைச் சில நாள் அமர்ந்து அருளோடும்
விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள்
தொழச் செல்வார்
மறைப் பெரும் திருக் கலயரும் உடன்பட
வணங்கிய மகிழ்வோடும்
அறப் பெரும் பயன் அனைய அத் தொண்டரோடு
அணைந்தனர் திருவாக்கூர்
6.1.535
6.1.537
தக்க அந்தணர் மேவும் அப் பதியினில்
தான் தோன்றி மாடத்துச்
செக்கர் வார் சடை அண்ணலைப்
பணிந்து இசைச் செந்தமிழ் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது
போய் மீச்சூர் பணிந்து ஏத்திப்
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார்
பாம்புரம் நகர் சேர்ந்தார்
6.1.537
6.1.538
பாம்புரத் துறை பரமரைப் பணிந்து
நல் பதிக இன் இசை பாடி
வாம்புனல் சடை முடியினார் மகிழ்
இடம் மற்றும் உள்ளன போற்றிக்
காம்பினில் திகழ் கரும்பொடு செம்
நெலின் கழனி அம்பணை நீங்கித்
தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின்
மருங்கு உறச் செல்கிறார்
6.1.538
6.1.539
அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர் கொண்ட
மெய்ப் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார்
பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார்
எப் பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர் கொண்டார்
6.1.539
6.1.540
நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி
நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப
இறைவர் திரு மைந்தர் தமை எதிர் கொள் வரவேற்றார்
6.1.540
6.1.541
வந்து திரு வீழி மிழலை மறை வல்ல
அந்தணர்கள் போற்றி இசைப்பத் தாமும் மணி முத்தின்
சந்த மணிச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து அருளி
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார்
6.1.541
6.1.542
அப்போது அரையார் விரிகோவண ஆடை
ஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடி
மெய்ப் போதப் போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார்
கைப் போது சென்னியின் மேல் கொண்டு கவுணியர்
6.1.542
6.1.543
நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண
மேவிய விண் இழிந்த கோயில் வலம் கொள்வார்
பூவியலும் உந்தியான் போற்றப் புவிக் கிழிந்த
தேவியலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார்
6.1.543
6.1.544
வலம் கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின்
சலம் கொண்ட வேணித் தனி முதலைத் தாழ்ந்து
நிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல்
புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார்
6.1.544
6.1.545
போற்றிச் சடையார் புனல் உடையான் என்று எடுத்து
சாற்றிப் பதிகத் தமிழ் மாலை சந்த இசை
ஆற்ற மிகப் பாடி ஆனந்த வெள்ளத்தில்
நீற்றழகர் சேவடிக் கீழ் நின்று அலைந்து நீடினார்
6.1.545
6.1.546
நீடிய பேரன்பு உருகி உள்ளலைப்ப நேர் நின்று
பாடி எதிர் ஆடிப் பரவிப் பணிந்து எழுந்தே
ஆடிய சேவடிகள் ஆர்வம் உற உட்கொண்டு
மாடுயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார்
6.1.546
6.1.547
வந்து அணைந்து வாழ்ந்து மதில்புறத்து ஓர் மா மடத்துச்
செம் தமிழ்ச் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருளச்
சந்த மணிக் கோபுரத்துச் சார்ந்த வடபால் சண்பை
அந்தணர் சூளா மணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார்
6.1.547
6.1.548
அங்கண் அமர்வார் அரனார் அடி இணைக் கீழ்த்
தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே
பொங்கு புகழ் வாகீசரும் கூடப் போற்றி இசைத்தே
எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார்
6.1.548
6.1.549
ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கர் திலதைப் பதிமுற்றமும் பணிந்து
வீங்கு ஒலி நீர் வீழி மழலையினில் மீண்டும் அணைந்து
ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில்
6.1.549
6.1.550
சேண் உயர் மாடப் புகலி உள்ளார்
திரு ஞான சம்பந்தப் பிள்ளையாரைக்
காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம்
மிகு காதல் கரை இகப்பப்
பூணும் மனத்தொடு தோணி மேவும்
பொருவிடை யார் மலர்ப் பாதம் போற்றி
வேணு புரத்தை அகன்று போந்து வீழி
மிழலையில் வந்து அணைந்தார்
6.1.550
6.1.551
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து
ஓங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து
மருங்கு அணைந்தார்கள் என்ன
வீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்
ஞானம் உண்டாரை முன்னா
ஏழ் இசை சூழ்மறை எய்த ஓதி எதிர் கொள்
முறைமையில் கொண்டு புக்கார்
6.1.551
6.1.552
சண்பைத் திருமறையோர்கள் எல்லாம்
தம் பிரானாரைப் பணிந்து போந்து
நண்பில் பெருகிய காதல் கூர்ந்து
ஞான சம்பந்தர் மடத்தில் எய்திப்
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார்
பாதம் பணிந்து பூண்டே
எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு
எழுந்து அருளப் பெற வேண்டும் என்றார்
6.1.552
6.1.553
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில்
ஈறு இல் சிவ ஞானப் பிள்ளை யாரும்
நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர்
கழல் இணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர்
அருள் பெற்று போவது என்றே
அன்று புகலி அருமறையோர்க்கு அருள்
செய்து அவர்க்கு முகம் அளித்தார்
6.1.553
6.1.554
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும்
வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து
பரம் பொருள் ஆனார் தமைப் பரவும்
சீர் பட்ட எல்லை இனிது செல்லத் திருத்
தோணி மேவிய செல்வர் தாமே
கார் பட்ட வண்கைக் கவுணியர்க்கு கனவிடை
முன் நின்று அருள் செய்கின்றார்
6.1.554
6.1.555
தோணியில் நாம் அங்கு இருந்த
வண்ணம் தூமறை வீழி மிழலை தன்னுள்
சேண் உயர் விண்ணினின்று இழிந்த
இந்தச் சீர் கொள் விமானத்துக் காட்டுகின்றோம்
பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்து
அருள் செய்யப் பெரும் தவங்கள்
வேணு புரத்தவர் செய்ய வந்தார் விரவும்
புளகத் தொடும் உணர்ந்தார்
6.1.555
6.1.556
அறி உற்ற சிந்தையராய் எழுந்தே
அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பி
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண்
இழி கோயிலில் சென்று புக்கு
மறி உற்ற கையரைத் தோணி மேல் முன்
வணங்கும்படி அங்குக் கண்டு வாழ்ந்து
குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய
கொள்கையில் பாடுகின்றார்
6.1.556
6.1.557
மைம் மரு பூங்குழல் என்று எடுத்து
மாறில் பெரும் திருத்தோணி தன் மேல்
கொம்மை முலையினாள் கூட நீடு
கோலம் குலாவு மிழலை தன்னுள்
