Books / Sivagnana Siddhiyar

4. பரபக்கம் — 2. சௌத்திராந்திகன் மதம்

4.1

நீதியார் வேத நூலின் நெறியலா அறங்கள் நாளும் ஓதியோர் ஐந்து சீலம் உடையராய் உடல மூடிப் போதிநீள் மரத்தின் மேவும் புத்தர்நால் வரினும் வைத்துச் சாதிதான் இலாத கொள்கைச் சௌத்திராந் திகன்முன் சாற்றும்.

4.2

முழுதுணர்ந் துலகிற் கோறல் முதற்செயல் முணிந்து மற்றும் பழுதிலா அருளி னாலே பரதுக்க துக்க னாதித் தொழுதுவா னவரும் போற்றத் தொல்பிட கங்க ளான வழுவிலா கமங்கள் சொன்ன மாதவன் நநத னாவான்.

4.3

மருவிய அளவை காட்சி மானமென் றிரண்டி வற்றறல் கருதிய பொருள்கள் ஞான ஞேயமாய்க் கணத்திற் பங்கம் வருமுரு அருவம் வீடு வழக்கென நான்க தாதித் தருமவை ஒறி ரண்டாய்த் தான்விரிந் தெட்டி னாமே.

4.4

உருஇயல் பூத மோடங் குபாதாய ரூப மாகும் அருஇயல் சித்தம் கன்மம் என்றிரண் டாகும் வீட்டின் மருவியல் குற்றம் கந்த மெனவழங் கிடும்வ ழக்கின் இருஇயல் உள்ள தோடங் கில்லதாம் இயம்புங் காலே.

4.5

மண்புனல் அனல்கால் பூதம் வலிகந்தம் இரதம் வன்னம் எண்டரும் உபாதா யம்தா னிவைஇரு நான்குங் கூடி உண்டொரு பொருளு ரூபம் உறுபுலன் உபாங்க மோடக் கண்டது சித்தம் கன்மம் நன்றுதீ தென்றட காணே.

4.6

குற்றவீ டராக மாதி குணங்களைக் குறைதத லாகும் மற்றவீ டுருவ மாதி ஐந்தையு மாய்த் லாகும் சொற்றருந் தொகைதொ டர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய் உற்றிடும் வழக்கி ரண்டும் ஒன்றுமூன் றாகி ஆறாம்.

4.7

ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி ஐந்தும் கூடி வருபவ னென்று ரைத்தல் தொகையுண்மை வழக்க தாகும் உருவமங் காதி யாய ஐந்தையும் ஒருவன் இன்று தருவது தொகையினின்மை வழக்க தாஞ்சாற் றுங்காலே.

4.8

காரண காரி யத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின் சோர்வறத் தோன்றும் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை ஓர்தரின் ஒருவ னேஎக் காலத்தம் உள்ளா னென்று தேர்வது தொடர்ச்சியின்மை வழக்கதாம் செப்புங்காலே.

4.9

தோன்றிய பொருள்க ளெல்லாம் நாசமாம் என்று சொல்லும் மாற்றமுன் னுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை போற்றிய பொருள்கண் கட்குப் போனது அஅ£ல்மு திர்ந்து வேற்றுமைப் பட்ட தென்கை மிகுத்துரை இல்வழக்கே.

4.10

உள்வழக் கில்வ ழக்குள் ளதுசார்ந்த உள்வ ழக்கோ(டு) உள்ளது சார்ந்த இன்மை வழக்குடன் இன்மை சார்ந்த உள்வாக் கின்மை சார்ந்த இல்வழக் கென்றோ ராறாம் உள்வழக்குள துண்டென்கை முயற்கோடின் றில்வழக்கே.

4.11

உணர்வுசார்ந் துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த இன்மை உணர்வுமுன் பின்றித் தோன்றல் இல்லது சார்ந்த வுண்மை உணரினில் லதுசா ரின்மை உள்ளங்கை உரோம நாணே.

4.12

சொன்னநால் வகையு மின்றிச் சொல்லிடும் பொருள்க ளெல்லாம் என்னையோ அறிகி லோம்பித் தேறியோ வானம் ஆன்மா மன்னுகா லங்கடிக்கு மனமுடன் வாக்கி றந்திட்(டு) உன்னுமோர் இறையும் உண்டென் றுரைப்பது நித்த மன்றே.

4.13

ஈங்குவவன் செயற்கு வாரா இயம்பிய பொருள்க ளெல்லாம் தாங்குவான் உளதே யென்னில் தரித்திடா தருவ மாதல் ஓங்குவான் ஓசைக் ககதி யெனிலதங் குருவின் கூட்டம் நீங்குவா னின்றி எங்கும் நின்றதேல் எங்கு மின்றே.

