Books / Thirumurai 2

88. 2.87 திருநறையூர்

2.87.1

நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
யரியான்மு னாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
யுறுதீயு மாய நிமலன்
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த
நலகண்டு பண்டு சுடலை
நாரியோர் பாகமாக நடமாட வல்ல
நறையூரின் நம்ப னவனே.

2.87.1

2.87.2

இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை
யெதிர்நாணி பூண வரையிற்
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து
அமரர்க் களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்
மனம்நின்ற மைந்தன் மருவும்
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை
நறையூரின் நம்ப னவனே.

2.87.2

2.87.3

சூடக முன்கைமங்கை யொருபாக மாக
அருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
படுபிச்ச னென்று பரவத்
தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு
குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
நறையூரின் நம்ப னவனே.

2.87.3

2.87.4

சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி
கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்
இருளாய கண்டன் அவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
நறையூரின் நம்ப னவனே.

2.87.4

2.87.5

நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி
நிகழம் பலத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன்
எமர்சுற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
நறையூரின் நம்ப னவனே.

2.87.5

2.87.6

கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
மலர்துன்று செஞ்சடை யினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதவோசை யகலங்க மாறின்
பொருளான ஆதி யருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து
நறையூரின் நம்ப னவனே.

2.87.6

2.87.7

ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க
மவையார ஆட லரவம்
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்
விகிர்தன் விடங்கொள் மிடறன்
துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம்
எழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும்
நறையூரின் நம்ப னவனே.

2.87.7

2.87.8

அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்
எதிருஞ் சிலம்பொ டிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
முனிவுற் றிலங்கை யரையன்
உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும்
இசைகேட் டிரங்கி யொருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல
நறையூரின் நம்ப னவனே.

2.87.8

2.87.9

குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த
பெரியா னிலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
நறையூரின் நம்ப னவனே.

2.87.9

2.87.10

துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற
வவர்தாமு மல்ல சமணுங்
கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த
பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட
நறையூரின் நம்ப னவனே.

2.87.10

2.87.11

கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி
மிகுபந்தன் முந்தி யுணர
ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த
நறையூரின் நம்ப னவனை
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
தமிழ்மாலை பத்தும் நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
வழிபாடு செய்யும் மிகவே.

2.87.11