செம்மை தரு விண் இழிந்த கோயில்
திகழ்ந்தபடி இது என் கொல் என்று
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி
மகிழ்ந்தனர் வேதவாயர்
6.1.557
6.1.558
செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம்
பாடி திருக் கடைக் காப்புச் சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார்
ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து
மஞ்சிவர் சோலைப் புகலி மேவும் மா
மறையோர் தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை
திறத்தை அருள் செய்கின்றார்
6.1.558
6.1.559
பிரம புரத்தில் அமர்ந்த முக்கண்
பெரிய பிரான் பெருமாட்டி யோடும்
விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய
கோலம் பணிந்து போற்றி
வருவது மேல் கொண்ட காதல் கண்டு
அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று
தெரிய உரைத் தருள் செய்து நீங்கள்
சிரபுர மாநகர் செல்லும் என்றார்
6.1.559
6.1.560
என்று கவுணியப் பிள்ளையார் தாம்
இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே
ஒன்றிய காதலின் உள்ளம் அம் கண்
ஒழிய ஒருவாறு அகன்று போந்து
மன்றுள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம்
பலவும் வணங்கிச் சென்று
நின்ற புகழ்த் தோணி நீடுவாரைப் பணியும்
நியதியராய் உறைந்தார்
6.1.560
6.1.561
சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத்
திருவீழி மேவிய செல்வர் பாதம்
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின்
வழாத் திருத் தொண்டர் சூழ
உரவுத் தமிழ்த் தொடை மாலை சாத்தி
ஓங்கிய நாவுக்கு அரசரோடும்
விரவிப் பெருகிய நண்பு கூர மேவி
இனிது அங்கு உறையும் நாளில்
6.1.561
6.1.562
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள்
தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை
ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு
பண் அமரும் மொழி உமையாள் முலையின்
ஞானப் பால் அறா வாயருடன் அரசும் பார் மேல்
கண் நுதலான் திருநீற்றுச் சார் வினோர்க்கும்
கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார்
6.1.562
6.1.563
வானாகி நிலனாகி அனலுமாகி மாருதமாய்
இரு சுடராய் நீரும் ஆகி
ஊனாகி உயிராகி உணர்வுமாகி உலகங்கள்
அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய அடி
பரவி அன்று இரவு துயிலும் போது
கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார்
கனவில் அணைந்து அருளிச் செய்வார்
6.1.563
6.1.564
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய
உறுபசி நோய் உமை அடையாது எனினும் உம்பால்
நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம்
நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும்
இலகு மணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும்
உமக்கு இந்தக் காலம் தீர்ந்தால்
அலகில் புகழீர் தவிர்வ தாகும் என்றே அருள்
புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்
6.1.564
6.1.565
தம்பிரான் அருள் புரிந்து கனவின்
நீங்கச் சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே
நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி
வம்புலா மலர் இதழி வீழிநாதர் மணிக்
கோயில் வலம் செய்யப் புகுந்த வேலி
அம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம்
அபிமுகத்துப் பீடிகை மேல் காசு கண்டார்
6.1.565
6.1.566
காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று
கை குவித்துப் பெரு மகிழ்ச்சி கலந்துபொங்க
நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும் நல்
விருந்தாய் உண்பதற்கு வருக என்று
தீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர்
திருவமுது கறி நெய்பால் தயிர் என்று இன்ன
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண்
இருதிறத்து பெரும் தவரும் இருந்த நாளில்
6.1.566
6.1.567
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர்
நாட் கூறு திரு அமுது செய்யக் கண்டு
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம்
திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித்
தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு
அமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம்
விளைந்தவாறு என் கொலோ விளம்பும் என்றார்
6.1.567
6.1.568
திருமறையோர் தலைவர் தாம் அருளிச்
செய்யத் திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள்
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்
பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு
கருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால்
காசு தனை வாசி பட வேண்டும் என்பார்
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே
கொள்வர் இது பிற்பாடு என்றார்
6.1.568
6.1.569
திரு ஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த
ஒரு காசு வாசிபட மற்றக் காசு நன்று ஆகி
வாசி படாது ஒழிவான் அந்தப்
பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால்
பெறும் காசாம் ஆதலினால் பெரியோன் தன்னை
வருநாள்கள் தரும் காசு வாசி தீரப் பாடுவன்
என்று எண்ணியது மனதுள் கொண்டார்
6.1.569
6.1.570
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு
வாசி தீர்த்து அருளும் எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து
போய் ஆவண வீதியினில் காட்ட
நல் தவத்தீர் இக் காசு சால நன்று வேண்டுவன
நாம் தருவோம் என்று நல்க
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில்
அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார்
6.1.570
6.1.571
அருவிலையில் பெரும் காசும் அவையே
ஆகி அமுது செய்யத் தொண்டர் அளவு இறந்துபொங்கி
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும்
மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆகத்
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவ
பெருமான் அருள் செய்ய சிறப்பின் மிக்க
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கு
அரசர் இவர் பெரும் சோற்றுப் பிறங்கல் ஈந்தார்
6.1.571
6.1.572
அவனி மிசை மழை பொழிய உணவு மல்க்¢
அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த
புரி சடையார் கழல் பலநாள் போற்றி வைகிப் 2
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூடத் தம்பிரான்
அருள் பெற்றுத் தலத்தின் மீது
சிவன் மகிழும் தானங்கள் வணங்கப் போவார்
தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார்
6.1.572
6.1.573
