Books / Thirumurai 5

8. 5.8 திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை

5.8.1

  1. பாற லைத்த படுவெண் டலையினன்
    நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
    கூற லைத்தமெய் கோளர வாட்டிய
    ஆற லைத்த சடைஅன்னி யூரரே.

5.8.1

5.8.2

பண்டொத் தமொழி யாளையோர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத் தான்அன்னி யூரரே.

5.8.2

5.8.3

  1. பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
    துரவை யாகத் துடைப்பவர் தம்மிடங்
    குரவம் நாறுங் குழலுமை கூறராய்
    அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே.

5.8.3

5.8.4

  1. வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்
    சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
    நாதர் நீதியி னாலடி யார்தமக்
    காதி யாகிநின் றார்அன்னி யூரரே.

5.8.4

5.8.5

  1. எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்
    இன்ப ராகி இருந்தவெம் மீசனார்
    துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
    கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே.

5.8.5

5.8.6

  1. வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
    கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
    சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
    அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே.

5.8.6

5.8.7

  1. ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
    வானை வானவர் தாங்கள் வணங்கவே
    தேனை யார்குழ லாளையோர் பாகமா
    ஆனை யீருரி யார்அன்னி யூரரே.

5.8.7

5.8.8

  1. காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி
    மேலை வானவர் வந்து விரும்பிய
    சோலை சூழ்புறங் காடரங் காகவே
    ஆலின் கீழறத் தார்அன்னி யூரரே.

5.8.8

5.8.9

  1. எரிகொள் மேனியர் என்பணிந் தின்பராய்த்
    திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
    கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
    கரிய ராகிநின் றார்அன்னி யூரரே.

5.8.9

5.8.10

  1. வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
    அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப்
    பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை
    அஞ்ச லஞ்சலென் றார்அன்னி யூரரே.

5.8.10