Books / Sivagnana Siddhiyar

9. பரபக்கம் — 7. ஆசீவகன் மதம்

9.1

என்உயி ரதற்குப் போல எவர்க்கும்ஒத் திருப்பன் என்று தன்னுயிர் வருந்தத் தானும் தலையினைப் பறித்துப் பார்மேல் மன்உயிர் எவற்றி னுக்கும் வருந்தவே அறங்கள் சொல்லும் அன்னதோர் வாய்மை ஆசீ வகன்அம ணர்களிற் கூறும்.

9.2

வரம்பிலா அறிவன் ஆதி வைத்தநூற் பொருள்கள் தாமும் நிரம்பவே அணுக்கள் ஐந்து நிலம்புனல் தீகால் சீவன் பரந்திவை நின்ற பான்மை பாரது கடினம் சீதம் தரும்புனல் சுடும்தீ வாயுச் சலித்திடும் உயிர்போதத் தாம்.

9.3

பார்புனல் பரக்கும் கீழ்மேல் படர்ந்திடும் தேயு வாயுச் சேர்வது விலங்கின் உள்ளம் அவற்றொடும் சேரும் வேறு சார்வது பெற்ற போது சார்ந்தஅப் பொருளின் தன்மை நேர்வது மாகி நிற்கும் இதுபொருள் நிகழ்த்து மாறே.

9.4

உணர்தரா அணுக்கள் நான்கும் ஒன்றுகெட் டொன்ற தாகர புணர்தரா ஒன்றில் புக்கொன் றாயினும் பொருந்தி வாழும் அணைதரா புதிய வந்திங் கழிதரா பழைய வான இணைதரா ஒன்றொன் றாகி மாறுதல் ஒன்றும் இன்றே.

9.5

கொண்டுமுன் விரித்தல் நீட்டல் குறுக்குதல் குவித்தல் ஊன்றல், உண்டுதின் றுலர்த்தல் மீட்டல் உடைத்திடல் ஒன்றும் ஒண்ணா, விண்டுபின் புறம்பும் போகும் வேறுநின் றுள்ளு மேவும், பண்டுமின் றென்றும் எங்கும் பரந்தொரு தன்மைப் பாலே.

9.6

கண்ணினில் காண வொண்ணா சனித்தந்தக் கன்மத் தாலே நண்ணிடும் உருக்க ளாகி நின்றபின் நரரோ காண்பார் விண்ணினில் தேவர் காண்பர் ஓரணு மிக்க நான்காய் எண்ணிய பொருள்க ளெல்லாம் இசைவதென் றியம்புமின்னே.

9.7

ஒன்றினை ஒருவி மூன்றங் குற்றிடா திரண்டு விட்டு நின்றிடா திரண்டு கூடும் நெறிநிலம் நான்கு நீர்மூன்(று) இன்றிரண் டழல்கா லொன்றாய் இசைந்திடும் பூமி யிவ்வா றென்றுநீர் தீகா லாகி ஈண்டுவ தென்றி யம்பும்.

9.8

வெண்மைநன் பொன்மை செம்மை நீல்கழி வெண்மை பச்சை உண்மையிவ் வாறின் உள்ளும் கழிவெண்மை ஓங்கு வீட்டின் வண்மைய தாகச் சேரும் மற்றவை உருவம் பற்றி உண்மையவ் வொட்டுத்தீட்டுக் கலப்பினில் உணரும் என்றான்.

9.9

பேறிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும் வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு மூப்புச் சாதல் கூறிய எட்டும் முன்னே கருவினுட் கொண்ட தாகும் தேறி ஊழிற் பட்டுச் செல்வதிவ் வுலகம் என்றான்.

9.10

புண்ணிய பாவம் என்னும் இரண்டணுப் பொருந்த வைத்தே எண்ணிய இவற்றி னோடும் ஏழென எங்க ளோடு நண்ணிய ஒருவன் கூறும் ஞானமிவ் வாற தென்று கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்பர் என்றான்.

9.11

ஆசீவகன் மத மறுதலை வாராநெறி வீடானயின் மண்மேல் அவன் வந்து தாராமையின் நூலானது தானோஉள தின்றாம் சேராமையில் அணுவானவை ஐந்தும்ஒரு தேயத்(து) ஓரானொரு காலத்தினில் ஒன்றாமுணர் வின்றாம்.

9.12

இருபான்மையர் இவர்மண்டலர் செம்போதகர் என்றே வருபான்மையர் இவர்மண்டலர் மண்மேல்வரு நூலும் தருபான்மையர் எனின்நீதல மதில்வாழ்பவர் தம்போல் ஒருபான்மையின் உளராகுவர் உணராதுரை செய்தாய்.

9.13

உயிரானவை உடல்தீண்டிடல் ஒட்டுக்கலப் பெய்தும் பயில்வால்உணர் வெய்தும்மெனும் மொழியானவை பழுதாம் துயிலார்தரு மவர்பாலகர் தொடரார்அறி வினைநீ செயிரார்தரும் உரையேதரும் அதுவோஉன செயலே.

9.14

அணுவானவை கீழ்மேல்உள வானால்அவ யவமும் நணுகாவென லாமேவரின் நாசம்அவை யெய்தும் அணுகாவெனின் இறைதொள்ளைகொள் ஆகம்முள வாகும் துணிவாலிவை கலவாபல தொகையாம்வகை இலவாம்.

9.15

மிகையாம்அணு உளவாகையின் அவையாம்மிக வென்னில் தொகைநாலிடை அறலால்அவை தொகுமாறில வாகும் பகையாகையின் மிசைதாழ்மையின் நிலையாவகை பண்ணும் நகையாம்உரை கழியாயிரம் அவைதூணென நண்ணா.

9.16

கூடாஅணு அறியாமையின் வளிகூட்டுதல் கூறின் நாடாவளி அணுவானவை நணுகச்செயும் அவரை நீடாவினை தன்னாலெனின் நினைவின்றது இன்றாம் தேடாயொரு வனைநீஇவை செய்வானுள னென்றே.