நீடு திரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
நீல மிடற்று அருமணியை வணங்கிப் போற்றிப்
பாடொலி நீர்த் தலையாலம்காடு மாடு பரமர்
பெருவேளூரும் பணிந்து பாடி
நாடு புகழ்த் தனிச் சாத்தங் குடியில் நண்ணி
நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடித்
தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றித்
திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார்
6.1.573
6.1.574
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர் ஓங்கு
புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றி
செம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
திரு மலி வெண் துறை தொழுவான் சென்று சேர்ந்தார்
6.1.574
6.1.575
மற்றவ்வூர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால்
அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம்
பற் பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரவும்
திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர் வாழ் தண்தலை நீள் நெறி உள்ளிட்ட
கனக மதில் திருக் களரும் கருதார் வேள்வி
செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றித்
திருமறைக் காட்டு அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே
6.1.575
6.1.576
கார மண் வெஞ்சுரம் அருளால் கடந்தார் தாமும்
கடல் காழி கவுணியர் தம் தலைவர் தாமும்
சேர எழுந்து அருளிய அப் பேறு கேட்டுத் திறை
மறைக் காட்டு அகன்பதியோர் சிறப்பில் பொங்கி
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர்
கமுகு கதலி நிறை குடம் தீபங்கள்
வார் முரசம் மங்கள் நாள் தங்கள் மல்க எதிர்
கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார்
6.1.576
6.1.577
முன் அணைந்த திருநாவுக்கு அரசர் தம்மை
முறைமையால் எதிர் கொண்டு களிப்பின் மூழ்கிப்
பின் அணைய எழுந்து அருளும் பிள்ளையார்
தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டுச்
சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று
சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை
மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று
வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார்
6.1.577
6.1.578
சொல் அரசர் உடன் கூடப் பிள்ளையாரும்
தூமணி நீர் மறைக் காட்டுத் தொல்லை மூதூர்
மல்கு திரு மறுகின் கண் புகுந்த போது மாதவர்கள்
மறையவர்கள் மற்றும் உள்ளோர்
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை
இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண்மேல்
உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே
6.1.578
6.1.579
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற
அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின்
முன்னர்க் கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக்குறுகிப் புக்கு
முடிவில் இமையவர் முனிவர் நெருங்கும்
தெய்வ முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்னாள்
படியின் மறை அருச்சித்துக் காப்பு செய்த
பைம் பொன் மணித் திருவாயில் பாங்கு வந்தார்
6.1.579
6.1.580
அரு மறைகள் திருக் காப்புச் செய்து
வைத்த அக்கதவம் திறந்திட அம் மறைகள் ஓதும்
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து
நீக்கப் பெருமையினால் அன்று முதலாகப் பின்னை
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும்
தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பைத்
திருமறையோர் தலைவர் வியப்பு எய்தி
நின்று திருநாவுக்கு அரசருக்குச் செப்புகின்றார்
6.1.580
6.1.581
அப்பரே வேத வனத்து ஐயர் தம்மை
அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே
இவ்வாயில் திருக்காப்பு நீங்கு மாறு
மெய்ப் பொருள் வண் தமிழ் பாடி அருளும்
என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை
இப்பரிசு நீர் அருளிச் செய்தீர் ஆகில் இது
செய்வேன் எனப் பதிகம் எடுத்துப் பாட
6.1.581
6.1.582
பாடிய அப் பதிகப் பாட்டு ஆன பத்தும்
பாடல் நிரம்பிய பின்னும் பைம் பொன் வாயில்
சேடு உயர் பொன் கதவு திருக் காப்பு நீங்காச்
செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடு திருக் கடைக் காப்பில் அரிது வேண்டி
நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்ட
ஆடிய சேவடியார் தம் அடியார் விண்ணோர்
ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க
6.1.582
6.1.583
மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கிப்
பொற்புறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி
அற்பது நிலையினார்கள் அணி திரு மறைக்காடு ஆளும்
கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார்
6.1.583
6.1.584
கோயில் உட்புகுவார் உச்சி குவித்த செங்கைகளோடும்
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார்
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்யர் ஆகி விதிர்புற்று விரைவின் வீழ்ந்தார்
6.1.584
6.1.585
அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்பு நெக்கு உருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர்
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்
6.1.585
6.1.586
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி
நிறம் கிளர் மணிக் கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத்
திறிந்தவாறு அடைக்கப்பாடி அருளும் நீர் என்றார் தீய
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார்
6.1.586
6.1.587
அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப் பிள்ளையாரும்
வென்றி வெள் விடையார் தம்மை விருப்பினால் சதுரம் என்னும்
இன் தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும்
நின்ற அக் கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே
6.1.587
6.1.588
அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகை யாரும் அஞ்சொல்
தொடைத் தமிழாளி யாரும் தொழுது எழத் தொண்டர் ஆர்த்தார்
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ மழை புகலி வேந்தர்
நடைத் தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி
6.1.588
6.1.589
அத்திரு வாயில் தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற
வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு இலாப் பெருமையோரை
கைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம்
6.1.589
6.1.590
அருமறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்துப்