4.14

போதமுண் டுயிர்கட் கென்னில் வாயிலைம் புலனும் நூலும் ஆய்தலின் றொட்டுத் தீட்டுக் கலப்பினில் அறியு மென்னில் ஏதமுண் டிரவிற் பச்சை சிவப்புடன் ஏய்ந்த போது கேதநின் றென்னோ என்னும் ஐயமுன் கிடத்த லாலே.

4.15

அறிந்திடா வாயி லின்றேல் அறிவின்றாம் ஐந்தும் பற்றி அறிந்திடும் அறிவுண் டென்னில் ஐந்தினும் அறிவொன் றாக அறிந்திட வேண்டும் சார்பின் அறிந்திடு மென்னில் உன்னை அறிந்திலோம் புத்த னென்றிங் கழகிது சொன்ன வாறே.

4.16

ஞானஞே யங்க ளன்றி ஞாதிரு என்று சொல்ல ஆனதிங் கறிவேவ அன்றோ அன்றெனில் அவனி போலும் தாதிங் கறிவே என்னில் சமைந்திடு நன்ப ருப்புப் போனக மதற்குத் தானே கறியெனப் புகன்ற தாமே.

4.17

உயிரினை அருவ தென்னில் உருவுடன் உற்று நில்லா(து) உயிரினை உருவ தென்னில் உடலினில் உடல டங்கா(து) உயிரினை அணுவ தென்னில் உடல்பல துவார மோடும் உயிரினை நித்த மென்னில் உணர்வுத யாந்த மின்றே.

4.18

எங்குமாய் நின்ற தான்மா என்றிடின் எங்கும் இன்றாம் தங்கிடு நிறைவு தத்தம் சரீரங்கள் தோறு மென்னின் மங்கிடும் உடலத் தோடே வடிவினில் ஓரிடத்தே அங்கது நின்ற தென்னில் அடிமுடி அறிவின் றாமே.

4.19

சாற்றிய காலம் இங்குத் தங்கிய வாறி தென்னை(னில்) தோற்றுவித் தளித்துப் போக்கும் தொழிலவை கால மென் போற்றிய பொருளில் புக்குப் பிணங்கிடும் பொருட்பின் இன்றாம் தேற்றிய இல்வ ழக்குத் திரவியத் தியல்பி னாமே.

4.20

எனக்குநீ கிழக்கி ருந்தா யாகின்மேற் கென்றா யென்பால் எனக்குமேற் கிருந்தான் என்பாற் கிழக்கென இயம்புந் திக்குத் தனக்குநாம் கொள்வ தெப்பால் சாற்றிடாய் இல்ல ழக்குத் தனக்குள தாகும் உண்மை தானில தாகு மன்றே.

4.21

உலகினைப் படைத்தான் என்றாய் ஒருவனிங் குள்ள தாயின் உலகினைப் படைக்க வேண்டா இல்லையேல் படைக்க வொண்ணா(து) உலகினுக் குபாதா நந்தான் உள்ளதாய்க் காரி யத்தாம் உலகினைப் படைக்கில் அங்கும் உளதில தாவ துண்டே.

4.22

உள்ளது கடாதி போல உதிப்பித்தான் என்று ரைக்கின் மௌ¢ளவே யெங்கு நின்று விதித்தனன் உலகின் மீது வள்ளல் தான்நின்றா னென்னில் வந்ததாம் உலக முன்னே தள்ளிடா தெங்கு நிற்கின் எங்குமுன் தந்த தாமே.

4.23

இல்லது கருணை யாலே இயற்றினன் இறைவன் என்னில் கொல்லரி உழுவை நாகங் கூற்றமுங் கொண்டு தோற்ற வல்லவன் கருணை யென்னோ வலியினால் வேண்டிற் றெல்லாம் பல்கவே படைத்தா னாயிற் பித்தரைப் பணிந்தி டாயே.

4.24

பெறுவதிங் கென்பபடத்துப் பெற்றது விளையாட் டென்னில் சிறுமழ விறைய தாகும் செய்திடும் கன்மத் தென்னின் உறுபெருங் கன்மஞ் செய்வோர் முன்புள ராவ ருண்மை அறிவுறின் ஞால மெல்லாம் அநாதியென் றறிந்தி டாயே.

4.25

உருவொடு நின்றா னென்னின் உருவமுன் படைத்தார் வேண்டும் உருவவன் இச்சை யென்னில் உலகெலாம் இச்சை யாகும் உருவுல கத்து ளோர்கட் குறுவது கன்மா லென்னின் உருவுடை யோர்கட் கெல்லாம் உற்றது கன்மத் தாமே.

