36. 5.36 திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை
5.36.1
கான றாத கடிபொழில் வண்டினந்
தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊன றாததோர் வெண்டலை யிற்பலி
தான றாததோர் கொள்கையன் காண்மினே.
5.36.1
5.36.2
- என்பும் ஆமையும் பூண்டங் குழிதர்வர்க்
கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச்
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே.
5.36.2
5.36.3
- வேறு கோலத்தர் ஆணலர் பெண்ணலர்
கீறு கோவண வைதுகி லாடையர்
தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே.
5.36.3
5.36.4
- அருவ ராததோர் வெண்டலை யேந்திவந்
திருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே.
5.36.4
5.36.5
- பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான்
ஏவ லாலெயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான்
மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே.
5.36.5
5.36.6
- சலவ ராயொரு பாம்பொடு தண்மதி
கலவ ராவதன் காரண மென்கொலோ
திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவி லாலெயில் மூன்றெய்த கூத்தரே.
5.36.6
5.36.7
- கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த ராகி இருசுடர்
செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோர் ஐந்தலை நாகமே.
5.36.7
5.36.8
- வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே.
5.36.8
5.36.9
- நன்றி நாரணன் நான்முக னென்றிவர்
நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச்
சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி யாகியே.
5.36.9
5.36.10
- திரியு மும்மதில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன லோட்டி இலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார்
அரிய வானம் அவரருள் செய்வரே.
5.36.10
5.36 — note
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.