பெருமையின் முழங்கப் பஞ்ச நாதமும் பிறங்கி ஓங்க
இரு பெரும் தகையோர் தாமும் எதிர் எதிர் இறைஞ்சிப் போந்து
திரு மடங்களின் முன் புக்கார் செழும்பதி விழவு கொள்ள
6.1.590
6.1.591
வேதங்கள் எண்ணில் கோடி மிடைந்து செய் பணியை மிக்க
ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார்
நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய
பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார்
6.1.591
6.1.592
திருமறை நம்பர் தாம் முன்பு அருள் செய்த அதனைச் செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார் பால் ஒக்க
வரும் அருள் செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால்
பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே
6.1.592
6.1.593
இவ்வகை திருமறைக் காட்டு இறையவர் அருளை உன்னி
மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில்
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர்
அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளிப் போக
6.1.593
6.1.594
. கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார்
மண்டிய காதலோடு மருவுவார் போன்றும் காணார்
எண்திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா
அண்டர் தம்பிரானார் தம் பின் போயினார் ஆர்வத் தோடும்
6.1.594
6.1.595
அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும் அப்பர்
எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில்
பொங்கிய காதலால் என்று உரைத்திடப் போன தன்மை
சங்கை உற்று என்கொல் என்று தாமும் அங்கு அணையப் போந்தார்
6.1.595
6.1.596
அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட
மன்னிய ஆடல் காட்டத் தளர் இளவள ரும் பாடிச்
சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு
இன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார்
6.1.596
6.1.597
நீடு சீர்த் திருவாய் மூரில் நிலவிய சிவனார் தம்மைப்
பாடு சொல் பதிகம் தன்னால் பரவி அப் பதியில் வைகிக்
கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு
தேடு மா மறைகள் கண்டார் திரு மறைக்காடு சேர்ந்தார்
6.1.597
6.1.598
சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழித் தலைவரோடு
மண் பயில் சீர்த்திச் செல்வ மா மறைக் காட்டு வைகிக்
கண் பயில் நெற்றியார் தம் கழல் இணை பணிந்து போற்றிப்
பண் பயில் பதிகம் பாடிப் பரவி அங்கு இருந்தார் அன்றே
6.1.598
6.1.599
இவ் வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால்
செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டி நாட்டு
மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக்
கை வகை முறைமைத் தன்மை கழிய முன் கலங்கும் காலை
6.1.599
6.1.600
தென்னவன் தானும் முன் செய் தீவினைப் பயத்தினாலே
அந் நெறிச் சார்வு தன்னை அறம் என நினைந்து நிற்ப
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும்
நன் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே
6.1.600
6.1.601
பூழியர் தமிழ் நாட்டு உள்ள பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
சூழ் இருள் குழுக்கள் போலத் தொடை மயில் பீலி யோடு
மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப
6.1.601
6.1.602
பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
செறியும் உக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி
அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ
நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும் காலை
6.1.602
6.1.603
வரிச் சிலைத் தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான்
திரு உயிர்த்து அருளும் செல்வப் பாண்டிமா தேவியாரும்
குரை கழல் அமைச்சனாராங் குலச் சிறையாரும் என்னும்
இருவர் தம் பாங்கும் அன்றிச் சைவம் அங்கு எய்தாதாக
6.1.603
6.1.604
ஆங்கு அவர் தாங்கள் அம் கண் அரும் பெறல் தமிழ் நாடு உற்ற
தீங்கினுக்கு அளவு தேற்றாச் சிந்தையில் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூங்கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார்
6.1.604
6.1.605
இந் நெறி ஒழுகு கின்றார் ஏழ் உலகு உய்ய வந்த
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச்
செந்நெறி விளக்கு கின்றார் திரு மறைக்காடு சேர்ந்த
நல்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார்
6.1.605
6.1.606
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க
நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி
வாள் படை அமைச்சனார் உம் மங்கையர்க்கு அரசியாரும்
சேட் படு புலத்தார் ஏனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார்
6.1.606
6.1.607
காதலால் மிக்கோர் தாங்கள் கை தொழும் கருத்தினாலே
போது அவிழ் சோலை வேலிப் புகலி காவலனார் செய்ய
பாதங்கள் பணிமின் என்று பரிசன மாக்கள் தன்மை
மா தவம் சுருதி செய்த மா மறைக் காட்டில் விட்டார்
6.1.607
6.1.608
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடைமாந்தர் அம் கண்
நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி
ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து
தேன் கமழ் கை தை நெய்தல் திருமறைக் காடு சேர்ந்தார்
6.1.608
6.1.609
திருமறைக்காடு நண்ணிச் சிரபுர நகரில் வந்த
அருமறைப் பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ
பெருமடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள்
வரு முறைத் தன்மை எல்லாம் வாயில் காவலர்க்குச் சொன்னார்
6.1.609
6.1.610
மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவி யாரும் குலச்சிறையாரும் ஏவப்
பொற்கழல் பணிய வந்தோம் எனச் சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றித் தொழுது விண்ணப்பம் செய்தார்
6.1.610
6.1.611
புகலி காவலர் தாம் கேட்டுப் பொருவிலா அருள் முன் கூர
அகம் மலர்ந்து அவர்கள் தம்மை அழையும் என்று அருளிச் செய்ய
நகை முகச் செவ்வி நோக்கி நல்தவ மாந்தர் கூவத்
தகவு உடை மாந்தர் புக்குத் தலையினால் வணங்கி நின்றார்
6.1.611
6.1.611
நின்றவர் தம்மை நோக்கி நிகரில் சீர்ச் சண்பை மன்னர்
மன்றல் அங்குழலியாராம் மானியார் தமக்கும் மானக்
குன்று என நின்ற மெய்ம்மை குலச் சிறையார் தமக்கும்
நன்று தான் வினவக் கூறி நல் பதம் போற்றுவார்கள்
6.1.611
6.1.613
கன்னி நாடு அமணர் தம்பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும்
கொன்னவில் அயில் வேல் வென்றிச் குலச் சிறையாரும் கூடி
இந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சி விட்டார்