4.26

அருவெனில் பவத்தி னின்றும் எடுத்திடான் ஆகா சம்போல் மருவினன் நிழல்போ லென்னின் மருவினோர்க் காகும்மாட்சி பெருகிய அறிவுண் டென்று பேசிடின் நேசத் தோடும் கருதிட உருவம் வேண்டும் இல்லையேற் கருத லின்றே.

4.27

எங்கள்நூல் அநாதி யயக இறைவனுண் டென்னு மென்னின் உங்கள்நூல் உரைப்பா ரின்றி ஓதுவ தழகி தாகும் அங்கவன் தன்ஆஆ நூல்கொண் டறிந்தனம் அவனைக் கொண்டே இங்குநூல் அறிந்தோ மென்னில் ஈதோராச் சரிய மாமே.

4.28

உற்றெழு மரங்க ளாதி உயிரின்றிப் பூத ரூபம் பற்றியிப் பாரின் மீது பாங்கினாற் பலவு மாகிப் புற்றொடு மயிர்கொம் பாதி போலவே தோன்றி மாயும் மற்றுள யோனி கட்குப் பயனென வழங்கு மன்றே.

4.29

கொண்றிட லாகா தென்றும் கொன்றவை கொண்டு நாளும் தின்றிட லாகு மண்ணோ டொத்திடும் செத்த வெல்லாம ஒன்றிய வாச மூட்டி உண்ணுநீர் வைத்த வர்க்கோ சென்றுநின் றுண்ட வர்க்கோ புண்ணியம் செப்பி டாயே.

4.30

ஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பி னோடும் தாங்குபா வனைவிஞ் ஞானம் தாமிவை ஐந்துங் கூடிப் பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம் அங்கவை பொன்றக் கேடாய் அழிவது முத்தி யின்பம்.

4.31

அழித்திடும் அராக மாதி அகற்றிநல் லறங்கள் பூரித்(து) இழித்திடும் புலன்கள் போக்கி இன்பொடு துன்பம் வாட்டிப் பழித்திடாப் பழுதில் வாழ்க்கை எட்டையும் பாரித் தெல்லாம் ஒழித்திடு ஞான சீலம் சமாதியின் உறுதி யாமே.

4.32

சௌத்திராந்திகன் மத மறுதலை அனைத்தினையும் உணர்ந்தானெம் இறைவ னென்றிங் கறியாது புத்தநீ அறைந்தா யென்றும், அனைத்தினையும் அறிந்திடான் அளவி லாமை ஒன்றொன்றா அனைத்தினையும் அறிந்தா னென்னின், அனைத்தினையும் அளவிறந்த தென்ன வேண்டா அளவிலா ஞானத்தால் அறியின் ஞானம், அனைத்தினையும் அறியாது கணத்தில் தோன்றி அழிதலால் அறிந்த மையின் றாகு மன்றே.

4.33

சிலபொருளை அறிந்தவற்றின் திறத்தே யொட்டிச் சிந்திப்பன் எப்பொருளும் என்னிற் சென்று, பலபொருளாய் ஒன்றுபல பேத மாகிப் பயின்றுவரு மாதலாற் பார்க்கு மாறென், உலகுதனில் ஒருபொருளங் குணரும் போதின் உற்றுணர்தல் ஆராய்தல் தௌ¤த லுண்டாய், நிலவுமத னால் உணர்வு பன்மை முன்பின் நின்றிடா நின்பையெல்லாம் நினைப்ப தெங்கே.

4.34

முத்திநிலம் கண்டறங்கள் மொழிந்தா னாயின் முதல் முழுதும் பொன்றிப்பின் மொழிந்த வண்ணம், ஒத்திடுந்தேன் நெய்கூட்டி உண்டிறந்தோன் ஒருவன் உலகினில்வந் திதுதீதென் றுரைத்தால் ஒக்கும், செத்ததுபின் னென் றுரைக்கில் கதியில் செல்லாத் தேரனுரை நீர்பெருகிச் சென்றா றாகும், அத்தினள வறியாதிக் கரையோர் தம்மை யக்கரைக்கே செல்லவிடும் ஆசை யாமே.

4.35

நீர்போல நின்றுயிர்கட் களித்தி டாதே நெருப்பாய துயர்ப்பிறப்பின் நிகழ்ந்து நின்று, பாரோருக் களித்தபடி வலையிற் பட்ட பலகலைமான் கண்டொருநீள் கலைபாய்ந் தோடி நேரேசென் றவ்வலைக்கே நேர்ந்தா லொக்கும் நீள்பாவக் குழியில்விழு நீர்மை யாகும், ஆரோவிங் கவனொப்பார் அறத்தை யாக்கப் பிறந்தறமாக் கினனென்னில் அடங்க வாமே.

