Books / Thirumurai 4

82. 4.82 திருக்கழுமலம் - திருவிருத்தம்

4.82.1

பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட
ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின
என்பர் நளிர்மதியங்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித்
தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்றுமுண் டோ அந்த
ணாழி அகலிடமே.

4.82.1

4.82.2

கடையார் கொடிநெடு மாடங்க
ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ்
சூடி உகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன்
வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க
நாடொறும் ஆடுவரே.

4.82.2

4.82.3

திரைவாய்ப் பெருங்கடல் முத்தங்
குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடிக்
கழுமலத் துள்ளழுந்தும்
விரைவாய் நறுமலர் சூடிய
விண்ணவன் றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாடொறும்
நந்தமை யாள்வனவே.

4.82.3

4.82.4

விரிக்கும் அரும்பதம் வேதங்க
ளோதும் விழுமியநூல்
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்
கேட்கில் உலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள்
பாடக் கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங்
கழல்நம்மை ஆள்வனவே.

4.82.4

4.82.5

சிந்தித் தெழுமன மேநினை
யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்க
வல்லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென்
றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாடொறும்
நந்தம்மை ஆள்வனவே.

4.82.5

4.82.6

நிலையும் பெருமையும் நீதியுஞ்
சால அழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று
மிதந்தவித் தோணிபுரஞ்
சிலையில் திரிபுரம் மூன்றெரித்
தார்தங் கழுமலவர்
அலருங் கழலடி நாடொறும்
நந்தமை ஆள்வனவே.

4.82.6

4.82.7

முற்றிக் கிடந்துமுந் நீரின்
மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு
கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந்
துன்றிவெண் திங்கள்சூடுங்
கற்றைச் சடைமுடி யார்க்கிட
மாய கழுமலமே.

4.82.7

4.82.8

உடலும் உயிரும் ஒருவழிச்
செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனைவந் தடைந்தார்
அமரர் அடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறும்
மல்கும் கழுமலத்துள்
விடையன் தனிப்பதம் நாடொறும்
நந்தமை ஆள்வனவே.

4.82.8

4.82.9

பரவைக் கடல்நஞ்ச முண்டது
மில்லையிப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு
கின்றது நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார்
கழலடி காண்பதற்கே
அரவக் கழலடி நாடொறும்
நந்தமை ஆள்வனவே.

4.82.9

4.82.10

கரையார் கடல்சூழ் இலங்கையர்
கோன்றன் முடிசிதறத்
தொலையா மலரடி ஊன்றலும்
உள்ளம் விதிர்விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன்
கழுமலங் காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாடொறும்
நந்தமை ஆள்வனவே.

4.82.10

4.82 — note

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பிரமபுரீசர், தேவியார் - திருநிலைநாயகி. திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.