6.1.613
6.1.614
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர்
ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர்எல்லாம்
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம்
நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை
வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி
வெண்ணீறு வேந்தனையும் இடுவித்து அங்கு
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக
நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற
6.1.614
6.1.615
மற்று அவர்கட்கு அருள் புரிந்து
பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து
பெரிய திருக் கோபுரத்துள் இருந்து தென் நாடு
உற்ற செயல் பாண்டிமா தேவியாரும் உரிமை
அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை
சொற்ற தனி மன்னவருக்குப் புகலி மன்னர்
சொல்லி எழுந்து அருளுதற்குத் துணிந்தபோது
6.1.615
6.1.616
அரசர் அருளிச் செய்கிறார் பிள்ளாய் அந்த
அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய
எழுந்து அருள உடன்படுவது ஒண்ணாது என்ன
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால்
பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய
விரை செய் மலர்த்தாள் போற்றி புகலி வேந்தர்
வேய் உறு தோளியை எடுத்து விளம்பினாரே
6.1.616
6.1.617
சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர்
முன்னே எழுந்து அருள அமைந்த போது
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்தப் புனல்
நாட்டில் எழுந்து அருளி இருப்பீர் என்று
கரகமலம் குவித்து இறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின்
காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார்
6.1.617
6.1.618
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும்
வேதவனத்து அருமணியை மீண்டும் புக்குப்
பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப்
பரசி அருள் பெற்று விடை கொண்டு போந்து
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி
அருள் செய்து விடை கொடுத்து மன்னும்
காதலினால் அருமை உறக் கலந்து நீங்கிக்
கதிர்ச் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர்
6.1.618
6.1.619
திருநாவுக் கரசரும் அங்கு இருந்தார்
இப்பால் திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்
பெருநாமச் சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர்
தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து
ஒரு நாமத்து அஞ்சு எழுத்தும் ஓதி வெண்ணீற்று
ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வருநாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மாதவர்
ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே
6.1.619
6.1.620
பொங்கி எழும் திருத்தொண்டர்
போற்று எடுப்பார் நால் திசையும்
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க
மழை முழங்கும்
சங்க படகம் பேரி தாரை
காளம் தாளம்
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு
விசும்பு கொடி தூர்ப்ப
6.1.620
6.1.621
மலர் மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப
அலர் வாசப் புனல் குடங்கள் அணி விளக்குத் தூபம் உடன்
நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர் கொள்ளக்
கலை மாலை மதிச் சடையார் இடம் பலவும் கை தொழுவார்
6.1.621
6.1.622
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி
அண்டர் பிரான் கழல் வணங்கி அருந்தமிழ் மா மறை பாடிக்
கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடிக் குழகர் தமைத்
தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுரத் தோன்றலார்
6.1.622
6.1.623
கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி
எண் ஆர்ந்த திரு இடும்பா வனம் ஏத்தி எழுந்து அருளி
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கிப்
பண் ஆர்ந்த தமிழ் பாடிப் பரவியே செல்கின்றார்
6.1.623
6.1.624
திரு உசாத் தானத்துத் தேவர் பிரான் கழல் பணிந்து
மருவிய செந்தமிழ்ப் பதிகமால் போற்றும் படி பாடி
இரு வினையும் பற்று அறுப்பார் எண் இறந்த தொண்டருடன்
பெருகு விருப்பினர் ஆகிப் பிற பதியும் பணிந்து அருள்வார்
6.1.624
6.1.625
கருங்கழி வேலைப் பாலைக் கழி நெய்தல் கடந்து அருளித்
திருந்திய சீர் புனல் நாட்டுத் தென் மேல் பால் திசை நோக்கி
மருங்கு மிடை தடஞ் சாலி மாடு செறி குலத்தெங்கு
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழிச் சென்றார்
6.1.625
6.1.626
சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழைக் கரும்பு எங்கும்
கொங்கு எங்கும் நிறை கமலக் குளிர் வாசத் தடம் எங்கும்
அங்கு அங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும்
எங்கும் எங்கும் மலர்ப் படுகர் இவை கழிய எழுந்து அருளி
6.1.626
6.1.627
தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம்
இடம் எங்கும் அந்தணர்கள் ஓதும் இடையாக நிலை
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனைவதுவை
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து
6.1.627
6.1.628
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும்புதல்கள்
கார் நாடு முகை முல்லைக் கடி நாறு நிலம் கடந்து
போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கிச்
சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார்
6.1.628
6.1.629
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல
சென்று அணைந்து கடந்து ஏறித் திரி மருப்பின் கலை புணர்மான்
கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார்
கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும் குன்றம்
6.1.629
6.1.630
கொடும் குன்றத்து இனிது அமர்ந்த கொழும்பவளச் செழுங் குன்றை
அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி
நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி
தொடும் குன்ற மதில் மதுரைத் தொன் நகர் வந்து அணைகின்றார்
6.1.630
6.1.631
இந்நிலை இவர் வந்து எய்த எண் பெரும் குன்றம் மேவும்
அந்நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்றுப்
பல்முறை வெருக் கொண்டு உள்ளம் பதைப்பத்தீக் கனாக்களோடும்
துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல் உற்றாம்
6.1.631
6.1.632
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும்
ஓள்ளிதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில்
கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய
புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும்
6.1.632
6.1.633
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக்
கால்களும் தடுமாறும் ஆடிக் கண்களும் இடமே ஆடி
மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார்
மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம்
6.1.633
6.1.634
கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள
வந்தவாறு அமணர் தம்மில் மாறு கொண்டு ஊறு செய்ய
முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டுச்
சிந்தையில் செற்றம் முன்னாத் தீக் குணம் தலை நின்றார்கள்
6.1.634
6.1.635
இப்படி அமணர் வைகும் எப் பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பில் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்கனாவும் வேறு வேறு ஆகக் கண்டு
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார்
6.1.635
6.1.636
அந்நகர் தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி
மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகித்
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி
இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார்
6.1.636
6.1.637
சீர் மலி அசோகு தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன் பின் ஆக
ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றிப் போக
ஊர் உளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று உரைப்பார்
6.1.637
6.1.638
குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி ஓடப்
பண்டிதர் பாழி நின்றும் கழுதை மேல் படர்வார் தம்பின்
ஒண்தொடி இயக்கி யாரும் உளை இட்டுப் புலம்பி ஓடக்
கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார்
6.1.638
6.1.639
கான் இடை நட்டம் ஆடும் கண் நுதல் தொண்டர் எல்லாம்
மீனவன் மதுரை தன்னில் விரவிடக் கண்டோம் என்பார்
கோன் அவன் தானும் வெய்ய கொடும் தழல் முழுகக் கண்டோம்
ஆனபின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார்
6.1.639
6.1.640
மழவிடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம் தன்னை
உழறிடச் சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி
விழ ஒரு புகலும் இன்றி மேதினி தன்னை விட்டு
நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிடக் கண்டோம் என்பர்
6.1.640
6.1.641
ஆவது என் பாவிகாள் இக் கனாத்திறம் அடிகள் மார்க்கு
மேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே என்று
நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார்
யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள்
6.1.641
6.1.642
அவ்வகை அவர்கள் எல்லாம் அந்நிலைமையர்கள் ஆகச்
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல்
பை வளர் அரவேர் அல்குல் பாண்டி மா தேவியார்க்கும்
மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேன் மேல்
6.1.642
6.1.643
அளவு இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த
உள மகிழ் உணரும் காலை உலகெலாம் உய்ய வந்த
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை
கிளர் உறும் ஓகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார்
6.1.643
6.1.644
அம்மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கி
தம்மையும் அறியா வண்ணம் கை மிக்குத் தழைத்துப் பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார்
6.1.644
6.1.645
மங்கையர்க் கரசியார் பால் வந்து அடி வணங்கி நின்ற
கொங்கு அலர் தெரியல் ஆராம் குலச்சிறை யாரை நோக்கி
நங்கள் தம்பிரானாராய ஞான போனகர் முன்பு எய்தி
இங்கு எழுந்து அருள உய்ந்தோம் என எர் கொள்ளும் என்றார்
6.1.645
6.1.646
மன்றலங் குழலினாரை வணங்கப் போந்த அமைச்சனாரும்
வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து
பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகி
இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும் காலை
6.1.646
6.1.647
அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி
தம் பரிசனங்கள் சூழத் தனித் தடையோடும் சென்று
நம்பரை வணங்கித் தாமும் நல் வரவேற்று நின்றார்
6.1.647
6.1.648
திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து
வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண் குடை நிழற்றப்
பெருகு ஒளிய திரு நீற்றுத் தொண்டர் குழாம் பெருகிவர
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார்
6.1.648
6.1.649
துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே
அந்தணராம் மாதவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்கச்
செந்தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப
6.1.649
6.1.650
பண்ணிய வஞ்சனைத் தவத்தால் பஞ்சவன் நாட்டு இடைப் பரந்த
எண்ணில் அமண் எனும் பாவ இருஞ்சேனை இரிந்து ஓட
மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும்
புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த
6.1.650
6.1.651
துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால்
அன்னெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு
மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர் தம்
கன்னி நாட்டு இடைக் கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட
6.1.651
6.1.62
பானல் வயல் தமிழ் நாடு பழி நாடும்படி பரந்த
மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டதொரு
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப
6.1.62
6.1.653
புரசை வயக் கட களிற்றுப் பூழியர் வண் தமிழ் நாட்டுத்
தரை செய் தவப் பயன் விளங்கச் சைவ நெறி தழைத்து ஓங்க
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணிச் சின்னம் எலாம்
பர சமயக் கோளரி வந்தான் என்று பணிமாற
6.1.653
6.1.654
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான்
எழுந்து அருளும் பொழுது இசைக்கும்
ஒப்பில் நித்திலப் பொன் தனிப் பெரும் கானம்
உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை
செப்பரும் பெருமைக் குலச் சிறையார் தம்
செவி நிறை அமுது எனத் தேக்க
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே
அளப்பு அரும் களிப்பினர் ஆனார்
6.1.654
6.1.655
அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல்
அணைந்திடக் கடிது சென்று அணைவார்
நஞ்சு அணி கண்டர் தம் திருமகனார் உடன்
வரும் நல்தவக் கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்லக்