4.36

அலகிறந்த யோனிகளில் புகுந்த தெல்லாம் அறத்தை அளித் திடவென்னில் அவற்றி னெல்லாம், நிலவுவது கன்மத்தா லாகு மன்றி நினைந்ததோர் இச்சையினால் நிகழ்ந்தா னாகில், உலகுதனி லுள்ளோர்க்கும் அதுவே யாகும் ஒருத்தி வயிற் றினிலிருந்தங் குதரந் தள்ளித், தலமதில்வந் தானென்னில் தாயைக் கொன்றான் தருமத்தை யின்றெனக்குச் சாற்றி டேலே.

4.37

அரியினொடு நரிஉழுவை ஆதி யாக ஆனபோ தறந் திரிந்து கோற லாதி, பரிவினொடும் செய்தனனாம் இல்லை யாகிற் பசிதனக்குத் தின்பதவன் பழுதை யோதான், கருதிலவன் பரதுக்க துக்க னாகிற் கணவனிழந் தோர்கட்குங் கண்ணி குத்தித், திரியுமவர் துயரினுக்கும் இரங்கு வோன்றன் செயலறத்துக் கழகியதாஞ் செப்புங் காலே.

4.38

ஒருபொருளைத் தேடிஅதற் குரையுந் தேடி உரைப்பதன்முன் உணர்விறக்கும் உனக்கு நூலென், மருவிவருஞ் சந்தான வழியில் என்னில் வாயுரைத்த தேயுரைத்து வழங்குமாகும், பெருகுவது கெட்டென்னில் அதுபோ லாம்பின் பித்துரைத்த தறியாது பேதை சொல்லும், தருவது நூல் எப்பரிசு முதல்நடுவோ டிறுதி தான் விருத்த மின்றியது சாற்றி டாயே.

4.39

முன்னாகப் பலஅறங்கள் பூரித்தெம் இறைவன் முழு துணர்ந்திங் கருளினால் உயிர்கள் முத்தி அடையப், பின்னாகப் பிடகநூல் உரைத்தா னென்று பேசினாய் இவன்முன்பு பேரறங்கள் புரிநூல், சொன்னரார் இவனைப்போன் முன்னொருவன் என்னில் அவனுக்குச் சொன்னாரார் எனத்தொடர்ச்சியாகி, அன்னாய்பின் அனவத்தைப் படுமொருவன் இன்றாம் ஆரோஉன் பாழியிருப் பார்இதனை அறையே.

4.40

இந்நூலைச் சொன்னவன்தான் இங்கிருந்தா னென்னில் இவனிருத்தி யேத்துமவன் எங்கிருந்தா னெவனோ, அந்நூலோ குருவந்த அடைவுமுனக் கில்லை அடைவுதரின் முடிவின்கண் அநாதி போதன், சொன்னானாம் அவையேதா கமங்க ளாகுஞ் சுருக்கியூன் தவம்புரியச் சொல்லுவ தெல்லோரும், உன்நூல்கண் கழுவாதே உதிப்ப தன்முன் புலாலோ டுண்பானோர் ஊன்பிரிய னுரைத்ததொரு நூலோ.

4.41

முன்நூலும் வழிநூலும் சார்பு நூலும் மூன்றாகும். உலகத்து மொழிந்த நூல்கள், இந்நூலில் உன்நூலிங் கெந்நூ லென்னில் இந்நூல்கா ணென்நூலென் றியம்ப மாட்டாய், உன்நூலும் ஒருநூலாய் உரைப்ப தென்னே உலட்டுநூல் பருத்திநூல் சிலம்பி நூல்கள், அந்நூலு மல்லாதே பொய்ந் நூல் கொண்டிங் கறநோற்றுத் திரிந்தவா றழகி தாமே.

4.42

புத்தனவன் பொன்றக்கெட் டுப்போனா னென்று போற்றுவதிங் காரைநீ பொய்த்தவஞ்செய் புத்தா, செத்த வர்க்குச் சிலகிரியை செய்ய இங்குச் செய்தவர்க்கும் புண்ணியமா மென்று செப்பின், நித்தமுயி ராதலாற் பலிக்குஞ் செய்தி நினைந்துதரு வானுமுளன் உனக்கிவ்வா றில்லை, வைத்தசுடர்த் தீபமற மாய்ந்தக்கா லதற்கு மருவுதிரி நெய் கூட்டு மதிகேடுன் வழக்கே.

4.43

நூலுரைத்தான் ஒருவனுளன் என்றநுமா னத்தால் நூல்கொண்டிங் கறிந்தாற்போல் நூலா நூலின், பாலுரைத்த பொருள்களெல்லாம் அநுமான மென்னிற் பரலோக பாதாள லோகங்க ளொருசொல், லாலுரைத்த நூலின்றி அறையா யின்றேல் அவையறிந்த படியெனுன தநுமான மன்றே, மேலுரைக்கும் பிரமாண முனக்கில்லை காட்சி யநுமானம் விட்டபொருள் விளக்குவதா கமமே.

