Books / Thirumurai 4

60. 4.60 திருப்பெருவேளூர் - திருநேரிசை

4.60.1

மறையணி நாவி னானை
மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக்
கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப்
பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி
நாடொறும் வணங்கு வேனே.

4.60.1

4.60.2

நாதனாய் உலக மெல்லாம்
நம்பிரான் எனவும் நின்ற
பாதனாம் பரம யோகி
பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப்
பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி
உரைக்குமா றுரைக்கின் றேனே.

4.60.2

4.60.3

குறவிதோள் மணந்த செல்வக்
குமரவேள் தாதை யென்று
நறவிள நறுமென் கூந்தல்
நங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப்
பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி
உணருமா றுணர்த்து வேனே.

4.60.3

4.60.4

மைஞ்ஞவில் கண்டன் றன்னை
வலங்கையின் மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவில் மானி னோடுங்
கனலெரி யாடி னானைப்
பிஞ்ஞகன் றன்னை அந்தண்
பெருவேளூர் பேணி னானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப்
பொறியிலா அறிவி லேனே.

4.60.4

4.60.5

ஓடைசேர் நெற்றி யானை
உரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை
வேதநான் காயி னானைப்
பேடைசேர் புறவ நீங்காப்
பெருவேளூர் பேணி னானைக்
கூடநான் வல்ல மாற்றங்
குறுகுமா றறிகி லேனே.

4.60.5

4.60.6

கச்சைசேர் நாகத் தானைக்
கடல்விடங் கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக்
கனலெரி யாடு வானைப்
பிச்சைசேர்ந் துழல்வி னானைப்
பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர்ந் தமர நானும்
இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.

4.60.6

4.60.7

சித்தராய் வந்து தன்னைத்
திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய
முதல்வனை முழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப்
பெருவேளூர் பேணி னானை
மெத்தனே யவனை நாளும்
விரும்புமா றறிகி லேனே.

4.60.7

4.60.8

முண்டமே தாங்கி னானை
முற்றிய ஞானத் தானை
வண்டுலாங் கொன்றை மாலை
வளர்மதிக் கண்ணி யானைப்
பிண்டமே ஆயி னானைப்
பெருவேளூர் பேணி னானை
அண்டமாம் ஆதி யானை
அறியுமா றறிகி லேனே.

4.60.8

4.60.9

விரிவிலா அறிவி னார்கள்
வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும்
எம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும்
பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்
வகையது நினைக்கின் றேனே.

4.60.9

4.60.10

பொருகடல் இலங்கை மன்னன்
உடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக்
கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப்
பெருவேளூர் பேணி னானை
உருகிய அடிய ரேத்தும்
உள்ளத்தால் உள்கு வேனே.

4.60.10

4.60 — note

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பிரியாதநாதர், தேவியார் - மின்னனையாளம்மை.