கண்டு நீள் நிலத்து இடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்கு
உற அணைந்து முன் பணிந்தார்
6.1.655
6.1.656
நிலமிசை பணிந்த குலச் சிறையாரை
நீடிய பெரும் தவத் தொண்டர்
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்தாம்
படியின் நின்று எழாவகை கண்டு
மலர் மிசைப் புத்தேள் வழிபடும் புகலி
வைதிகச் சேகரர் பாதம்
குலவி அங்கு அணைந்தார் தென்னவன்
அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற
6.1.656
6.1.657
சிரபுரச் செல்வர் அவர் உரை கேட்டுத்
திருமுகத் தாமரை மலர்ந்து
விரவு ஒளி முத்தின் சிவிகை நின்று இழிந்து
விரைந்து சென்றவர் தமை அணைந்து
கரகமலங்கள் பற்றியே எடுப்பக் கை தொழுது
அவரும் முன் நிற்ப
வரமிகு தவத்தால் அவரையே நோக்கி
வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார்
6.1.657
6.1.658
செம்பியர் பெருமான் குல மகளார்க்கும்
திருந்திய சிந்தையீர் உமக்கும்
நம் பெருமான் தன் திரு அருள் பெருகும்
நன்மை தான் வாலிதே என்ன
வம்பு அலர் அலங்கல் மந்திரி யாரும் மண்
மிசைதாழ்ந்து அடி வணங்கித்
தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்குத்
தன்மை ஆம் நிலை உரைக்கின்றார்
6.1.658
6.1.659
சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும்
இனி எதிர் காலத்தின் சிறப்பும்
இன்று எழுந்து அருளப் பெற்ற பேறு இதனால்
எற்றைக்கும் திரு அருள் உடையோம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ்
வேந்தனும் உய்ந்து
வென்றி கொள் திரு நீற்று ஒளியினால் விளங்கும்
மேன்மையும் படைத்தனம் என்பார்
6.1.659
6.1.660
இங்கு எழுந்து அருளும் பெருமை கேட்டு
அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி
மங்கையர்க் கரசியாரும் நம்முடைய வாழ்வு
எழுந்து அருளியது என்றே
அங்கு நீர் சென்று அடிபணிவீர் என்று அருள்
செய்தார் எனத் தொழுதார்வம்
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து
போற்றினார் புரவலன் அமைச்சர்
6.1.660
6.1.661
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல்
அளவுஇலா அருள் புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை
அளித்து அருளும் அப்பொழுதில்
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரைத் தோன்றுதலும்
உயர் தவ தொண்டரை நோக்கி
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று
எம்மருங்கினது என வினவ
6.1.661
6.1.662
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார்
அண்ணலார் அடி இணை வணங்கி
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு
அலர் சோலைகள் சூழ்ந்து
மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி
வியன் நெடும் கோபுரம் தோன்றும்
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து
அருளும் திருவாலவாய் இது என்றார்
6.1.662
6.1.663
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு
துணைமலர்க் கரம் குவித்து அருளி
மண்டு பேரன்பால் மண்மிசைப் பணிந்து
மங்கையர்க்கரசி என்று எடுத்தே
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது
இதுவே என்று இருவர் தம் பணியும்
கொண்டமை சிறப்பித்து அருளி நல்
பதிகம் பாடினார் குவலயம் போற்ற
6.1.663
6.1.664
பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு
உடை அடியவரோடும்
தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த
¢ரு ஆலவாய் மருங்கு அணைந்து
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி
நிறை பெரு விருப்புடன் புக்கு
மாடு சூழ் வலம் கொண்டு உடையவர்
கோயில் மந்திரியாருடன் புகுந்தார்
6.1.664
6.1.665
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த
கான கண்டரைக் கண்களின் பயன் பெறக் கண்டு
நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார்
மீளவும் பல முறை நிலம் உற விழுந்து எழுவார்
6.1.665
6.1.666
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு இன்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம் மயிர் புளகமும் பொழியும்
செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி
எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர்
6.1.666
6.1.667
நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும்
மூலம் ஆகிய திரு இருக்குக் குறள் மொழிந்து
சீல மாதவத் திருத் தொண்டர் தம் ஒடும் திளைத்தார்
சாலும் மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன்
6.1.667
6.1.668
சேர்த்தும் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்புச்
சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை
பேர்த்தும் இன்புறப் பாடி வெண் பிறை அணி சென்னி
மூர்த்தியார் கழல் பரவியே திருமுன்றில் அணைய
6.1.668
6.1.669
பிள்ளையார் எழுந்து அருளி முன் புகுதும் அப் பொழுது
வெள்ள நீர் பொதி வேணியார் தம்மைத் தொழும் விருப்பால்
உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும்
தெள்ளு நீர் விழித் தெரிவையார் சென்று முன்பு எய்த
6.1.669
6.1.670
மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக்
கரும் குழல் கற்றை மேல் குவிகைத்து அருளி உடையார்
பருங்கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்னப்
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார்
6.1.670
6.1.671
தென்னவன் பெருந் தேவியார் சிவக் கன்றின் செய்ய
பொன்னடிக் கமலங்களில் பொருந்த முன் விழுந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும்
இன்னருட் பெரும் சிறப் பொடும் திருக்கையால் எடுத்தார்
6.1.671
6.1.672
ஞான போனகர் எதிர் தொழுது எழுந்த நல்தவத்து
மானியார் மனக் கருத்து முற்றியது என மதித்தே
பானலங் கண்கள் நீர் மல்கப் பவளவாய் குழறி
யானும் என் பதியும் செய்த தவம் என் கொல் என்றார்
6.1.672
6.1.673
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்கக்
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும்
சூழும் ஆகிய பர சமயத்து இடைத் தொண்டு
வாழும் நீர் மையீர் உமைக் காண வந்தனம் என்றார்
6.1.673
6.1.674
இன்னவாறு அருள் செய்திடத் தொழுது அடி வீழ்ந்தார்
மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய
அன்ன மென் நடையார் தமக்கு அருள் செய்து போக்கித்
துன்னு மெய்த் தொண்டர் சூழ வந்து அருளும் அப் பொழுது
6.1.674
6.1.675
செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் பணி செய்து
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி
மல்குகார்அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள
எல்லையில் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார்