4.44

எப்பொருளும் அநித்தமென இயம்பிடுவை அநித்தம் இல்லதற்கோ உள்ளதற்கோ உளதிலதா னதற்கோ, செப்பி டின்இல் லதற்கில்ல தென்று மில்லை சென்றடைவ துள்ளதற்கேல் உள்ளதென்று முண்டாம், அப்படிதான் உளதிலதாம் அப்பொருளுக் கென்னில் உளதிலதா காதிலதும் உள்ள தாகா, திப்பொருளுக் கநித்தமிலை என்றொன்றைக் காட்டாய் எனில்தோன்றும் பொருள்நின்றிங் கிறுதி யாமே.

4.45

அங்குரம்வித் தின்கேட்டில் தோன்றுமது போல அனைத்துருவுங் கெட்டுவழி யாகு மென்னின், அங்கவற்றுக் காக்கக்கே டறைந்தா யெல்லாம். அநித்தமெனும் உரைமறந்தாய் அருகனுமா னாய்நீ, இங்குமுளை யிலைமரமாய் எழுந்தீண்டிச் செல்லா திறந்ததே எழுந்தபடி நில்லா தென்னின், மங்கியிடா தேபால தருணவிருத் தையாய் வரும்வடிவு திரிந்து நின்று மாயுங் காணே.

4.46

உடல்பூத மெனில்ஒன்றுக் கொன்றுபகை ஒன்றா வுதிரசுக் கிலமென்னின் மரத்தினுளுக் கல்லி, னிடமாகத் தவளையுரு வந்தவா றியம்பாய் இருவினைகா ணெனின்வினைக ளிரண் டுருவாய் நிற்கும், திடமாக வன்னமுரு வெனின்உண்ண வுண்ணச் சென்றுவள ருங்காயந் தேயமுணர் வென்னின், மடவோனே அருவுணர்விங் கசேதனமாய் உருவாய் வளராது வருமில்லா தெனின்மலர்வான் வருமே.

4.47

என்றுமிலா தொன்றின்றாய் வருமுருவம் வித்தின் எழுரம்போ லெனின்வித்தி னுண்டாய்நின் றெழுங்காண், நின்றதேல் வித்தின்மரங் கண்டதில்லை யென்னின் நெற்கமுகாய் நீளாது நெல்லாயே நீளும், ஒன்றிலொன்றங் கிலாமையினா லுதியாகா ரணம்பெற் றுதிப்பதுகா ரியமதுவ முன்னதாகும், மன்றமதிக் கலைபோலக் கந்த மைந்து மருவியுள தெனும்உரையும் மறந்தனையோ இன்றே.

4.48

உருவமெலாம் பூதவுபா தாய சுத்தாட் டகவுருவ மென்னின் நீ உலவத்துக்கு, மருவும்அன லோடுநீர் மண்கந்த மிரதம் வன்னம்இலை வன்னிக்கு வளிநீர்மண் வாசந், தருமிரத மிலைநீர்க்குத் தழல்கால்மண் கந்தந் தானில்லைத் தலத்தினுக்குச் சலமனல்கால் கூடி, வருவதிலை இந்திரிய விடயமான மாபூதங் களுமறியாய் மதிகெட்டாயே.

4.49

மருத்தெண்ணெய் தனின்மருந்து நின்றாற் போல மறைந்தெட்டும் சூக்குமமாய் மருவு மென்னில், திருத்துமவன் மருந்தெண்ணெய் சேர்த்தாற் போலச் சேர்ப்ப வன்வே றுண்டெல்லா வுருவும் எட்டும், பொருத்தியதே லொருதன்மை யாம்பொருள்க ளொன்றின் குணமொன்றிற் புகாதறைகை பொருளறியாய் பூத, உருப்பொருள்வே றுபாதாயப் பொருள்வேறு காட்டா யுபாதாயம் பூதகுணங் குண குணியா முலகே.

4.50

அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்அழிந்த தக்கா தாமுணர்விற் பொருள்வினைகள் அணையா வாகும், அழிந்திடுவ தாக்கியெனின் முன்னொருகா லத்தே அறிவிரண்டு நில்லாதங் கறக்கே டின்றி, அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்நித்தா நித்தம் அடையும்உணர் வுக்கநித்த மாயே செல்லா, தழிந்தெருவை ஆக்குவது போலாக்கு மென்னின் ஆம்பொருள்வே றழிந்துசத்தி கிடந்தாக்கும் அவையே.

