Books / Thirumurai 4

97. 4.97 திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்

4.97.1

கோவாய் முடுகி யடுதிறற்
கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற்
பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண்
டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.1

4.97.2

காய்ந்தாய் அனங்கன் உடலம்
பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செகப் பாதம்
பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற்
கருளாயுன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.2

4.97.3

பொத்தார் குரம்பை புகுந்தைவர்
நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போல் மறுகுமென்
சிந்தை மறுக்கொழிவி
அத்தா அடியேன் அடைக்கலங்
கண்டாய் அமரர்கள்தஞ்
சித்தா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.3

4.97.4

நில்லாக் குரம்பை நிலையாக்
கருதியிந் நீணிலத்தொன்
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு
வேனைவந் தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள்
கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.4

4.97.5

கருவுற் றிருந்துன் கழலே
நினைந்தேன் கருப்புவியிற்
தெருவிற் புகுந்தேன் திகைத்தடி
யேனைத் திகைப்பொழிவி
உருவிற் றிகழும் உமையாள்
கணவா விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.5

4.97.6

வெம்மை நமன்தமர் மிக்கு
விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் தாளென்றன் நெஞ்சத்
தெழுதிவை ஈங்கிகழில்
அம்மை அடியேற் கருளுதி
யென்பதிங் காரறிவார்
செம்மை தருசத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.6

4.97.7

விட்டார் புரங்கள் ஒருநொடி
வேவவோர் வெங்கணையாற்
சுட்டாயென் பாசத் தொடர்பறுத்
தாண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள்
பூசை மகிழ்ந்தருளுஞ்
சிட்டா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.7

4.97.8

இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்
டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமுங்
கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள்
தீரப் புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.8

4.97.9

தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந்
துன்றன் சரண்புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன்றிற
மல்லால் எனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா
மிகவட மேருவென்னுந்
திக்கா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.9

4.97.10

பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப்
புற்றவன் பொன்முடிதோள்
இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட்
டலற இரங்கிஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய்
குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.10

4.97 — note

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சிவக்கொழுந்தீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.