6.1.675
6.1.676
அத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார்
6.1.676
6.1.677
பரவு காதலில் பாண்டிமா தேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச் சிறையார் விருந்து அளிப்பக்
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார்
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய
6.1.677
6.1.678
வழுதி மாநகர் அதன் இடை மாமறைத் தலைவர்
பழுதில் சீர் அடியாருடன் பகல் வரக் கண்ட
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி
இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு பால்
6.1.678
6.1.679
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த
துங்க மா மடம் தன்னிடைத் தொண்டர் தம் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த
பொங்கு பேர் ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய்
6.1.679
6.1.680
மற்றிவ் வான் பழி மன்னவன் மாறனை எய்திச்
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார்
கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகி
வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார்
6.1.680
6.1.681
வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கி
ஆய மாகி வந்து அடிகள் மார் அணைந்தனர் என்ன
ஏயினான் அணைவா ரென அவரும் சென்று இசைத்தார்
பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார்
6.1.681
6.1.682
புக்க போது அவர் அழிவுறு மனத்து இடைப் புலர்ச்சி
மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்னத்
தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார்
6.1.682
6.1.683
ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று
காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர்
மாவலாய் உன் தன் மதுரையில் சைவ வேதியர் தாம்
மேவலால் இன்று கண்டுமுட்டியாம் என்று விளம்ப
6.1.683
6.1.684
என்று கூறலும் கேட்டு முட்டி யானும் என்று இயம்பி
நன்று நல் அறம் புரிந்தவா நான் என்று நகுவான்
கன்றும் உள்ளத்தன் ஆகி அக் கண் நுதல் அடியார்
இன்று இம் மாநகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான்
6.1.684
6.1.685
மாலை வெண் குடை வளவர் சோணாட்டு வண்புகலிச்
சூல பாணிபால் ஞானம் பெற்றான் என்று சுருதிப்
பாலன் அன்பர் தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை
மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல
6.1.685
6.1.686
என்று கூறுவார் இத்திறம் முன்பு தாம் அறிந்தது
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன்
மன்றலம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம்
சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் கொல்வான்
6.1.686
6.1.687
மற்ற மா மறை மைந்தன் இம் மருங்கு அணைந்தானேல்
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப
செற்றம் மீக் கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார்
6.1.687
6.1.688
வந்த அந்தணன் தன்னை நாம் வலிது செய்து போக்கும்
சிந்தை அன்றி அச் சிறு மறையோன் உறை மடத்தில்
வெம் தழல் பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால்
இந்த நன்னகர் இடத்திரான் ஏகும் என்று இசைத்தார்
6.1.688
6.1.689
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்யப்
போவது என்று அவரைப் போக்கிப் பொய் பொருளாகக் கொண்டான்
யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும்
பூவணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள்
6.1.689
6.1.690
மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்தாம்
என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள் செய் என்றார்
6.1.690
6.1.691
தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான்
காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும்
தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு
மேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்றான்
6.1.691
6.1.692
வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம்
கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டியானும் காதல்
வண்டுணத் துதைந்த கோதை மானியே இங்கு வந்த
பண்பு மற்று இதுவேயாகும் பரிசு வேறு இல்லை என்றான்
6.1.692
6.1.693
மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கு அரசியார் தாம்
நின்னிலை இதுவே யாகில் நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து
துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார்
6.1.693
6.1.694
சிந்தையில் களிப்பு மிக்குத் திருக் கழு மலத்தார் வேந்தன்
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சி யோடும்
கொந்தலர் குழலார் போதக் குலச் சிறையார் அங்கு எய்த
இந்த நன் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர்
6.1.694
6.1.695
கொற்றவன் அமைச்சனாரும் கைதலை குவித்து நின்று
பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு என்பார்
இற்றை நாள் ஈசன் அன்பர் தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம்
மற்று இனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார்
6.1.695
6.1.696
மானியார் தாமும் அஞ்சி வஞ்சகப் புலையர் தாங்கள்
ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி
ஞான சம்பந்தர் தம்பால் நன்மை அல்லாது செய்யும்
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார்
6.1.696
6.1.697
இவர் நிலை இதுவே ஆக இலங்குவேல் தென்னவன் ஆன
அவன் நிலை அதுவாம் அந்நாள் அருகர் தம் நிலை யாது என்னில்
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செந்தீ
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேரச் செய்தார்
6.1.697
6.1.698
ஆதி மந்திரம் அஞ்சு எழுத்து ஓதுவார் நோக்கும்
மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே
பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள்
சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார்
6.1.698
6.1.699
தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீத்தொழில் சரியக்
கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி
விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார்
6.1.699
6.1.700
மந்திரச் செயல் வாய்த்து இல மற்று இனிச் செய்யும்
புந்தியாவது இங்கு இது எனப் பொதி தழல் கொடு புக்கு
அந்தண் மாதவர் திரு மடப் புறத்து அயல் இருள் போல்
வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர்
6.1.700