4.51

கேடிலாச் சந்தானத் தேபலிக்கு மென்று கிளக்கும்நீ சந்தானம் நித்த மாகும், ஓடுநீர் போழிந்தா முணர்வொழுக்கை மென்னின் ஒழுகுநீ ரிட்டதெல்லா முடன்கழிதல் போலத் தேடுபொருள சீலம்பா வனைகுறிவிஞ் ஞானஞ் சென்றவுணர் வோடேகு நின்றுணர்வின் ஏயா, நீடுநீர் முன்னொழுகிக் கெடாதுநிறைந் தோடு நிகழுணர்வுங் கேடின்றி நிறைந்து செலுங் காணே.

4.52

சந்தானங் காரணமோ காரியமோ இரண்டின் தன்மை யதோ காரணமுங் காரியமும் நித்தம், வந்தாருஞ் சந்தானத் தொடர்ச்சியெனின் அதற்கும் வருநித்தந் தோற்றக்கே டடை தலின்மற் றொன்றேல், ஐந்தான கந்தங்க ளன்றாய் நித்தம் அடைபொருளாம் அறிவும்அறி வடைவு மின்றிச், சிந்தா முன் பின்னாகிப் பின்முன் னாகித் திரிந்துவருந் திரிவறிந்து தேரா தேரே.

4.53

ஒருகாலத் துணர்வுகெட்டா மெனின்உதிப்பீ றொன்றாம் ஒருபொருளின் திரிவுனக்குக் கால மானால், வருகால நிகழ் காலங் கழிகால மென்று வழங்குவதென் பொருள்வரவு நிலைகழிவால் இன்றேல், திரிகாலம் செப்பிடாய் பொருட் செயலு மொன்றாம் செயல்மூன்றும் ஒரகணத்தே சேரு மென்னில், தருகால மூன்றாகும் தாமரைநூ றிதழில் தள்ளூசி யுங்கால மூன்றினையந் தருமே.

4.54

உணர்வுகா ரணமுணர்வுக் கென்னின் நித்தம் உணர்வுக்குண் டாகிநின் றுணர்வையுதிப் பியாதிங், குணர்வுசந் தான விடத் தொழிந்தாற் பின்னை யுண்டாகா துடலுணர்வுக் குபாதாக மென்னின், உணர்வுடலின் இடையறா துதிக்க வேண்டும் உடலுணர்வின் வினையினால் உணர்வுதிக்கு மென்னில், உணர்வுவினை யுளதொடுங்கா துணர்வுதருஞ் செய்தி உணர்வைவினை தரினொருவன் செயல்வினையின் றாமே.

4.55

வினையுணர்வு தரும்வினையை உணர்வுதரு மென்றும் விளம்பின்நீ உணர்வுபோல் வினையி னுக்கு, நினைவுவரும் ஒன் றையொன்று நிகழ்த்தி டாபின் நிலையின்மை யானிகழ்த்திக் கெடுதல் செய்யா, கனல்விறகில் பிறந்ததனைப் பொடிசெய் தாற்போல் கருத்துவினை யிற்றோன்றிக் கழிக்கும்வினை யென்னின், முனமுணர்வு பிறந்தளவே வினைகெடுக்கும் முன்பின் உதியாது முகிழ்நெருப்பின் விறகுதியா வாறே.

4.56

பேயுநர கரும்சரரும் பிரமருமாய் உலகிற் பிதாமாதா ஆதார மொன்று மின்றிக், காயமொடு தாம்வருவர் என்றுரைப்பை காயங் காரியமாய் வருதலினால் காரணமுண் டாகும், ஆயுமுணர் வோசுத்த அட்டகமோ கன்மம் வடித் ததோ வடிவுசெய்து வைத்தாரும் உண்டோ, ஆயுமுணர் வுண்டாகில் அறைந்திடாய் உலகுக் காதிதுணை நிமித்தகா ரணமறிவ தறிவே.

4.57

உருவாகி கந்தங்கள் ஐந்துங் கூடி ஒருவன்வே றொருவனிலை யென்றுரைக்கும் புத்தா, உருவாதி ஐந்தினையும் உணர்பவன்வே றென்ன உணரும்விஞ் ஞானமென்றாய் அஞ்ஞானம் உணர்ந்தவரார், உருவாதி பொருள்காட்டித் தனைக் காட்டும் சுடர்போல் உணர்வுபிறி தினையுணர்த்தித் தனை யுணர்த்து மென்னின், உருவாதி பொருளினையும் சுடரினையும் காணும் உலோசனம்போல் உணர்வுபொருள் உணர்வதுவே றுண்டே.

