Books / Thirumurai 3

125. 3.125 திருநல்லூர்ப்பெருமணம்

3.125.1

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.

3.125.1

3.125.2

தருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்
வருமணங் கூட்டி மணஞ்செயும் நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ணோர் பாகங்கொண் டானே.

3.125.2

3.125.3

அன்புறு சிந்தைய ராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்
றின்புறும் எந்தை இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.

3.125.3

3.125.4

வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே.

3.125.4

3.125.5

ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை கூறுகந் தீரே.

3.125.5

3.125.6

சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது
நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்
திட்டப்பட் டாலொத்தீ ராலெம்பி ரானீரே.

3.125.6

3.125.7

மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.

3.125.7

3.125.8

தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை
உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே.

3.125.8

3.125.9

ஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை
மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே.

3.125.9

3.125.10

ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ வீடெளி தாமே.

3.125.10

3.125.11

நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவம் அவலம் இலரே.

3.125.11

3.125.12

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகத்தியாகேசர்,
தேவியார் - நங்கையுமைநாயகியம்மை.
பிற்சேர்க்கை

  1. திருவிடைவாய்
    (இப்பதிகம் 1917 இல் திருவிடைவாய்க் கல்வெட்டினின்று எடுக்கப்பட்டது.)

3.125.12

3.125.13

மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.

3.125.13

3.125.14

ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர்
எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது
வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.

3.125.14

3.125.15

கரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கைத்
திரையார்சடைத் தீவண்ணர் சேர்விட மென்பர்
குரையார்மணி யுங்குளிர் சந்தமுங் கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே.

3.125.15

3.125.16

கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்
பாசத் தொடும்வீழ உதைத்தவர் பற்றாம்
வாசக் கதிர்ச்சாலி வெண்சா மரையேபோல்
வீசக் களியன்னம் மல்கும் விடைவாயே.

3.125.16

3.125.17

திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண
எரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர்
கிரியுந் தருமாளிகைச் சூளிகை தன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே.

3.125.17

3.125.18

கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்
தள்ளித் தலைதக்கனைக் கொண்டவர் சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே.

3.125.18

3.125.19

பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய்
நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே.

3.125.19

3.125.20

எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம்
கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே.

3.125.20

3.125.21

புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்
ஒள்வான் நிலந்தேடும் ஒருவர்க் கிடமாந்
தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே.

3.125.21

3.125.22

உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வேவ மூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே.

3.125.22

3.125.23

ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம்
மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை
நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன்
கூறுந் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே.
2. திருக்கிளியன்னவூர்
[சித்தாந்தம்-மலர் 5 இதழ் 11 (1932) தலைப்பு ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டது.]

3.125.23

3.125.24

தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்
சீர்சி றக்கும் துணைப்பதம் உன்னுவோர்
பேர்சி றக்கும் பெருமொழி உய்வகை
ஏர்சி றக்கும் கிளியன்ன வூரனே.

3.125.24

3.125.25

வன்மை செய்யும் வறுமைவந் தாலுமே
தன்மை யில்லவர் சார்பிருந் தாலுமே
புன்மைக் கன்னியர் பூசலுற் றாலுமே
நன்மை யுற்ற கிளியன்ன வூரனே.

3.125.25

3.125.26

பன்னி நின்ற பனுவல் அகத்தியன்
உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்
மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்
முன்னில் நின்ற கிளியன்ன வூரனே.

3.125.26

3.125.27

அன்பர் வேண்டும் அவையளி சோதியான்
வன்பர் நெஞ்சில் மருவல்இல் லாமுதற்
துன்பந் தீர்த்துச் சுகங்கொடு கண்ணுதல்
இன்பந் தேக்குங் கிளியன்ன வூரனே.

3.125.27

3.125.28

செய்யும் வண்ணஞ் சிரித்துப் புரம்மிசை
பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்
உய்யும் வண்ணமிங் குன்னருள் நோக்கிட
மெய்யும் வண்ணக் கிளியன்ன வூரனே.

3.125.28

3.125.29

எண்பெ றாவினைக் கேதுசெய் நின்னருள்
நண்பு றாப்பவம் இயற்றிடில் அந்நெறி
மண்பொ றாமுழுச் செல்வமும் மல்குமால்
புண்பொ றாதகி ளியன்ன வூரனே.

3.125.29

3.125.30

மூவ ராயினும் முக்கண்ண நின்னருள்
மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
தாவு றாதுன தைந்தெழுத் துன்னிட
தேவ ராக்குங் கிளியன்ன வூரனே.