4.58

காயமுடன் இந்தியம் மனம்நான் என்று கதறுவாய் காயம்உறக் கத்தறியா வாகும், வாயில்களும் அப்படியி லொன்றையொன்றங் கறியா மனங்கணத்திற் கெடுங்கால மூன்றின்வர வறியா(து), ஆயுமறி வாகியுடல் பொறிமனமூன் றறிந்தாங் கவைநானல் லேனென்றும் அறிந்துமனத் தாலே, ஏயுமொரு பொருள்கருதி இந்திரியப் பாலே இசைவித்துக் காயத்தால் இயற்றுவதான் மாவே.

4.59

கழிந்தஉணர் வேபின்னும் யானறிந்தே னென்று கருதலினவ் வுணர்வறிந்த தென்னின் முன்னே, மொழிந்த மொழி நான்மொழிந்தே னென்றால் வாய்தான் மொழிந்ததோ மொழிந்தவன்வே றானாற் போல, எழுந்தவுணர் வெல்லாங்கொண் டியானறிந்தே னென்ற தெதுஅதுகாண் உயிருணர்வால் வாக்கால் மற்றை, ஒழிந்தகா யந்தன்னால் உணர்ந்துரைத்துச் செய்தங் குணர்வினுக்கும் ஆதார மாய் நிற்கும் உயிரே.

4.60

இந்திரிய வீதிஎழுஞ் சித்தம் நெஞ்சத் தெழுஞ்சித்த மென்றிரண்டு மொன்றுகெட்டே யொன்று, வந்தெழுவ தெனில்கனவில் கண்டபடி நனவின் வாய்திறவார் நனவு கண்ட படிகனவிற் காணார், அந்தனுரு வன்னங்க ளறிந்திடா னின்றேல் அறிகனவும் இறந்துணர்வும் அழிந்துறக்கம் அடைந்தால், உந்துவதோர் சந்தான மில்லையுணர் வுதிப்ப உயிர்கனவு நனவினையும் உணருங் காணே.

4.61

ஒருகாலத் தோரிடத்தில் ஒருணர்வேல் செவிதான் ஒன்றுணரா திருசெவியும் உணரும் ஓசை, ஒருகாலத் திரு கண்ணும் இருசெவியும் மனமும் ஒருவனைக்கண் டவனுரை கேட் டுணர்ந்திடுமைம் பொறியும், ஒருகாலும் உணராவுள் உணர்வின்றிப் பொறிகள் ஒன்றொன்றா வுணர்வதுள் ளுணர் வைந்தும் உணரா, ஒருகாலும் பொறிவிகற்பித் துணராவுள் ளுணர்வுக் குள்ளதுகாண் விகற்பமிரண் டும்முணர்வ துயிரே.

4.62

அருஉணர்வு மாய்ஆறும் மாறி மாறி அங்கங்கே தோன்றியிடின் அகத்துநிலை யின்றி, உருவினொடு பாலதரு ணவ்ருத்தா வத்தை உண்டாகா துறக்கத்தின் உடல் தட்ட அழைப்ப, வருவதுணர் வெங்கிருந்து நெஞ்சிலிருந் தென்னில் வாயில்வினை யறிந்தெழுப்ப ஆயுஅறி யாதாம், திரியொழிய இடிஞ்சில்தொடத் தீபமெழா அடக்கஞ் சென்ற பொழு தாலுணர்வு நின்றநிலை செப்பே.

4.63

இச்சைவெறுப் பியற்றலின்பத் துன்பம் ஞானம் இவை யணவின் குறியாகும் இவற்றில் இச்சை, நச்சிநுகர்ந் தொரு பழத்தின் இனங்கண்டு முன்பு நான்நுகர்ந்த கனியினின மென்று நச்சல் பின்பு, மெச்சவெறுப் பாதிகளும் இப்படியே யாகும் இவைமுன்பும் பின்புமுணர்ந் திடுத லாலே, நிச்சய கர்த் தாஒருவ னுளனென்று நல்லோர் நிறுத்திடுவர் வெறுத்திடுவர் நின்னுடைய பொருளே.

4.64

எப்பொருட்டும் இரந்தரமாய் இடங்கொடுத்து நீங்கா திருளொளிதா னன்றிஇரண் டினுக்குமிட வகையாய், ஒப் பில்குணஞ் சத்தமதாய் வாயுவாதி உதித்தொடுங்க நிற்கும்வா னுயிர்முன்னே கொன்னோம், செப்பிடுங்கா லம்பொழுது நாளாதி யாகித் திரிவிதமாய்த் தீமைநன்மை செய்யுந் திக்குத், தப்பில்குணக் குக்குடக்குத் தெற்குவடக் காதி தானாகித் திரியாதே நின்றுபலந் தருமே.

4.65

காரியமாய் உலகெலாம் இருத்த லாலே கடாதிகள்போல் காரியகர்த் தாவொருவன் வேண்டும், ஆரியமாய் அறம் பொருளோ டின்பவீ டெல்லாம் அறைந்துயிர்கட் கறிவுசெயல் அளிப்பதுநூல் அந்நூல், கூரியராய் உள்ளவர்கள் ஓதஓதிக் கொண்டுவர லான்முன்னே குற்ற மின்றிச், சீரியபே ரறிவுடையோன் செப்ப வேண்டும் செயலினுக்குங் கரிவேண்டுஞ் சிவனுளனென் றறியே.

4.66

மரங்களுயி ரல்லவென்று மறுத்துச் சொன்னாய் வாடுதல்பூ ரித்தலால் மரங்களுயி ராகும், திரங்குநீர் பெறாதொ ழியிற் பெறிற்சிரத்தை சேரும் சீவனல எனினுலகில் சீவ னெல்லாம், உரங்கொள்வ தூண்பெறிற் சோரும் ஊன்பெரு றாவேல் உலர்ந்தமர நீர்பெற்றா லுய்யாதுள் ளுயிர்கள், கரத்சினை முட்டைகட்கு வாயிலின்று வாயில் கண்டிலதேற் பூத்துக்காய்த் தெழல்மரங்கள் உயிரே.

4.67

ஒருமரத்தின் உயிரொன்றேல் கொம்பொசித்து நட்டால் உய்யுமுயிர் முன்றுபல வாமோ வென்னில், கருமரத்தின் வித்துவேர் கொம்புகொடி கிழங்கு கண்கலந்து கொள்ளு முயிர் அண்டம் வேர்ப்புத், தருபிறப்புச் சராயுசங்கள் சநந மும்பெற் றாற்போல் தானடையும் உற்பிச்சம் தலநடவா வென்னில், பெருநிலத்தில் காலிலார் நடப்பரோ பேதாய் பிறப்பின்விதம் அநேகங்காண் பேசுங் காலே.

4.68

தின்னுமது குற்றமிலை செத்ததெனும் புத்தா தின்பை யெனக் கொன்றுனக்குத் தீற்றினர்க்குப் பாவம், மன்னுவதுன் காரணத்தால் தின்னா தார்க்கு வதைத்தொன்றை இடாமையினால் வதைத்தவர்க்கே பாவம், என்னிலுனை யூட்டினர்க்குப் பாவஞ் சேர என்னதவம் புரிகின்றாய் புலால்கடவுட் கிடாயோ, உன்னுடலம் அசுசியென நாணி வேறோர் உடலுண்ணில் அசுசியென உணர்ந்திலைகாண் நீயே.

4.69

குடைநிழலும் கண்ணாடிச் சாயையும்போல் பிறப்புக் கொள்ளும்உணர் வென்னல்கா ரணமழிய அழியும், அடை நிழல்போல் கந்தமைந்தும் அழியுமுனக் கிங்கே அவையழிந்தால் அருங்கதியின் அணையுமுணர் வின்றாம், இடைகனவில் எழுமுணர்வு நனவுணர்வா னாற்போல் எழுமுணர்வு கன்மத்தால் நினைந்துகதி யென்னில், மிடைசினையும் அந்தனுமுட் டையுமுயிர்விட் டக்கான் மேவுவதென் பிறப்பினுடல் விடாது கன்ம வுணர்வே.

4.70

ஐந்துகந்தம் சந்தானத் தழிதல்பந்த துக்கம் அறக் கெடுகை முத்தியின்பம் என்றறைந்தாய் கந்தம், ஐந்துமழிந்தால்முத்தி அணைபவர்யா ரென்ன அணைபவர்வே றில்லை யென்றாய் ஆர்க்குமுத்தி யின்பம், ஐந்திலுணர் வினுக்கென்னில் அழியாத உணர்வுண் டாகவே அவ்விடத்தும் உருவாதி கந்தம், ஐந்துமுள வாமதுவும் பந்த மாகி அரந்தை தரும் முத்தியின்பம் அறிந்திலைகாண் நீயே.

4.71

அநாதிமுத்த னாய்ப்பரனாய் அசலனா யெல்லா அறிவு தொழில் அநுக்கிரக முடையஅரன் கன்மம், நுனாதிகமற் றொத்தவிடத் தேசத்தி நிபாத நுழைவித்து மலங்களெல்லாம் நுங்க நோக்கி, மனாதிகர ணங்களெல்லாம் அடக்கித் தன்னை வழிபடுநல் லறிவருளி மாக்கருணைக் கையால், இனாத பிறப் பினில்நின்று மெடுத்து மாறா இன்ப முத்திக் கேவைப்பன் எங்கள்முத்தி யிதுவே.