3.125.30

3.125.31

திரம் மிகுத்த சடைமுடி யான்வரை
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
நிரம் மிகுத்து நெரித்தவன் ஓதலால்
வரம் மிகுத்த கிளியன்ன வூரனே.

3.125.31

3.125.32

நீதி யுற்றிடும் நான்முகன் நாரணன்
பேத முற்றுப் பிரிந்தழ லாய்நிமிர்
நாதன் உற்றன நன்மலர் பாய்இருக்
கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே.

3.125.32

3.125.33

மங்கை யர்க்கர சோடுகு லச்சிறை
பொங்க ழற்சுரம் போக்கெனப் பூழியன்
சங்கை மாற்றிச் சமணரைத் தாழ்த்தவும்
இங்கு ரைத்த கிளியன்ன வூரனே.

3.125.33

3.125.34

நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனை
உறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினை
அறைய நின்றன பத்தும்வல் லார்க்குமே
குறையி லாது கொடுமை தவிர்வரே.
3. திருமறைக்காடு
(பின்னர் கிடைக்கப் பெற்ற திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்.)

3.125.34

3.125.35

விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனிய வாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரம யோகீ
கடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறைக் காட மர்ந்தீர்
அடைத்திடுங் கதவு தன்னை யப்படித் தாளி னாலே.

3.125.35

3.125.36

முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்க மூர்த்தி
மடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல்மறைக் காட மர்ந்தாய்
அடைத்திடுங் கதவை என்றிங் கடியனேன் சொல்ல வல்லே
அடைத்தனை தேவி தன்னோ டெம்மையாள் உகக்கு மாறே.

3.125.36

3.125.37

கொங்கண மலர்கள் மேவுங் குளிர்பொழில் இமயப் பாவை
பங்கணா வுருவி னாலே பருமணி யுமிழும் வெம்மைச்
செங்கணார் அரவம் பூண்ட திகழ்மறைக் காட மர்ந்தாய்
அங்கணா இதுவன் றோதான் எம்மையாள் உகக்கு மாறே.

3.125.37

3.125.38

இருளிடை மிடற்றி னானே எழில்மறைப் பொருட்கள் எல்லாந்
தெருள்பட முனிவர்க் கீந்த திகழ்மறைக் காட மர்ந்தாய்
மருளுடை மனத்த னேனும் வந்தடி பணிந்து நின்றேர்க்
கருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.

3.125.38

3.125.39

பெருத்தகை வேழந் தன்னைப் பிளிறிட உரிசெய் தானே
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காட மர்ந்தாய்
கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்
அருத்தியை அறிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.

3.125.39

3.125.40

செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளுந் தேசோ
டொப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக் காட மர்ந்தாய்
அப்பமர் சடையி னானே அடியனேன் பணியு கந்த
அப்பனே அளவிற் சோதீ அடிமையை உகக்கு மாறே.

3.125.40

3.125.41

மதிதுன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னி யானே
கதியொன்றும் ஏற்றி னானே கலிமறைக் காட மர்ந்தாய்
விதியொன்று பாவின் மாலை கேட்டருள் வியக்குந் தன்மை
இதுவன்றோ உலகின் நம்பி எம்மையாள் உகக்கு மாறே.

3.125.41

3.125.42

நீசனாம் அரக்கன் றிண்டோ ள் நெரிதர விரலால் ஊன்றுந்
தேசனே ஞான மூர்த்தீ திருமறைக் காட மர்ந்தாய்
ஆசையை யறுக்க உய்ந்திட் டவனடி பரவ மெய்யே
ஈசனார்க் காள தானான் என்பதை அறிவித் தாயே.

3.125.42

3.125.43

மைதிகழ் உருவி னானும் மலரவன் றானும் மெய்ம்மை
எய்துமா றறிய மாட்டார் எழில்மறைக் காட மர்ந்தாய்
பொய்தனை யின்றி நின்னைப் போற்றினார்க் கருளைச் சேரச்
செய்தனை யெனக்கு நீயின் றருளிய திறத்தி னாலே.

3.125.43

3.125.44

மண்டலத் தமணர் பொய்யுந் தேரர்கள் மொழியும் மாறக்
கண்டனை யகள என்றும் கலிமறைக் காட மர்ந்தாய்
தண்டியைத் தானா வைத்தான், என்னுமத் தன்மை யாலே
எண்டிசைக் கறிய வைத்தாய் இக்கத வடைப்பித் தன்றே.

3.125.44

3.125 — note

மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டு ளானைக் கதவடைத் திறமுஞ் செப்பிக் கடிபொழிற் காழி வேந்தன் தகவுடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்ன பதமுடைப் பத்தும் வல்லார் பரமனுக் கடியர் தாமே. மூன்றாம் திருமுறை முற்றும். திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்று திருமுறையும் முற்றுப்பெற்றது.